தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 29, 2010

வரலாறு-அத்தியாயம்-4--ராஜியும் முதுமையும்

இது ஒரு தொடர்.2009 ஆம் ஆண்டில் எழுதத்தொடங்கி,நடுவில் தேக்கமடைந்து விட்ட தொடர்.
இந்தப் பதிவைப் படிக்கும் முன் பழைய இடுகைகளையும் தயவு செய்து படித்து விடுங்கள்அப்போதுதான் தொடர்ச்சி இருக்கும்.
பழைய இடுகைகள்—
http://chennaipithan.blogspot.com/2009/03/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_15.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_22.html
http://chennaipithan.blogspot.com/2009/05/3a.html
இனி வரலாற்றைத் தொடர்வோம்.
-*-*-*-*-*
ராஜிக்கு இந்த ஜூலையில் 92 வயது முடிந்துவிட்டது.திடீரென்று உடல் தளர்ந்து விட்டது.முன்பே தளர்ந்து விட்ட உடல்தான்.ஆனால் அவளது அசாத்திய மன உறுதி, தளர்ச்சியை வென்று முன் நின்றது.ஆனால் அந்த மன வலிமை ஒரே நாளில் அகன்று விட்டது.எனவே உடல் வென்று விட்டது.அவள் முன்பெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள்”எங்காத்திலேயே என் சித்திதான் 92 வயது வாழ்ந்தாள்.நானும் அதே மாதிரி இருப்பேன் போலிருக்கு”என்று.எனவே அந்த 92 வயது என்பது மனோதத்துவ ரீதியாகவும் அவளைப் பாதித்திருக்கிறது.

இதுவரை,மெல்ல நடந்தாலும்,துணையின்றி நடந்த அவள்,இப்போது கம்பூன்றி நடக்கிறாள்.இரவில் பாத்ரூம் செல்லும்போது அவளது பிள்ளையின் அறிவுரைப்படி வாக்கர் உபயோக்கிறாள்.காது மந்தமாகி விட்டது.ஏதாவது படிக்க நினத்தாலும் நீண்ட நேரம் படிக்க முடிவதில்லை.ஆனாலும் காலையில் வழக்கம் போல் சீக்கிரம் குளித்து(நாற்காலியில் அமர்ந்துதான்), ஸ்லோகங்கள் சொல்கிறாள்.ராம ஜபம் செய்கிறாள்.அவளது பொழுது போக்கு கச்சேரி கேட்பது, ஓரிரண்டு தொலக்காட்சித்தொடர்கள் பார்ப்பது,பிடித்த் திரைப்படம் ஒளிபரப்பப் பட்டால் பார்ப்பது-(அதுவும் பார்க்கும்போதே உறக்கம் வந்து விடுகிறது.)அடிக்கடி சோர்ந்து படுக்க வேண்டி நேர்கிறது.இப்போதெல்லாம் அவள் இறைவனிடம் வேண்டுவது ஒன்றுதான்”ஆண்டவா,நானும் கஷ்டப்படாமல்,மத்தவாளையும் கஷ்டப் படுத்தாமல் என்னைக் கொண்டு போயிடு”

இத்தகைய முதியவர்களின் உபாதைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா?அவர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் எத்தகைய சோதனை என்பதை உணர்கிறோமா?இந்த வயதில் அவர்களுக்குத் தேவை வெறும் மூன்று வேளை சோறில்லை. அன்பு;சுற்றத்தின் அன்பு;சூழலின் அன்பு.ஆதரவான பேச்சு. இதெல்லாம் எத்தனை வசதிகள் நிறைந்த முதியோர் இல்லமாக இருந்தாலும் அங்கு கிடைக்குமா?

இப்போதெல்லாம் ராஜி அடிக்கடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறாள்.

வாருங்கள்!நாமும் அவற்றில் பங்கு கொள்வோம்.

(தொடரும்)

வெள்ளி, நவம்பர் 26, 2010

இறைத்தத்துவம்

அவன் அந்த ஆற்றங்கரைக் கோவில் மண்டபத்திலேயே தங்க ஆரம்பித்தான்.அவனது பெரும்பகுதி நேரம் தியானத்திலேயே கழிந்தது.பசிக்கும்போது ஊருக்குள் சென்று யாரிடமாவது உணவு கேட்டுச் சாப்பிடுவான்.அந்த ஊரில் யாரும் அவனுக்கு உணவிட மறுப்பதில்லை.அனைவருக்கும் அவனிடம் ஒரு மரியாதை இருந்தது.

ஒரு நாள் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒருவன் கையில் கற்களுடன் எதையோ தேடுவது போல்நின்று கொண்டிருந்தான்.

அவனைப்பார்த்ததும் அந்த ஒருவன் சொன்னான்"சாமி,ஒரு நாயி எப்பப்பார்த்தாலும் என்னைக் கண்டா கொலச்சுக்கிட்டே இருக்கு.அந்த சமயத்தில அத அடிக்கக் கல்லத் தேடினா கல்லு கெடைக்க மாட்டேங்குது.இப்ப கல்ல எடுத்து வச்சுக்கிட்டு நாயத் தேடினா அதக்காணும்.அந்தக்காலப் பெரியவங்க சரியாத்தான் சொன்னாங்க"நாயக்கண்டாக் கல்லக்காணும்,கல்லக்கண்டா நாயக்காணும்"அப்படின்னு.

அவன் சிரித்தான்."இந்த மக்கள் உண்மையான பொருளை விட்டு விட்டு வேறு ஏதோ பொருளைக்கற்பித்துக்கொள்கிறார்களே"என்று நினைத்தான்.
பின் சொன்னான். "அதற்குப்பொருள் அப்படியல்ல.கல்லில் செய்யப்பட்ட ஒரு நாயின் சிலையில் நாயின் உருவத்தை ரசித்துப்பார்க்கும்போது கல் கண்ணுக்குத்தெரிவ்தில்லை.அது என்ன கல்,செங்கல்லா,கருங்கல்லா என்று ஆராயும்போது நாய் தெரிவதில்லை.அதுதான் பொருள்."

மற்றவன் சொன்னான்"இதெல்லாம் எங்களுக்கு என்ன சாமி தெரியும்?நீங்க சொன்னாத் தெரிஞ்சுக்கறோம்."

அவன் நினைத்தான்."இறைத்தத்துவமும் இது போலத்தானே.ஐந்து பூதங்களாகிய நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவற்றை வியந்து அவற்றில் லயிக்கும் போது இறைவன் மறைந்து விடுகிறான்.பஞ்ச பூதங்களுக்கும் காரணமான பரம்பொருளை நினைக்கும் போது அவை மறைந்து இறைவனே நிற்கிறான்.'

அவன் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.-(திருமூலர்)

(பொருள்:மரத்தால் செய்யப்பட்ட யானைச் சிற்பத்தைப் பார்க்கும்போது,மரத்தைப் பற்றிய உணர்வு அறிவு இருப்பதில்லை.மரம் எத்தன்மையது என்று பார்க்கும்போது,யானைக் காட்சி மறைந்து விடுகின்றது.அது போல்,பரத்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும் போது பரமானது உணர்வுக்கு வருவதில்லை.குருவருளால் பார்க்கும்போது பரமே காட்சி தந்து பார் முதலிய பூதங்கள் பரத்தில் மறைந்து விடும்.)

(பின் குறிப்பு:என் மற்ற பதிவில் 2007 ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட பதிவு,சிறிது விரிவாக்கப் பட்டு இங்கு இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறது.)

வியாழன், நவம்பர் 25, 2010

இரண்டல்ல(அத்வைதம்)

எனது மற்றோர் பதிவு இருக்கிறது.அது ஆன்மீகப் பதிவு.சில மாதங்களாக செயலற்று இருக்கிறது.அப்பதிவிலிருந்து,எனக்குப் பிடித்த சில இடுகைகளை இங்கே இறக்குமதி செய்து,இப் பதிவையே ஒரு பல்சுவைப் பதிவாக மாற்ற நினைத்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்.கருத்துக் கூறுங்கள்.இதோ,முதல் பதிவு---

அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும், தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும், சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால், இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம், ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு, ஒவ்வொரு ஊராய் அலைந்து, அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக, கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."

சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"

அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"

"சீவன் எனச் சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சிவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)

(எளிய பொருள்-சீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு இல்லை.சீவாத்மா, பரமாத்மாவை அறிவதில்லை.அவ்வாறு சீவாத்மா பரமாத்மாவை அறிந்து கொண்டால்,சீவாத்மாவும் பரமாத்வாவும் ஒன்றாகி விளங்கும்.)

புதன், நவம்பர் 24, 2010

இதுதான் காதல்!இதுவே காதல்!

நேற்று இரவு.
மணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்து பார்த்தேன்.
எங்கள் குடியிருப்பின் இரவுக் காவல்காரர் நின்று கொண்டிருந்தார்,நெஞ்சை லேசாக அழுத்திப் பிடித்தபடி.முகத்தில் வேதனை.

பதறிப் போய்க் கேட்டேன்”.என்ன பெருமாள்,உடம்பு சரியில்லையா?”
அவர் இல்லை என்று தலையசைத்தவாறே கேட்டார்”குடிக்கக் கொஞ்சம் சுடு தண்ணி குடுங்க சார்”
ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது.டம்ளரில் ஊற்றிக் குடிக்கும் சூடாகக் கொடுத்தேன்.
படியில் அமர்ந்து வெந்நீரை அருந்தினார்.தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.புறப்படத் தயாரானார்.

நான் கேட்டேன்”என்ன பெருமாள்,என்ன ஆச்சு?”
சிறிது தயங்கினார்.பின் சொன்னார்”என் சம்சாரம் போன வருஷம் காலமாயிட்டா.இன்னிக்குக் காலையிலேதான் வருஷத் திதி கொடுத்தேன்.இப்போ உட்காந்துக் கிட்டு இருக்கும்போது,அவ நெனைப்பு ரொம்ப அதிகமா வந்து.உடம்பெல்லாம் பட படன்னு வந்துடுச்சு.எல்லாமே ஒரே இருட்டான மாதிரி இருந்திச்சு.அதுதான் சார்”

அவரது வயது 65 என்பது எனக்கு முன்பே தெரியும்.
நான் கேட்டேன்”உங்களுக்கு எந்த வயசிலே கல்யாணமாச்சு?”
“22 வயசிலியே முடிச்சு வைச்சிட்டாங்க சார்”

நான் யோசித்தேன்.42 ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பின் பிரிந்து சென்ற மனைவியை நினத்து,அவளது பிரிவின் தாக்கத்தால்,அவர் உள்ள அளவில்,அதன் காரணமாக உடல் அளவில் பாதிக்கப் படுகிறார் என்றால்,அந்த அன்பு,அவர்களிடை இருந்த நெருக்கம்,அவர்களின் பரஸ்பரப் புரிதல் எத்தனை உயர்வானது?
அது வெறும் அன்பா?மண உறவா?நெருக்கமா?
அதற்கும் மேல்........
இதுதான் காதல்.உண்மைக் காதல்.

அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.

இந்தக் காதலுக்கு அவரின் உணர்வுகளே தாஜ் மஹால்!

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

திங்கள், நவம்பர் 22, 2010

காதல்-திருக்குறள் கதை-பகுதி-3

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவள், தோளில் தட்டி விட்டுச் சென்ற இடம் இனித்தது.தோளில் எப்படி இனிக்கும் என்று யோசிக்காதீர்கள்!இது நாவின் சுவையல்ல;நெஞ்சின் சுவை.அதே சமயம் அவள் செல்வது நெஞ்சில் ஒரு சுகமான வலியாகப் பரவியது.ஒரு வாரம்!ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறோம் என்று நினைத்தாலே நெஞ்சின் வலி கூடியது;ஆனால் அடுத்த ஞாயிறன்று அவளைக் கட்டாயம் பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கை உடல் முழுவதும் ஒரு பரவசமாய்ப் பரவியது.ஒரே ஒரு பிரச்சினை.இந்த ஏழு நாட்கள் தொலைபேசக் கூடாது என்று அவ்ள் கண்டிப்பாகச் சொல்லிச் சென்று விட்டாள்.கடவுளே!நாட்களை வேகமாக நகரச்செய் என்று வேண்டினான்.


அந்த ஞாயிறும் வந்தது.மறுநாள் அவளைச் சந்திக்கப் போவதை நினைத்து நினத்து முதள் நாள் இரவு நித்திரை போயிற்று.ஞாயிறு காலை எழுந்தது முதல் நிலை கொள்ளவில்லை

ஒரு லக்னோவி குர்த்தா பைஜாமா அணிந்தான்(போகும் இடம் ஒரு ஒவியக்கண்காட்சி அல்லவா?).’ஹ்யூகோ பாஸ்’ செண்ட்டைத் தெளித்துக் கொண்டான்.புறப்பட்டான்.தான் முதலில் சென்று அவளை வரவேற்க வேண்டும் என்று எண்ணினான்.ஆனால் அவள் முந்திக் கொண்டாள்.காலரியின் நுழை வாயிலிலேயே காத்திருந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.ஒரு வாரப் பிரிவு முடிந்து இன்று பார்க்கும்போது எத்தனையோ பேச வேண்டும் என்ற எண்ணியதெல்லாம் அந்தக் கணத்திலே மறந்து போனது.கண்கள் பார்த்துக் கொண்டே இருந்தன.ஆயிரம் செய்திகள் பேசின.இதயங்கள் உருகி ஓடிச் சங்கமித்தன.அங்கு பேச்சா முக்கியம்?

”கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”

(கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமல் போகின்றன.)

அவள் கைகளை மெல்லப் பற்றினான்.என்ன மென்மை!இன்னும் பார்வைகள் விலகவில்லை.சுற்றுப்புறத்தை மறந்து ஒரு தனி உலகில் நின்றனர்.அவர்களை தாண்டிச் சென்ற சிலர் அவர்களப் பார்த்துச் சிரித்தவாறு சென்றனர்.

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

(யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால்,அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்.)

“இவள்தான்,இவள்தான் நான் தேடிக் கொண்டிருந்த என் துணை.இவளே என்னில் ஒரு பாதி.இவள் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை.இறைவா இவளை என்னிடம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி”—அவன் எண்ண ஒட்டம்.

”இவர்தான்.எந்த ஆடவனைப் பார்க்கும்போதும்,எந்த ஆடவோனோடு பேசும்போதும் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி இவரைப் பார்க்கும்போது என்னில் அலையலையாய்ப் பரவுகிறதே.இவரே என் துணை. இவரே இனி என் வாழ்க்கை;வாழ்க்கையின் பொருள்.”-அவள் எண்ண ஓட்டம்

கொஞ்ச நேரத்தில், கனவுலகை விட்டு நினைவுலகுக்கு வந்தனர்.

இனிய பிதற்றல்கள் ஆரம்பித்தன.


அவர்களை அவர்கள் உலகத்திலே கொஞ்சம் தனியாய் இருக்க விடுவோமா?

(இன்னும் வரும்)

ஞாயிறு, நவம்பர் 21, 2010

உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?(பாகம்-2)

இத்தலைப்பில் வந்த என் முந்தைய பதிவுக்குப் பல நண்பர்கள் பின்னூட்டமிட்டுத் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். அவற்றின் மூலம் எனக்குக் கிடைத்த மிகத் தெளிவான செய்தி! என் பதிவில் பின்னுட்டம் வர வேண்டும் என்றால் நான் அடுத்தவர் பதிவுகளைப் படித்து(படிக்காமலும்!) பின்னூட்டம் இட வேண்டும்!
இந்த அடிப்படையில் நான் ஒரு பின்னூட்ட ஆராய்ச்சி செய்தேன் அதன் கண்டுபிடிப்புகள் கீழே---


1.)உங்கள் நோக்கம் பிரபல பதிவுகளைப் படித்து,ரசித்துப் பின்னூட்டம் இடுவது மட்டும்தான் என்றால்,அவ்வாறே செய்யுங்கள். ஆனால், அதற்குப் பதிலாக,அவர்கள் உங்கள் பதிவில் பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர் பார்த்துச் செய்யாதீர்கள்.கடமையைச் செய்யுங்கள்;பலனை எதிபாராதீர்கள்.பின்னூட்டம் வந்தால் அது ஒரு போனஸ்.


2)சில பதிவர்கள் குழுக்களாகச் செயல் படுகிறார்கள்.குழுவின் உறுப்பினர்கள் பதிவுகளில் மாற்றி,மாற்றி பின்னூட்டம் இடுகிறாரகள்
(உ-ம்) அ வின் பதிவில் ஆ,இ,.ஈ,உ ஆகியோர் பின்னூட்டம் இட்டிருந்தால்,ஆவின் பதிவில் அ,இ,ஈ,உ அவர்கள் பின்னூட்டம் கட்டாயம் இருக்கும்.இவ்வாறு மாற்றி மாற்றி நடக்கும்..


இப்படி ஒரு குழுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் .நீங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டால்,அது பல விதங்களில் சௌகரியம்.

அ).நீங்கள் எழுதுவது ஓட்டையாக இருப்பினும், பாராட்டுப் பின்னூட்டங்கள் வந்து சேரும்.

ஆ)கவிதை என்ற பெயரில் என்ன எழுதினாலும் அது கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும்.ஹைக்கூ இலக்கணத்தில் அடங்காதவையும் ஹைக்கூவாகப் போற்றப்படும்..

இ)படிக்கப் படாமலே கூடச் சில பின்னூட்டங்கள் வரக்கூடும்.அது மிக எளிது—super,nice என்ற ஒரே சொல்லில்.

ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு ஒரு சாதனமாக பதிவுலகை நாடியிருந்தால், பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எழுதுங்கள்.எழுதிக் கொண்டேயிருங்கள்.நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்—தன் அழகைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல! !

வாருங்கள்! பதிவுலகை நம் எழுத்துக்களால் நிரப்புவோம்!
(நண்பர்களே!இது முழுக்க முழுக்க ஒரு நகைச் சுவைப் பதிவு.லேபிலில் நானே குறிப்பிட்டிருக்கிறேன்—நகைச்சுவை,மொக்கை என்று)

(குமார்,காயத்ரி,உங்களைக் காக்க வைத்து விட்டேன்.{காதல்-திருக்குறள் கதை} அப்பாராவ் காலரியில்தானே இருக்கிறீர்கள்?இதோ வந்துவிட்டேன்.)

சனி, நவம்பர் 20, 2010

வெட்கமில்லை,வெட்கமில்லை!

நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்--(பாரதி)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி!

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? --(பாரதி)

வெட்கமில்லை ,வெட்கமில்லை-இதில் யாருக்கும் வெட்கமில்லை
--(பாரதி தாசன்)

(புதிய இந்தியாவை படைக்கப்போகும் சிறுவர்களே!உங்களுக்காக)

அச்சம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
உலுத்தரை இகழ்.

பாதகம் செய்வோரைக் கண்டால் நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா. --(பாரதி)

வியாழன், நவம்பர் 18, 2010

உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?

”உன் பதிவுக்கு அதிகமான பின்னூட்டங்கள் வரணுமா?”என் நண்பன் கேட்டான்.அவர் பதிவர் அல்ல.ஆனால் பல பதிவுகளையும் படிப்பவர்.

”நானும் ’மாங்கு மாங்கு’ன்னு எழுதித்தான் பார்க்கிறேன்.சமீபத்துல நான் எழுதின பல பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் குவியும்னு நினைத்தேன்.ஒண்ணும் இல்லை.வருகையெல்லாம் சுமாரா இருக்கு;ஆனா பின்னூட்டம் வருவதில்லை.சொல்லுப்பா உன் யோசனையை.” நான் சொன்னேன்.

“கண்ணா,யோசனையெல்லாம் ஓசியில் கிடைக்காது. ரெண்டு பெக் வாங்கிக் குடு.சொல்றேன்.”

”மகா பாவி!எனக்கு அந்தப் பழக்கம் கிடையாதுன்னு உனக்குத்தெரியுமில்லே ”

”உன்னை யாருப்பா குடிக்கச் சொன்னது?எனக்கு வாங்கி ஊத்து!”

“சரி,தொலைக்கிறேன்.ஆனால் நட்சத்திர ஓட்டல் எல்லாம் கிடையாது.நமக்கு அந்த பெரிய எழுத்தாளர் அளவுக்கு வசதியோ,வாய்ப்போ கிடையாது”

”தோ பாரு, தி.நகரில் ஓட்டல் அருணா போகலாம்.அங்கதான் பல பெரிய பதிவர்கள் உக்காந்து யோசிக்கிறாங்களாம்.”

“சரி வா, போய்த்தொலைவோம்”

போனோம்.நண்பன் ஆரம்பித்தான்.நான் ஒரு ஸ்ப்ரைட். ”உம் .உன் யோசனையைச் சொல்லு”

“இரப்பா.சுருதி சேரட்டும்.”

ஒரு பெக் முடிந்தது.அடுத்தது வந்தது.

“இப்ப, சொல்லு.”

“இதோ பாரு.நீ நல்லா சுவாரஸ்யமா எழுது.பின்னூட்டம் தன்னால வரும்.”

எனக்கு சுர் ரென்று கோபம் வந்தது.முடியாத விஷயத்தைப் பற்றி இவன் சொல்வதற்கா செலவு?

“நடக்கக் கூடியதா சொல்லு.என்னால முடிஞ்ச அளவுக்குத்தான் எழுத முடியும்.”

”அப்ப ஒண்ணு செய்யேன்.உன் நண்பர்களுக்கெல்லாம் உன் பதிவு பத்திச் சொல்லி அவர்களையெல்லாம் பின்னூட்டச் சொல்லேன்.”

”ஏண்டா,எனக்கு நண்பர்களே இல்லாமப் போகணும்னு நினைக்கறியா?ஒரு ரெண்டு பேரு கிட்ட என் பதிவு பற்றிச் சொல்லிப் படிக்கச் சொன்னேன்.அதக்கப்புறம் அவங்க என்னைப் பார்த்தாலே வேற பக்கமாப் போயிடறாங்க.”

”அப்ப நீயே பல பெயரிலே பின்னூட்டம் போடேன்.”

”போடா.அப்படி எத்தனை பெயரிலே போட முடியும்?”

“முக்கியமான பதிவர்கள் பதிவுக்கெல்லாம் போய்,உன் சுட்டியைக் கொடுத்துப் படித்துப் பின்னூட்டம் போடச் சொல்லிப் பணிவாக் கேட்டுக்கோயேன்.”

“டேய். என் கொலைவெறியைக் கிளப்பாதே”

கிளாசில மிச்சமிருந்ததை வாயில் ஊற்றிக் கொண்டு சொன்னான்.
“கடைசியா பெஸ்ட் யோசனை.”
“என்ன?”

”இந்த சம்பவத்தையே ஒரு பதிவாகப் போட்டு, பிரபல பதிவர்கள் கிட்டயே கேளு,என்ன பண்ணலாம்னு”

இதுதான் நடந்தது..
அவன் சொன்னபடி எழுதி விட்டேன்.

பதிவர்களே.பதிவர்களே,நீங்கள் என்னை எழுத வேண்டாம் என்று சொன்னாலும்,நான் நிறுத்த மாட்டேன். பதிவுக்கடலில் படகாக மிதப்பேன்.கவிழ்ந்து விட மாட்டேன்.நீங்கள் என் படகில் ஏறிப் பயணம் செய்யும் வரை விடமாட்டேன்.

தயவு செய்து சொல்லுங்கள்.

நிறைய பின்னூட்டங்கள் வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

புதன், நவம்பர் 17, 2010

ராசா என்பார்,மந்திரி என்பார்.....

“தாத்தா!”
”என்னடா பேரா?”
”ஒரு கதை சொல்லு தாத்தா”
“என்ன கதைடா வேணும்?
”ராசா ராணிக்கதை சொல்லு தாத்தா”

”அது வேண்டாண்டா.ராசா மந்திரிக் கதை சொல்றேன்.”
”ராசா கதையிலே ராணி இல்லாம இருக்குமா தாத்தா”
”இந்தக் கதையிலே ராணிக்கு எடமில்லடா.இது ராசா
மந்திரிக் கதைதான்”
”ராசாவும் மந்திரியுமா,தாத்தா?”
”இல்லடா!இந்தக் கதைல ராசாதான் மந்திரி!”
”அப்ப மந்திரி யாரு தாத்தா?”
”மந்திரிதான் ராசா.”
“என்ன தாத்தா கொழப்பறே?”
“அடேய்! இது ராசாங்கற மந்திரி பத்தின கதை”
“ம்”
”அவர் தன்னோட இலாகாவிலே ஊழல் பண்ணிட்டாரு,
அவராலே அரசாங்கத்துக்கு கோடிக் கணக்கில நஷ்டம்னு,
சொல்றாங்க.ஆனா அவரு தான் ஒரு தப்பும் பண்ணலைன்னு
சொல்றாரு.அவரைச் சேந்தவங்க அவர் ஒரு தலித்
அப்படிங்கறதால பழி வாங்கறாங்கன்னு சொல்றாங்க”

”தலித்துன்னா என்ன தாத்தா?”
”உம்.நெறய சாதிப் பிரிவுகள் இருக்குல்ல.இதுவும் ஒண்ணு.
மேல் சாதிக்காரங்க முன்னாலே எல்லாம் இவங்களை
மோசமா நடத்தினாங்களாம்.இப்பவும் தங்களுக்குத்தேவைப்பட்ட நேரத்திலே இத ஆயுதமாக் கையிலே எடுத்துக்கிறாங்க சிலர்.”

”தாத்தா! எங்க கிளாசிலே நாப்பது பேர் இருக்கோம்;எல்லாரும் ஒரே சாதியா?”
“இல்லடா!வெவ்வேறு சாதி இருப்பாங்க”
“அதுல நீங்க சொன்ன தலித்துகளும் இருப்பாங்கல்ல?”
“இருப்பாங்க”
“இதுனால எங்களுக்குள்ள சண்டை எதுவும் வரதில்லையே,தாத்தா!ராபர்ட்,இஸ்மாயில்,சீனிவாசன்,
கருப்பையா எல்லாருமே எனக்கு நல்ல ஃபிரண்ட்ஸ்தான்.”

“நீங்க பெரியவங்க ஆனதும் இப்படி இருக்க முடியாது,இருக்க விடமாட்டாங்க அரசியல் வாதிகள்.”
“அரசியல் வியாதிகளா தாத்தா?”
”தெரியாமச் சொன்னாலும் சரியாத்தான் சொன்னே!”
”அப்ப இந்த ராசாவுக்குப் பதிலா வெறே யாரும் வந்தா எல்லாம் நல்லா ஆயிடுமா?வேறே கட்சிக்காரங்க வந்தா எல்லாம் சரியாயிடுமா தாத்தா?”

”ஊஹூம்.ஊழல் ஏதாவது ரூபத்திலே,ஏதாவது அளவிலே இருந்துக்கிட்டேதான் இருக்கும்.பெருந்தலைவர் சொன்ன வார்த்தையிலே சொல்லணும்னா எல்லாம் ஒரே குட்டையிலே ஊறின மட்டைகள்தான்.”

”இதுக்கு முடிவுதான் என்ன தாத்தா”

”நீங்கதான்.உங்க தலைமுறை வந்துதான் எல்லாம் சரி பண்ணணும்.”

(நம்புவோம்.)

செவ்வாய், நவம்பர் 16, 2010

குட்டிக் கவுஜகள்!

புயல் அறிவிப்பால்
கடலுக்குப் போகவில்லை..
தண்ணீர்-
கடலில் மட்டுமல்ல
கஞ்சிக் கலயத்திலும்தான்.

-*-*-*-*-*-*-*-*-*-*-
நாய் விற்ற காசு குலைக்காது
ஆனால்
அக்காசில் வாங்கிய செருப்பு
கடித்தது!

-*-*-*-*-*-*-*-*-*-*-

திங்கள், நவம்பர் 15, 2010

காதல்-திருக்குறள் கதை-பகுதி-2

அந்த நாளுக்குப்பின் குமாருக்கு உலகமே வெறுமையாய்த் தோன்ற ஆரம்பித்தது. ”எங்கெங்கு காணினும்” அவளே தெரிந்தாள்.நோயால் பீடிக்கப் பட்டவன் போல் ஆனான்.எதிலுமே பிடிப்பில்லாத ஒரு நிலையில் இருந்தான்.

ஒரு வாரத்துக்குப் பின்-
ஞாயிறன்று தவிர்க்க முடியாத ஒரு திருமணத்துக்குப் போக நேர்ந்தது.வேண்டா வெறுப்பாகத்தான் சென்றான்.மண்டபத்தில் நுழைந்து,தெரிந்த சிலரிடம் பேசியவன்,மேடைப்பக்கம் நகர்ந்தான்.சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்றான்.அவள்! அவளேதான்!ஒரு வாரமாக அவனைப் பிடித்திருந்த நோய் நீங்கியது போல் உணர்ந்தான்.உள்ளத்தின் வெறுமை நீங்கி மகிச்சி பொங்கியது.

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து,”

(நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன;ஆனால் அணிகலன்கள் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.)

அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவன் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அவளுடன் பேசிக்கொண்டிருந்த இருவர் அகன்று விடத் தனியாக விடப்பட்ட அவள் திரும்பினாள்.அவள் பார்வை அவன் மீது விழுந்த அதே நேரத்தில் அவன் அவளை நெருங்கி விட்டான்.

”ஹலோ!”
”ஹாய்!”
” நான் குமார்-அஷ்வின் குமார்.சி.டி.எஸ் ஸில் வேலை பார்க்கிறேன்”
“காயத்ரி-டி.சி.எஸ்.
”அன்று நகர் மையத்தில் பார்த்தபின் இவ்வளவு விரைவில் உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை”
அவள் லேசாகச் சிரித்தாள்.அவள் அழகிய கண்களும் சிரித்தன.
சிரிக்கும்போது அவள் அழகு கூடுகிறது என்று எண்ணினான்.(என்ன அழகு,என்ன அழகு!)

“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு”

(மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி;முத்தே பல்;இயற்கை மணமே மணம்;வேலே மை உண்ட கண்.)

“பெண் வீட்டார் எனக்குத் தூரத்துச் சொந்தம்”-அவன்.
“பிள்ளை வீட்டார் எனக்குத் தூரத்து சொந்தம்”-அவள்

அவன் சிரித்தவாறு சொன்னான்”தூரத்து உறவினர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வந்த நாம் பக்கத்தில் வந்து விட்டோம்”.

அதன் பின் பேசினார்கள்,பேசினார்கள்,பேசினார்கள்--.சேர்ந்தே மேடைக்குச் சென்று பரிசுகளைக் கொடுத்தார்கள்;சேர்ந்தே சாப்பிடப் போனார்கள்.உறவினர்களிடம் விடை பெற்றார்கள். மண்டபத்தின் வாசல் வரை சேர்ந்தே வந்தார்கள்.

”மறுபடியும் எப்போது சந்திக்கலாம்?”அவன் கேட்டான்.
“ஏன் சந்திக்க வேண்டும்?’அவள் குறும்பாகக் கேட்டாள்.உடனே அவன் முகம் வாடியதைக் கண்டு சிரித்தவாறே சொன்னாள்”வரும் ஞாயிறன்று ஆர்ட் காலரியில் ஒரு ஓவியக் கண்காட்சி இருக்கிறது.காலை 10 மணிக்கு அங்கு இருப்பேன்."

அவன் சொன்னான்”அன்று அங்கு வருபவர்களுக்கு பிரச்சினைதான்-உயிரில்லாத ஓவியங்களை பார்ப்பதா அல்லது உயிருள்ள ஒவியத்தை ரசிப்பதா என்று”

அவள் அவன் தோளில் செல்லமாகத் தட்டி விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாள்.

அவன் அவள் தட்டிய இடத்தைத் தடவிக் கொண்டே இருந்தான்.அவள் போவதை பார்த்துக் கொண்டே நின்றான்.
” என்ன மென்மையான தொடுகை!ஒரு பூவால் தட்டியதைப் போல் ஒரு தொடுகை!எவ்வளவு மென்மையானவளாக இருக்கின்றாள் இவள்!”எண்ணினான்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்”
(அனிச்சப்பூவே!நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்!நீ வாழ்க!யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லிய தன்மை உடையவள்.)

ஒரு பெருமூச்சு விட்டான்.அடுத்த ஞாயிறுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

காத்திருப்பதும் ஒரு சுகம்தானே?

(உங்களுக்கும்தான்!)

வெள்ளி, நவம்பர் 12, 2010

காதல்-திருக்குறள் கதை

குமார் மென் பொருள் துறையில் பணி புரியும் ஓர் இளைஞன். சென்னையில் பிரம்மச்சாரி வாழ்க்கை.உடற்பயிற்சி யெல்லாம் செய்து உடலை முறுக்காக வைத்துக் கொண்டிருப்பவன்.கவர்ச்சியானவன்.ஒரு விடுமுறை நாளில் மிகவும் போர் அடிக்கவே ’நகர் மைய’த்துக்குச் சென்று சிறிது வேடிக்கை பார்த்து வரலாம் எனப் புறப்பட்டான். அங்கு நல்ல கூட்டம்,வேடிக்கை பார்க்க வந்தவர்,ஏதாவது வாங்க வந்தவர்,திரைப்படம் பார்க்க வந்தவர் என்று.அங்கு இருக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவனின் பார்வை ஓரிடத்தில் நின்றது.அங்கே ஒரு பெண்கள் கூட்டம்.
அக்கூட்டத்தில் ஒரு பெண் தனித்துத் தெரிந்தாள்.அவள் அழகைப் பார்த்து அவன் பிரமித்து நின்றான்.

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு”
(தெய்வப் பெண்ணோ!மயிலோ!கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ?என் நெஞ்சம் மயங்குகின்றதே)

அவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தான்.தலை முதல் கால் வரை பார்த்தான்.பின் மீண்டும் காலிலிருந்து தலை வரை மெள்ள அவன் பார்வை நகர்ந்தது.நடுவில் நின்றது,பார்த்தான்;பிரமித்தான்!

“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
(மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் ஆடை,மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது)

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது,அவளின் பார்வை அவன் பக்கம் திரும்பியது.அவள்கண்களை நேருக்கு நேர் பார்த்த அவன் ஒரு மின்னல் தாக்கியது போல் உணர்ந்தான்.

“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.”
(நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானேதாக்கி வருத்தும் அணங்கு,ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது)

இருவர் கண்களும் சில நொடிகள் கலந்து நின்றன.பின் அவள் தன் பார்வையைத்திருப்பிக் கொண்டாள்.குமாரும் அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்பது கூடாது என்று சற்றே வேறு பக்கம் திரும்பினான்.மீண்டும் பார்வையை அவள் பக்கம் திருப்பினான்.அது வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள்,தன் பார்வையைத் விலக்கினாள்.தலை கவிழ்ந்தாள்.

“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
(யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்;நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத்தனக்குள் மகிழ்வாள்).
இந்தப் பார்வை விளையாட்டு சிறிது நேரம் தொடர்ந்தது.அவன் அவளுடன் பேச விழைந்து,அவளை நோக்கி நடக்க முற்பட்டபோது,அவள் தன் தோழிகளுடன் அங்கிருந்து,புறப்பட்டு விட்டாள்.அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது தூரம் சென்ற பின் அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.மெல்லச் சிரித்தாள்.
பின் அவன் இதயத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

(இடைவேளை!)

திங்கள், நவம்பர் 08, 2010

வாங்க பழகலாம்--ரௌத்திரம்

ரௌத்திரம் பழகென்றான் பாரதி
உண்மைதான்
பழகத்தான் வேண்டும்
பழக்கமில்லாத எதுவும் பழகத்தான் வேண்டும்
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்
நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்
மனம் பழகப் பழகத்தான் ரௌத்திரம் வரும்
நாமெல்லாம் பழகி விட்டோம்-
ரௌத்திரமல்ல!
சகிப்புத்தன்மை-ஆம்
புரையோடிப் போய் விட்ட சமூக அவலங்களை நாம்
பழகி விட்டோம் சகித்துக்கொள்ள!
சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
நரி இடம் போனால் என்ன,
வலம் போனால் நமெக்கென்ன
நம்மைத்தாக்காதவரை என்னும் மனப்பாங்கால்
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
எல்லோரும் காந்தியா என்ன?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னமும் காட்டுவதற்கு!
நமது நேர்மையில் குறையில்லாத போது
ஒரு கன்னத்தில் அடித்தால்
திருப்பி ஒரு கன்னத்திலேனும்
அடிக்கும் துணிவு வர,
ரௌத்திரம் பழகு!
எளியோரை வலியோர் வாட்டினால்
வலியோரை வாட்ட வராது இன்று தெய்வம்!
எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!

வாங்க பழகலாம்!!

சனி, நவம்பர் 06, 2010

உதயசூரியனும்,இரட்டை இலையும்!

அம்மா அழைத்தார்
”உடனே வா தோட்டத்துக்கு” என்று
சிறிது தாமதித்தேன்
”வந்து பார்” என்று மீண்டும் அழைப்பு.
கை வேலையெல்லாம் காக்கப் போட்டு விரைந்தேன்.
தோட்டம் சென்றேன்.
ஆஹா! என்ன காட்சி!.
கம்பளம் விரித்தது போல்
தரையெங்கும் இலை மூடல்.
தரையெங்கும் கொட்டிக் கிடந்தது இலை!
நிமிர்ந்து பார்த்தேன்
மொட்டையாய் இலயுதிர்த்து நின்றது மரம்!
ஆயினும் சில நாட்களில்
மீண்டும் இலைகள் துளிர்க்கும்
இதுவன்றோ இயற்கை நியதி?
இருள் பிரிந்தும் பிரியா அக்காலையில்
மீண்டும் மரத்தைப் பார்த்தேன்.
அதோ ஒரிரு இலைகள் அசைகிறதோ?
அவை விழக்காத்திருக்கும் இலைகளா?
அன்றி விழுந்த பின் முளைக்கும் துளிர்களா?
உதித்தான் சூரியன்
மெள்ளப் பரவியது வெளிச்சம்
உதய சூரியனின் ஒளியிலே
பளிச்சென்று தெரிந்தது அந்தத்
துளிர்த்து வந்த இரட்டை இலை!

புதன், நவம்பர் 03, 2010

ஊழிக்கூத்து

பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!


ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!
நெற்றி நிறையத் திருநீரு பூசி வா!
திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!
தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!
மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!


நாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.
தொடங்கட்டும் ஊழிக் கூத்து!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!