தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 25, 2010

இரண்டல்ல(அத்வைதம்)

எனது மற்றோர் பதிவு இருக்கிறது.அது ஆன்மீகப் பதிவு.சில மாதங்களாக செயலற்று இருக்கிறது.அப்பதிவிலிருந்து,எனக்குப் பிடித்த சில இடுகைகளை இங்கே இறக்குமதி செய்து,இப் பதிவையே ஒரு பல்சுவைப் பதிவாக மாற்ற நினைத்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்.கருத்துக் கூறுங்கள்.இதோ,முதல் பதிவு---

அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும், தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும், சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால், இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம், ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு, ஒவ்வொரு ஊராய் அலைந்து, அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக, கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."

சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"

அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"

"சீவன் எனச் சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சிவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)

(எளிய பொருள்-சீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு இல்லை.சீவாத்மா, பரமாத்மாவை அறிவதில்லை.அவ்வாறு சீவாத்மா பரமாத்மாவை அறிந்து கொண்டால்,சீவாத்மாவும் பரமாத்வாவும் ஒன்றாகி விளங்கும்.)

21 கருத்துகள்:

  1. உங்கள் எழுத்து, ஆக்கபூர்வமாக இருக்கிறது.
    அதுவே, மேலும் மேலும் படிக்கத்
    தூண்டுகிறது.
    இப்படி நிறைய எழுத வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்தேனுங்க. சும்மா நச்சுன்னு இருக்குது ஐயா.

    தொடருங்க. வாழ்த்துக்கள் மதுரை சொக்கன்.

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜீவி, நன்றி மாசிலா,
    தொடர்ந்து எழுத உங்கள் கருத்துக்கள் எனக்கு புதிய பலம் தந்திருக்கின்றன

    பதிலளிநீக்கு
  4. ஐயா ஆன்மிகம் என்பதை கிண்டல் செய்துதான் வலைப்பதிவுகளில் நிறைய பதிவுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தங்களைப் போன்ற ஆன்மிகவாதிகளின் வருகை எங்களைப் போன்ற தெய்வ நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு பலமாக இருக்கக்கூடும். வருக.. வருக.. வரவேற்கிறேன்..

    பதிலளிநீக்கு
  5. உண்மைத்தமிழன் அவர்களே ஆன்மீகம் என்பது ஒரு நல்ல வாழ்க்கை நிலை,வாழ்க்கை முறை,வாழ்க்கையின் ஆதாரம்.அதை ஒரு அசிங்கமான சொல்லாக நினைப்பவர்களும் ஒரு நாள் உண்மையை உணர்வர்.
    உங்கள் வரவேற்புக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
  6. நல்ல கருத்துள்ள பதிவுங்க

    பதிலளிநீக்கு
  7. அருமை. அத்வைத தத்துவத்தை மிக எளிதாக சொல்லி உள்ளீர்கள்.

    @உ. த அண்ணாச்சி
    என் மனதில் ஒரு எண்ணம் இருக்கிறது. பார்ப்போம். இறைவன் மனது வைத்தால், விரைவில் துவங்குவேன்

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமையான பதிவு. "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே! அவர் ஏதும்அறியாரடிஞானத்தங்கமே!"
    என்றபாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. தொடர்ந்து எழுதங்க பின் தொடர்கிறேன்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. //கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான்// மனிதன் மனிதனுக்கு செய்யும் தொண்டே சிறந்த இறைத்தொண்டு.நல்ல மனிதனின் இதயம் தான் இறைவனின் ஆலயம் என்பதுதான் நிதர்சனம்.வாழ்த்துக்கள் ஐயா. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  11. @ VELU.G.
    //நல்ல கருத்துள்ள பதிவுங்க//
    மிக்க நன்றி.
    @ LK
    மூன்றாண்டுகளுக்கு முன் வெளியிட்ட பதிவு.பின்னூட்டங்கள் உட்பட இறக்குமதி செய்திருக்கிறேன்.
    கருத்துக்கு நன்றி.

    @வே.நடனசபாபதி
    அறிந்து கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதாக நடப்பதல்லவே!
    உங்கள் மேற்கொள் அருமை.
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. THOPPITHOPPI அவர்களே,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  13. //நல்ல மனிதனின் இதயம் தான் இறைவனின் ஆலயம் என்பதுதான் நிதர்சனம்//
    சந்தேகமின்றி!
    கருத்துக்கு நன்றி இனியவன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  14. பல மகான்களும் அறிஞர்களும் கூறி வரும் கருத்துக்களை மிக எளிய நடையில் எழுதி உள்ளீர்கள் ! தொடருட்டும் பணி! தங்கள் பதிவுகளை படிக்கும் பலரும் ஆன்மீக பாதையில் தொடருவார்கள் என்று நம்புகிறேன் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  15. //பின்னூட்டங்கள் உட்பட இறக்குமதி செய்திருக்கிறேன்.
    கருத்துக்கு நன்றி.///

    பல்பு .....

    பதிலளிநீக்கு
  16. Vasu கூறியது...
    //தங்கள் பதிவுகளை படிக்கும் பலரும் ஆன்மீக பாதையில் தொடருவார்கள் என்று நம்புகிறேன் //
    நானும்தான்!
    நன்றி வாசு.

    பதிலளிநீக்கு
  17. LK கூறியது...

    //பல்பு ..... //
    :>
    மறு வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  18. //அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.// அருமையான காதல் பதிவு. ஐயா தொப்பி உங்களுடைய பெர்மனெண்ட் காஸ்டியூம் போல இருக்கே?

    பதிலளிநீக்கு
  19. இனியவன் கூறியது...

    // அருமையான காதல் பதிவு. ஐயா தொப்பி உங்களுடைய பெர்மனெண்ட் காஸ்டியூம் போல இருக்கே?//
    இனிய சொற்கள் சொல்லியிருக்கிறீர்கள்,இனியவன்!
    தொப்பி பற்றி-அது சும்மா புகைப்படத்திற்காக அணிந்தது.இப்போது எங்கே இருக்கிறது என்று கூடத்தெரியாது!
    பின்னூட்டம் பதிவுமாறி விட்டது!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  20. 'அஹம் பிரம்மாஸ்மி'யை நடைமுறையில் மறந்து விட்டதை நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. அகம் பிரம்மாஸ்மி என்ற கொள்கையின் பின்னால் இருக்கும் அசாத்திய தன்னம்பிக்கை வெற்றிக்கான வாழ்க்கைக்கான சுயசாதனத்தை நாம் புரிந்து கொள்ளாததால் தான் சடங்கில் முடங்கிக் கிடக்கிறோம். சிந்தனையைத் தூண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  21. மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
    நன்றி அப்பாதுரை அவர்களே.

    பதிலளிநீக்கு