Saturday, May 26, 2012

பீர் குடிக்க ஆசையா?!

பெட்ரோல் விலை உயர்வுக்குப் பின்பெட்ரோலும் பீரும் ஒரே விலை என்று யாரோ சொன்னார்கள்!

எங்காவது செல்ல வேண்டுமா?
உங்கள் முன் இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன!


                                    நீங்கள் ஒரு பாட்டில் பீர் குடித்து விட்டு நடந்து செல்லலாம்!


   அல்லது--------------உங்கள் வண்டிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் குடிக்கக்  கொடுத்து                           விட்டு வண்டியில் செல்லலாம்!


  அதனால்தான் சொல்கிறார்கள்!
    குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள் என்று!!

Friday, May 25, 2012

ஒரு வரலாறு (தொடர்)--ராஜியின் மேற்படிப்பு

“ஏண்டி,ராஜி !வெளியூருக்குப் போய் படிக்கப் போறயாமே?   எங்களையெல்லாம் விட்டுட்டுப் போகப் போறியாடி?”ராஜியின் தோழி கேட்டாள்.


“ஆமாண்டி,ராதா.இனிமே இந்த ஊரிலே பசங்களோட சேர்ந்து படிக்க வேண்டான்னு அப்பா சொல்லிட்டா. வெளியூர்ல கர்ள்ஸ் ஸ்கூல்ல படிக்கலாம்னு சொல்லிட்டா”   -ராஜி

“எந்த ஊருக்குடீ போகப்போறே.”

“ரெண்டு எடம் சொல்லியிருக்கா.ஒண்ணு கடலூர்; இன்னொண்ணு மெட்ராஸ்”

“நீதான் படிப்பிலே கெட்டிக்காரியாச்சே.போயி பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளா வாடி”

இதுதான் அவள் தான் பிறந்து 13 வயது வரை வளர்ந்து , மூன்றாம் படிவம் வரை (8ஆம் வகுப்பு) படித்து முடித்த அந்த சாத்தூர் மண்ணை விட்டுத் தொலை தூரமான மதராசுக்கு வர நேர்ந்த காரணம்.

அவள் மூன்றாம் படிவம் படித்துத் தேறியபோது அவளுக்கு வயது 13.உயர் நிலைப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராக இருந்த அவளது தந்தை தன் பெண்ணுக்கும் உயர் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆசைப் பட்டார்.படித்து முடித்த வரை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஓரிரு பெண்களில் அவளும் ஒருத்தி.ஆனால் இப்போது பெரியவளாகும் நேரம் வந்து விட்டது.பையன்களுடன் சேர்ந்து படிக்க வைக்க முடியாது.

சாத்தூரிலோ,பெண்கள் உயர்நிலைப்பள்ளி கிடையாது. அவளது தந்தைக்குத் தெரிந்து,சென்னை மாகாணத்தில் இரு நல்ல பெண்கள் உயர் நிலைப்பள்ளிகள் இருந்தன. ஒன்று கடலூர் NT என்று அழைக்கப்பட்ட திருப்பாப் புலியூரில்  (திருப்பாதிரிப்புலியூர்). மற்றது மதராஸ் மைலாப்பூரில் இருந்த நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.(இப்போது லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)


ஒரு நல்ல நாளில் அவள் தன் அம்மா மற்றும் அத்தை யுடன்  கடலூர் புறப்பட்டாள். அத்திம்பேர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில்,ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.கடலூரில் பள்ளியில் இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே ஒரு வீடும் பார்த்து ஏற்பாடு செய்து விட்டார்கள்,அவளும் அவள் அம்மாவும் தங்குவதற்கு.

அவர்கள் கடலூரை அடைந்தனார்.வேறு பள்ளியிலிருந்து வருவதால் அவளுக்கு ஒரு தகுதித்தேர்வு வைத்தனர் அப்பள்ளியில்.எட்டு வரை தமிழ் மீடியத்திலே படித்த அவளால் அந்த ஆங்கில மீடியப் பள்ளியின் தேர்வில் நன்றாக எழுத முடியவில்லை. முடிவு—அவளை மூன்றாம் படிவத்துக்கே எடுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லி விட்டனர். ஏமாற்றம்தான்.

அவள் தந்தைக்குச் செய்தி போயிற்று.அவர் தன் தம்பியிடம் ரூ.200/= பணம் கொடுத்து மெட்ராஸ் சென்று மைலாப்பூர் பள்ளியில் முயற்சி செய்யச் சொன்னார். அவரும் மெட்ராஸ் சென்றார்.பள்ளியின் முதல்வரை-ஒரு ஆங்கிலேயப் பெண்மணி- பார்த்தார்.பழைய பள்ளியின் T.C யைக் காட்டினார்.எந்தவிதமான மறுப்பும் இன்றி, ராஜியைப் பார்க்காமலே அவளுக்கு நான்காம் படிவத்தில் இடம் தரப் பட்டது.


அவள் சித்தப்பா,பள்ளியில் ஒரு டெர்ம் சம்பளம் கட்டினார். மைலாப்பூர் அப்ரஹாம் முதலித் தெருவிலே, பள்ளிக்கு மிக அருகிலே ஒரு வீடு பிடித்தார்.அவளுக்காக ஒரு சிறிய புத்தக அலமாரி,ஒரு நாற்காலி எல்லாம் வாங்கிப் போட்டார்.எல்லாம் ரூ.200/க்குள்! கடலூருக்குத் தகவல் சென்றது.

இதோ ராஜி மெட்ராஸ் புறப்படப் போகிறாள்.

(தொடரும்)

Thursday, May 24, 2012

பாம்பும் நானும்-ஒரு தேடல்!


என்னுள் ஒரு தேடல்
எப்போதும் நிகழ்கிறது!
கைக்குழந்தையாய்த்
தாயின் மார் தேடல்
நடக்கும் பருவத்தில்
தாயின் மடி தேடல்
கல்லூரி மாணவனாய்
கலர் தேடல்
படித்து முடித்த பின்
வேலை தேடல்
தொடர்ந்த காலத்தில்
மனைவி தேடல்
வயது ஏறும்போது
பணம் தேடல்
வயதானபின்
அமைதி தேடல்.
இதெல்லாம் வெளித்தேடல்

எனக்குள்ளே ஒரு தேடல்
எப்போதும் நிகழ்கிறது!

கீரிகள் ஐந்தடக்கி
பார்வையை உட்குவித்து
கீழ்நோக்கிப் பார்க்கையிலே
படுத்திருக்கும் பாம்பொன்று
படமெடுத்து எழுகிறது!

பார்வையின் உஷ்ணத்தில்
பாம்பு மேலேறுகையில்
கீரிகள் கட்டவிழ்க்க
பார்வை கலைந்து விட
பாம்பு றங்கப்  போகிறது!

என்று முடியும் என் தேடல்?
என்று பாம்பு ஆறடி கடந்து
தாமரை மலரடையும்?

அன்று முடியுமா என்தேடல்?!

டிஸ்கி:கவிதையின் முதல் பாதி நான் எழுதியது,பின் பாதி “நமக்குத் தொழில் பேச்சு” பதிவின் உரிமையாளர் மதுரை சொக்கன் எழுதியது! ஹி,ஹி!!


Wednesday, May 23, 2012

மணவாழ்வின் இன்பங்கள்!


என்னடி காலங்கார்த்தால ஒரு ஓரமா நின்னுண்டிருக்கே?”

”மூணு நாள் எனக்கு ரெஸ்ட்டுன்னா.சமையலறை உங்க ராஜ்யம்தான்”

“ஏண்டி எனக்கு ஒரு எழவும் தெரியாதேடி.தோ பாரு.நான் ஓட்டல்ல சாப்பிட்டுட்டு,உனக்கும் ஏதாவது வாங்கிக் குடுத்துடறேன்.”

”வேண்டான்னா.வயத்துக்கும் ஒத்துக்காது.பர்ஸுக்கும் ஒத்துக்காது”

“அப்போ நீயே சமையல் பண்ணிடு பரவாயில்ல.”

“ஐயோ!மகா பாவம்னா.எங்காத்துலெல்லாம் அந்த வழக்கமே கிடையாது. பாருங்கோ!நான் சொல்லித்தரேன் .நீங்களே பண்ணிடுங்கோ.போய் மொதல்ல பல் தேய்ச்சிட்டு வாங்கோ.””

“எனக்கு அடுப்பே பத்த வைக்கத் தெரியாதேடி!”

”ஆமா!என்ன பெரிய வெறகடுப்பா இல்லை கரியடுப்பா? கேஸ் அடுப்புதானே. குமிழைத்திருகினா தானே வேற பத்திக்கும்”

”சரி நான் ரெடி.என்ன செய்யணும் சொல்லு.”

ஒரு வழியாக இன்ஸ்டண்ட் காஃபி தயாரித்து குடித்து முடிக்கிறார்கள்.

“ சிரமப்பட வேண்டாம்னா.குக்கர்ல சாதம் மட்டும்  பண்ணிடுங்கோ.பருப்புப் பொடி இருக்கு. தயிர் இருக்கு நன்னாச் சாப்பிடலாம்”

”சரி சொல்லு”

”அந்தச் சின்ன டம்ளர்ல 2 டம்ளர் அரிசி எடுத்துப் பாத்திரத்தில போட்டுக் களைஞ்சுடுங்கோ."

”சரி’

”அடுப்பில குக்கர வைச்சு,அரிசில ஒண்ணுக்கு மூணு தண்ணி விட்டு குக்கர்ல வச்சு மூடில கேஸ்கட்டைப் போட்டு மூடிடுங்கோ”

”ஆச்சு”

"இப்போ நீராவி நன்னா வெளியே வந்தப்பறம் வெயிட்டைப் போடுங்கோ”

...........

“என்னடி!பத்து நிமிஷமாச்சு,ஸ்டீமே வரல்லையே.”

” அடக் கடவுளே!குக்கர்ல தண்ணி விட்டேளா ?”

“நீ சொல்லவே இல்லையே!”

திறந்து காய்ந்து போன குக்கரில் சுர்ரென்று தண்ணீர் விட்டு மூடிஒரு வழியாய் விசில் சப்தக் கணக்குக்குப் பின்,அடுப்பு அணைக்கப் படுகிறது.

“போய் வேற வேலையைப் பாருங்கோ.இருபது நிமிஷம் கழிச்சுத் திறக்கலாம்”

திறந்து பார்க்கும்போது அதிர்ச்சி.

“என்னடி ?சாதம் இப்படி இருக்கு?!”

”ஐயய்யோ!எவ்வளவு தண்ணி விட்டேள்?”

”நீதான் சொன்னயே,மூணு டம்ளர்”

”கஷ்டம்!ஒண்ணுக்கு மூணு சொன்னேன்.ரெண்டு டம்ளர் அரிசிக்கு ஆறு டம்ளர் தண்னி விடணும்.மறுபடியும் தண்னி விட்டு குக்கர்ல வையுங்கோ.எப்படி வரதோ சாப்பிட்டுக்கலாம்.”

சாதம் ஒரு மாதிரித் தயாராகி.அவனும் சாப்பிட்டு அவளுக்கும் வைத்து விட்டு அலுவலகம் புறப்படுகிறான்.


“ஏன்னா!வரும்போது ஒரு பாக்கெட் தாயார் இட்லி மாவு வாங்கிண்டு வந்துடுங்கோ.ராத்திரி இட்லி வார்த்துடலாம் .ரொம்ப ஈசி.”

இது வேறயா! (மனசுக்குள்)

மாலை!

மணி அடிக்க அவள் வந்து கதவைத் திறக்கும்போதே கேட்கிறாள்”தாயாரோடு வந்தேளா?’

வெளியே பார்க்கிறாள்.அவனுக்குப் பின் அவள் அம்மா நிற்கிறாள்!

“நீ சொன்ன படியே தாயாரோடு வந்துட்டேன்.ஃபோன் பண்ணினேன்.30 கி.மீதானே வந்துட்டா!இனிமே எங்கம்மா  தில்லிலேருந்து வர வரைக்கும் ஒவ்வொரு மாசமும் உங்கம்மா வர வேண்டியதுதான்”

வெட்கப்பட்டபடியே அவள் அம்மா சொல்கிறாள்”அதுக்கு அவசியமே இல்லாமப் பண்ணிடுங்கோ மாப்பிள்ளே!”

Tuesday, May 22, 2012

விசாலினியின் புத்தியும்,வலைப்பதிவின் சக்தியும்! ---வரலாறு காணாத சென்னை யூத் பதிவர் சந்திப்பு..

                               சத்யம் டி.வி. யினர்  விசாலினியை பேட்டி காண்கின்றனர்

சந்திப்பின் மற்றொரு முக்கிய நிகழ்வு  சாதனைச் சிறுமி விசாலினிக்குப் பாராட்டு.விசாலினி பற்றிப் புதிதாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?அவள் நுண்ணறிவுத்திறன் ஈவு 225 என்பதும்,அவள் தேர்ச்சி பெற்றிருக்கும் தேர்வுகளும் எல்லாம் நீங்கள் அறிந்ததே.


 அவள் தாயார் அன்று சொன்ன ஒரு செய்தி.ஆபீசர் சங்கரலிங்கம் அவளைப் பற்றித் தன் பதிவில் எழுதிய பின்தான் அவள் உலகம் முழுவதும் அறியப்பட்டவளானாள்.இப்போது தினம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகின்றன--அவளுக்கு அழைப்பு விடுத்து,அவளைப் போதிக்கச் சொல்லி எனப் பல்வேறு விதமாக. அத்தகைய அஞ்சல்களையெல்லாம் அச்சிட்டு த் தொகுத்து வைக்கிறார்கள் விசாலினியின் தாய்.ஒரே ஒரு மாதத்தின் தொகுப்பு மட்டும் கொண்டு வந்திருந்தார்கள்.

                                                       விசாலினியும் ,தாயாரும்

(விசாலினிக்குப் பதிவர்கள் சார்பில் பரிசு வழங்கியவர்கள் புலவர் ஐயா அவர்களும் நானும்.எனவே அந்தப் படம் என்னிடம் இல்லை!)

வலைப்பதிவின் மகத்தான சக்தி இப்போது புரிகிறதா.எனவே நம்மால் ஆக்கமுடியும் என்பதை உணர்ந்து ஆக்க பூர்வமான பதிவுகள் வெளியிடமுயல வேண்டும்.

விசாலினியுடன் ஒரு கேள்வி- பதில் நேரமும் இருந்தது.

நேற்று விசாலினிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு.அதன் பலனாக அவளைப் பற்றி இந்த நாடு முழுவதும் அறிந்து,நமது நடுவண் அரசும் அவளை ”இந்தியாவின் பெருமை(Pride of India) என்று அழைத்துக் கௌரவப்படுத்தவேண்டும்.அவள் மேன்மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்.இதுவே நம் அனைவரின் விருப்பம்.வாழ்த்துகிறோம் அவளை.

நாம் சந்தித்தோம்,அறிமுகம் செய்து கொண்டோம்,அளவளாவினோம்,தேநீர் அருந்தினோம்.இது எப்போதும் நடப்பது.இம்முறை நாம் கூடி இரு சாதனையாளர்களுக்கு மரியாதை செய்தோம்.நம்மில் ஒருவரை,அவர் சமூகப் பணிக்காகச் சென்ற ஆண்டின் பதிவராகத் தேர்வு செய்தோம் என்ற இவைதாம் அந்தச் சந்திப்புக்குப்  பெருமை சேர்க்கின்றன.

இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி முடித்த அனைவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள்

மேலும் சில படங்கள்-












அடுத்த சந்திப்புக்காகக் காத்திருக்கிறேன்!

டிஸ்கி:-  ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
                செய்ந்நன்றி கொன்ற  மகற்கு”

  சந்திப்பு நடத்த இடம் கொடுத்து உதவியதோடு,வந்திருந்த அனைவருக்கும் ஜெ.மோ.வின்” யானை டாக்டர்” புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கிய  டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் திரு .வேடியப்பன் அவர்களுக்கு  தமிழ்ப்பதிவுலகம் சார்பில் நன்றி.

Monday, May 21, 2012

வரலாறு காணாத சென்னை யூத் பதிவர் சந்திப்பு-பகுதி-2


புலவர் இராமானுசம் ஐயா அவர்கள் தொலைபேசியில் கூறியது போல் மின்னல் வரிகள் கணேஷையும் அழைத்துக் கொண்டு மகிழ்வுந்தில் என் வீட்டுக்கு மாலை 4.15 மணி அளவில் வந்து சேர்ந்தார்.மூவரும் அடையாரி லிருந்து புறப்பட்டு 5 மணிக்கு முன்னதாகவே கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸை அடைந்தோம்.பல பதிவர்கள் வந்திருந்தனர்.(உண்மையாகவே எல்லோரும் யூத்தான்!) அனைவரையும் சந்தித்து அறிமுகப் படலத்தை முடித்தேன்.

”வீடு ” சுரேஸ்குமாரும் ’நாய் நக்ஸ்’ நக்கீரனும் யார் எனத் தெரிகிறதா என்று கேட்ட போது விழித்தேன்.பின் அவர்களே  அறிமுகம் செய்து கொண்டார்கள்.வலை மூலம் எழுத்தில் மட்டுமே பார்த்துப் பழகிய பல நண்பர் களை நேரில் பார்த்துப் பேச மிக மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சிவகுமார் மற்றும் நண்பர் களுக்கு நன்றி.


           
                                    ஒரு’ யூத் ’பதிவரின் சுய அறிமுகம்

சந்திப்பின் முக்கியமான நிகழ்வுகள் முன்பே குறிப்பிட்டது போல் விசாலினிக்கும், யோகநாதனுக்கும்  பாராட்டு. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஒருவருக்கு!


பேருந்து நடத்துனராக இருந்து ’ ரீல்’ ஹீரோவானவரை நாடறியும்.
பேருந்து நடத்துனராக  இருந்து கொண்டே ’ரியல் ஹீரோ’ ஆனவர் திரு.யோகநாதன்.

மரங்களைக் காக்க,மரக் கொள்ளையர்களைத் தடுக்க, அவர் செய்த சாகசங்கள் அனைத்தும் திரில்லர் கதை போன்றவை.மரம் வளர்க்க அவர் எடுத்து வரும் முயற்சிகள் பிரமிக்க வைத்தன.இவை பற்றியெல்லாம் சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார்.நறுக்கென்று சில குட்டிக்கவிதைகளும் சொன்னார்.

சந்திப்பில் அவருக்குப் பரிசு வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.

   இனிய அதிர்ச்சி அடைந்தவர் பதிவர் ’கோகுல் மனதில்’  கோகுல் அவர்கள்.
   2011 ஆம் ஆண்டின் யூத் பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.



                                                  கோகுல்                                               
கோகுல் பகிர்ந்து கொண்ட ஒரு மகிழ்ச்சியான செய்தி. அடுத்த மாதம் அவருக்குத் திருமணம்.நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.ராசிபுரத்தில் திருமணம்.புதுச்சேரியில் வரவேற்பு.பதிவர்கள் ஃபுல்லாப் போகப்போவதாக யாரோ சொன்னார்கள்.ஃபுல்லாப் போவீங்களோ,போயிட்டு ஃபுல்லா வருவீங்களோ, நல்லாருந்தாச் சரி!

மேலும் சில புகைப்படங்கள்


                                          கேபிளாரோடு சண்டை போடப் போகிறாரா?






  

சந்திப்பில் யார் யார் என்னென்ன பேசினார்கள் என்ப தெல்லாம் முழுமையாகக் குறிப்பெடுத்துக் கொண்டி ருந்தார் தமிழ் நாட்டைத் தன் பெயரின் தலைப்பெழுத்துக் களாகக் கொண்ட பதிவர்!முழு வர்ணனைஅவர் பதிவில் விரைவில் எதிர்பார்க்கலாம்!

சந்திப்பின் ஹைலைட்டான செய்தியும்,படங்களும் நாளை வெளியாகும். 

கண்டிப்பா நாளையும் வாங்க!
.


 




               

Sunday, May 20, 2012

வரலாறு காணாத சென்னை’ யூத்’ பதிவர் சந்திப்பு!

இன்று மாலை சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி புத்தக மகாலில் சென்னை யூத் பதிவர் சந்திப்பு   அறிவித்தபடி சிறப்பாக நடை பெற்றது.

நானும் என்னை விட யூத்தான புலவர் இராமானுசம் ஐயா அவர்களும்,மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுடன் சந்திப்பில் கலந்து கொண்டோம்.

சில காரணங்களால் சந்திப்பின் முழு விவரமும் உடன் அளிக்க முடியாத நிலையில்,நான் எடுத்த படங்களில் சிலவற்றை மட்டும் உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.பார்த்து ஏதாவது  புரிந்து கொள்ளுங்கள்!

                                                      இங்குதான்      நடந்தது!
                  
                                         என்ன செய்யலாம்?எப்படி நடத்தலாம்?

                                                                                                                             
                                               உணவு பற்றி என்ன சொல்லலாம்?



                                      





                                              வந்தவர்களும்,சுய அறிமுகங்களும்.

                                    யார் யார் என உங்களுக்குத் தெரியும்தானே!

(நாளையும் தொடரும்)