தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 24, 2010

அறம்

அவர்கள் காத்திருந்தனர்,ஞானியார் தியானத்தினின்று விழிப்பதற்கு.இப்போதெல்லாம் இதே வாடிக்கையாகப்போய் விட்டது.-அவர் தியானம் கலைந்து விழித்தவுடன் தங்கள் குறைகளை,கேள்விகளை அவர்முன் வைத்து, அவரது பதிலைப்பெற்று அமைதி அடைவது.ஏனென்றால் கண் விழித்த சிறிது நேரத்திலேயே ஞானி மீண்டும் ஞானத்தில் ஆழ்ந்து விடுவார்.அந்த சில மணித்துளிகளுக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.

ஞானி கண் விழித்தார்.அனைவரையும் ஒரு முறை கனிவோடு நோக்கினார்.அவர் பார்வை ஒருவன் மீது நின்றது.அவன் அவரை வணங்கிக் கேட்டான்"சாமி,கடவுளை எப்படி வழிபடுவதுன்னே எனக்குத் தெரியலை.பெரிசா பூசை செய்யவோ படையல் வைக்கவோ என்னால முடியாது.நான் என்ன செய்யணும் சாமி?"

"இறைவனை வழிபடுவதற்கு எந்த நியதியும் இல்லையப்பா.இதில் ஆடம்பரம் தேவையில்லை.நான் என்ற சிந்தையற்று ஆழ்ந்த பக்தியுடன்,உள்ளம் நிறை அன்புடன் ஒரு இலையைப்போட்டு வணங்கு.வில்வமோ,துளசியோ ஏதாவது ஒன்று.அவன் திருப்தி அடைவான்.உன் பூசையை ஏற்றுக்கொள்வான்"-ஞானி பதிலளித்தார்.

அவர் அடுத்தவனைப் பார்த்தார்.அவன் கேட்டான்"சாமி, நான் அதிக வசதியில்லாதவன்.தருமம் செய்யணுன்னு ஆசை இருக்கு.ஆனால் கொஞ்சமா ஏதாவது செஞ்சா எல்லாம் கேலி செய்வாங்களோன்னு பயமா இருக்கு. நான் என்ன செய்ய சாமி?"

அவர் பதில் அளித்தார்"உனக்கு நல்ல மனது இருக்கிறது.ஈதல் என்பது பெரிதாக இருக்க வேண்டியதில்லை.நேற்று நீ இங்கு வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தாயே அதுவும் ஒரு தருமம்தான்.நீ உண்ணும் உணவில் சிறிது பசித்தவருக்குவழங்கினால் அது அறம்.உண்ணும் முன் காக்கைக்குச் சிறிது அன்னமிட்டால் அதுவும் தருமம்தான்."

அவர் பார்வை பட்ட அடுத்தவன் கேட்டான்"இதெல்லாம் கூட முடியலென்ன என்ன செய்ய"கொஞ்சம் இடக்குப் பிடித்த அவனது கேள்வியைச் செவியுற்று அவர் புன்னகைத்தார்."ஊரில எல்லோரும் உன்னை மிகவும் கோபக்காரன் என்று சொல்கிறார்கள்.பல நேரங்களில் நானே கவனித்திருக்கிறேன்,இனிமையாகப் பேசாமல் சுடு சொற்களையே பேசுவதை.அதை விடுத்து அனைவரிடமும் இன்சொற்கள் பேசுவாயாகில் அதுவே சிறந்த அறம்தான்-முகத்தானமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன் சொலினதே அறம்."

இதைச் சொல்லிவிட்டு ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே"-----(திருமூலர்)

பொருள்: இறைவனை ஒரு பச்சிலையிட்டு வணங்குதல் அனைவர்க்கும் இயலும் அறமாகும்.அது போலவே,பசுவுக்கு ஒரு வாயளவு புல் அளித்தலும்,தாம் உண்ணும்போது பசித்தவர்க்கு ஒரு பிடி உணவளித்தலும்,பிறரிடம் இனிய சொற்களைப் பேசுதலும் யாவரும் எளிதில் இயற்றக் கூடிய அறங்களாகும்.
(என் மற்ற பதிவிலிருந்து,சிறு சேர்க்கையுடன் இறக்குமதி)

3 கருத்துகள்:

  1. இறைவனை ஒரு பச்சிலையிட்டு வணங்குதல் அனைவர்க்கும் இயலும் அறமாகும்.//
    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு. திருமந்திரத்திலிருந்து இன்னும் பல மேற்கோள்களுடன் கூடிய பதிவை எதிர் நோக்கி இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. @இனியவன்,
    //மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.//--நிச்சயம்.
    நன்றி.
    @வே.நடனசபாபதி,
    உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முயல்கிறேன்.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு