தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 07, 2009

என் நாடக அனுபவங்கள்-பகுதி-2

பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வந்த பின் நாடகம் மட்டுமல்ல,வேறு எந்தக் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.மீண்டும் மேடை ஏற பல ஆண்டுகள் ஆகி விட்டது.வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி ஊழியர் சங்க விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.ஆச்சரியமாக மீண்டும் அந்த நாடகத்தில் இரு வேடங்களில் (!) நடிக்க வேண்டியதாயிற்று-ஒரு ‘தொண தொணப்பு‘க் கிழவனார்,மற்றும் காவல் துறை ஆய்வாளர்.நாடகம் தொடங்குமுன் ஆய்வாளர் வேடத்தில் நாடகம் நடந்த சபா அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை சிறிது மிரட்ட அவர்கள் நிஜமாகவே பயந்தது ஒரு சுவையான அனுபவம்.வழக்கம்போல் இந்த நாடகத்திலும் என் நடிப்பு பாராட்டப்பட்டது.(டம் டம் டம்).

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி.சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,என் நண்பர் ஒருவர் மூலமாக.தொடரின் பெயர் “சந்திரலேகா”.அத்தொடரில் என்னுடன் பிரபலமான பலர் நடித்தனர்.(பெயர்களைத் தவிர்த்து விட்டேன்).கதாநாயகனின் அலுவலக முதலாளியாக ஒரு பாத்திரம் ஏற்றேன்.கதாநாயகியாக நடித்தவர் அப்போது கல்லூரியில் படித்து வந்தார்.கத்திப் பேசாத மிகையில்லாத நடிப்பு அவருடையது.இப்போது பெரும்பாலும் பேட்டி காண்பவராகவே இருக்கிறார்.முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் தோட்டத்தில்.முதல் நாளே சிறிது உருக்கமான காட்சி.படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயக நடிகர் “முதல் நாள் என்று சொல்கிறீர்கள்;ஆனால் மிக அனுபவமான நடிகர் போல நடிக்கிறீர்களே” என்று பாராட்டினார்.மகிழ்வுந்தில் என்னைத் திரும்ப அழைத்து வந்த ஒருவர் “நான் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு இயல்பான ‘கெத்து’இருக்கிறது உங்களிடம் “என்று பாராட்டினார்.

பின் ஸ்ரீதேவி வீடு,ஏ.வி.எம்.ஸ்டுடியோ என்று நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடைபெற்றது.இயக்குனர் முதல் டச்-அப் பையன் வரை எல்லோரும் என்நடிப்பைப் பாராட்டினர்.

ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக்காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்த சானல் மூடப்பட்டது.அத்தொடர் வெளி வரவில்லை.

மீண்டும் ஒரு முறை ‘காமிரா’ என்னுடனான விரோதத்தை உறுதி செய்து விட்டது!!!(என் பதிவு “நானும் காமிராவும்” பார்க்கவும்).
(பழைய வீட்டிலிருந்து)
முன்பு தவிர்த்த செய்திகள் கீழே(தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன?)

உடன் நடித்தவர்கள்--நிழல்கள் ரவி,பிரியதர்ஷினி,சபிதா ஆனந்த்,மலேசியா வாசுதேவன்,பி.ஆர்.வரலட்சுமி,மஹாநதி சங்கர்.இயக்குனர்-தினகரன்.சானல்,ஜே.ஜே.

வெள்ளி, மார்ச் 06, 2009

என் நாடக அனுபவங்கள்(பகுதி-1)

நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது, ஒரு சிவ ராத்திரியன்று இரவு, நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடித்தோம்.’நீதிபதி’ என்ற அந்த நாடகத்தை எழுதி இயக்கியவன் நான்தான்.அதில் கதானாயகனாக நடித்தவனும் நான்தான்.அடுக்குமொழி வசனங்கள் நிறைந்த அந்த நாடகம் பெரிய பாராட்டைப் பெற்றது.அந்த ஊர் இளைஞர் சங்கத்தினர் அவர்களின் அடுத்த நாடகத்தில் எனக்கு ஒரு பாத்திரம் அளிப்பதாகக் கூறினர்.ஆனால் நான் வேறு ஊர் சென்று விட்டதால் அவர்களின் நாடகத்தில் நடிக்கவில்லை.

நான் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளியில் “நண்பர்கள் குழாம்”என்ற ஒருஅமைப்பில் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது நிகழ்ச்சி தயார் செய்து அளிக்க வேண்டும்.ஒரு மாதம் என் வகுப்பின் சார்பில் நான் ஒரு நாடகம் தயார் செய்து நானே முக்கிய வேடத்தில் நடித்தேன்.பொறாமை கொண்ட ஒரு மன்னனாக நடித்தேன்.என் நடிப்பு மிகவும் பாராட்டப் பட்டது.அந்த நேரத்தில் எங்கள் பள்ளி ‘முத்தமிழ் விழா’வுக்காக ஒரு நாடகம் தயாரிக்கப் பட்டு வந்தது.பெயர்’தமிழ்——(முழுப்பெயர் நினைவில் இல்லை.)என் நடிப்பால் கவரப்பட்ட குழுவினர் என்னையும் அந்த நாடகத்தில் சேர்த்துக்கொண்டனர்.அந்த நாடகம் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த நாடகம்.நான் திருவள்ளுவர் வேடத்தில் நடித்தேன்.அதில் மன்னன் ஒருவனுக்கு அறிவுறுத்த நான் பேசிய குறள் இன்னும் மறக்கவில்லை.”உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” இந்த நாடகத்தில் நான் நடித்த மன்னன் நாடகமும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டு விட்டது.ஆக முதலிலியே நாடகத்தில் இரு வேடம் ஏற்று நடித்தேன்..திருவள்ளுவர் வேடத்தில் நடித்ததும் உள்ளே சென்று அவசரமாக ஒப்பனையைக் களைந்து மன்னன் வேடத்துக்கான ஒப்பனை செய்து கொண்டு உடைகளைத் தரித்துக் கொண்டு தயாரானது மிக சுவாரஸ்யமான அனுபவம்.

பள்ளி ஆண்டு விழாவில் ‘ராஜ ராஜ நரேந்திரன்’ என்ற நாடகம் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.ஏற்கனவே நல்ல நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் அந்த நாடகத்திலும் எனக்கு ஒரு வேடம் தருவதாக முடிவு செய்யப்பட்டது.நான் முன்பு நடித்த மன்னன் பாத்திரம் ஒரு வில்லத்தனமான நாயகன் என்பதால் இந்த நாடகத்திலும் எனக்கு ‘மகாசயர்’ என்ற வில்லன் வேடம் என்று முடிவு செய்தார்கள்(image ! !).ஆனால் கதானாயகன் நரேந்திரனாக நடிப்பதற்கு சரியான மாணவன் கிடைக்காததால் நானே நரேந்திரனாக நடித்தேன். அதில் சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கும்போது என் துரோணாசாரியார் ‘சிவாஜி’ அவர்களையே மனதில் நிறுத்தி நடித்தேன்.என் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.என்னை எல்லோரும் “குட்டி நடிகர் திலகம்” என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

இதே நாடகம் கோடை விடுமுறையில் நடக்கும் பொருட்காட்சியிலும் நடத்தப்பட்டது.என் ஜோடி அம்மங்கையாக நடித்த மாணவன் என்னை விட சிறிது உயரம்.எனவே அவனை மேடையில் சிறிது தலையைக்குனிந்து கொண்டே நடிக்கச் சொல்லியிருந்தேன்.இருந்தும் இந்த உயர வித்தியாசம் பார்வையாளர்களிடம் கேலிச் சிரிப்பை எழுப்பியது.நாடகம் பார்க்க வந்திருந்த என் தாயார் மற்றும் சகோதரிக்கு சிறிது சங்கடத்தை எற்படுத்தியது.ஆனால் சிறிது நேரம் சென்று என் முக்கிய காட்சி வந்ததும் சிரித்தவர்கள் எல்லாம் என் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தனர்.என் தாயின் அருகில் அமர்ந்திருந்த பெண்”இந்தப் பையன் சிவாசி மாதிரியே நடிக்குதே”என்று வியந்து பாராட்டவும் என் தாயார்”என் மகன்தான்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்களாம்.இந்த நாடகத்தில் “தூது நீ சொல்லி வாராய்” என்று நிலவைப் பார்த்து நான் பாடும் பாட்டு ஒன்று உண்டு.இது வேண்டாம் என்று முதலில் முடிவு செய்தோம்.ஆனால் அந்தக் காட்சி வருவதற்கு முன்னால் எங்கள் தமிழ் ஆசிரியர் அந்தப்பாட்டையும் சேர்க்கச் சொல்லி விட்டார்.அது காட்சி அமைப்பாளருக்குத் தெரியாது எனவே நான் பாட ஆரம்பித்தவுடன் நிலா காணாமல் போய் விட்டது!! இப்படியாக பள்ளியில் என் நடிப்பின் காரணமாக ஒரு ராஜாவாகவே வலம் வந்தேன்.இதில் என் கணித ஆசிரியருக்குத்தான் வருத்தம்-’நடிப்பு வந்து என் படிப்பைக் கெடுத்துவிட்டது’ என்று... (இன்னும் வரும்)

(பழைய வீட்டிலிருந்து)

வியாழன், மார்ச் 05, 2009

ஒரு வரலாறு

76 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படிப்பதற்காகச் சென்னை சென்று ,படிப்பைத்தொடர முடியாமல், 14 வயதில் தன்னை விட 14 வயது பெரியவரான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கு மணமுடித்து வைக்கப்பட்டு, 15 வயதில் முதல் குழந்தைக்கும் 26 வயதில் ஆறாவது குழந்தைக்கும் தாயாகி, 32ஆவது வயதில் கணவனை இழந்து, நிர்க்கதியாகிப் பெற்றோராலும் சரியாக நடத்தப்படாமல் ,குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கி, எதிர் காலமே ஒரு பெரிய கேள்விக்குறியாகிப்போன ஒரு பெண்ணின் நிலையை யோசித்துப்பாருங்கள்.அந்த நிலையில் குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கி, அவர்களின் கல்வி, திருமணம் போன்றவற்றைக் குறைவின்றி நிறைவேற்றி அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைவதற்கு அந்தப்பெண் என்ன பாடு பட்டிருக்க வேண்டும்?

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இது.இப்போது,90 வயதிலும்,சமையல் உள்பட வீட்டு வேலைகளைத் தானே செய்து வரும்,மன உறுதி கொண்ட பெண்மணி.சிறிய இன்னல்கள் வந்தாலும் சோர்ந்து போகும் பலருக்கு இந்தக்கதை ஊக்கம் தருவதாக அமையும்.

இக்கதையை அப்பெண்மணியின் அனுமதியின்றியே எழுதத்துவங்குகிறேன்.ஆனால் அவர்கள் ஆசி எனக்கு எப்போதும் உண்டு.அதுவே என் பலம். என் வரம்.என் வெற்றிக்கு ஆதாரம்.
இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.
பயணம் ஆரம்பம் .