தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 22, 2010

காதல்-திருக்குறள் கதை-பகுதி-3

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவள், தோளில் தட்டி விட்டுச் சென்ற இடம் இனித்தது.தோளில் எப்படி இனிக்கும் என்று யோசிக்காதீர்கள்!இது நாவின் சுவையல்ல;நெஞ்சின் சுவை.அதே சமயம் அவள் செல்வது நெஞ்சில் ஒரு சுகமான வலியாகப் பரவியது.ஒரு வாரம்!ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறோம் என்று நினைத்தாலே நெஞ்சின் வலி கூடியது;ஆனால் அடுத்த ஞாயிறன்று அவளைக் கட்டாயம் பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கை உடல் முழுவதும் ஒரு பரவசமாய்ப் பரவியது.ஒரே ஒரு பிரச்சினை.இந்த ஏழு நாட்கள் தொலைபேசக் கூடாது என்று அவ்ள் கண்டிப்பாகச் சொல்லிச் சென்று விட்டாள்.கடவுளே!நாட்களை வேகமாக நகரச்செய் என்று வேண்டினான்.


அந்த ஞாயிறும் வந்தது.மறுநாள் அவளைச் சந்திக்கப் போவதை நினைத்து நினத்து முதள் நாள் இரவு நித்திரை போயிற்று.ஞாயிறு காலை எழுந்தது முதல் நிலை கொள்ளவில்லை

ஒரு லக்னோவி குர்த்தா பைஜாமா அணிந்தான்(போகும் இடம் ஒரு ஒவியக்கண்காட்சி அல்லவா?).’ஹ்யூகோ பாஸ்’ செண்ட்டைத் தெளித்துக் கொண்டான்.புறப்பட்டான்.தான் முதலில் சென்று அவளை வரவேற்க வேண்டும் என்று எண்ணினான்.ஆனால் அவள் முந்திக் கொண்டாள்.காலரியின் நுழை வாயிலிலேயே காத்திருந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.ஒரு வாரப் பிரிவு முடிந்து இன்று பார்க்கும்போது எத்தனையோ பேச வேண்டும் என்ற எண்ணியதெல்லாம் அந்தக் கணத்திலே மறந்து போனது.கண்கள் பார்த்துக் கொண்டே இருந்தன.ஆயிரம் செய்திகள் பேசின.இதயங்கள் உருகி ஓடிச் சங்கமித்தன.அங்கு பேச்சா முக்கியம்?

”கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”

(கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமல் போகின்றன.)

அவள் கைகளை மெல்லப் பற்றினான்.என்ன மென்மை!இன்னும் பார்வைகள் விலகவில்லை.சுற்றுப்புறத்தை மறந்து ஒரு தனி உலகில் நின்றனர்.அவர்களை தாண்டிச் சென்ற சிலர் அவர்களப் பார்த்துச் சிரித்தவாறு சென்றனர்.

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

(யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால்,அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்.)

“இவள்தான்,இவள்தான் நான் தேடிக் கொண்டிருந்த என் துணை.இவளே என்னில் ஒரு பாதி.இவள் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை.இறைவா இவளை என்னிடம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி”—அவன் எண்ண ஒட்டம்.

”இவர்தான்.எந்த ஆடவனைப் பார்க்கும்போதும்,எந்த ஆடவோனோடு பேசும்போதும் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி இவரைப் பார்க்கும்போது என்னில் அலையலையாய்ப் பரவுகிறதே.இவரே என் துணை. இவரே இனி என் வாழ்க்கை;வாழ்க்கையின் பொருள்.”-அவள் எண்ண ஓட்டம்

கொஞ்ச நேரத்தில், கனவுலகை விட்டு நினைவுலகுக்கு வந்தனர்.

இனிய பிதற்றல்கள் ஆரம்பித்தன.


அவர்களை அவர்கள் உலகத்திலே கொஞ்சம் தனியாய் இருக்க விடுவோமா?

(இன்னும் வரும்)

5 கருத்துகள்:

  1. கதை விறுவிறுப்பாக செல்கிறது.
    ஆனால் இரண்டாம் பகுதிக்கும்
    மூன்றாம் பகுதிக்கும் இடையே
    இடைவெளி அதிகம் இருப்பதாக
    எண்ணுகிறேன்.ஒருவேளை அவள்
    ஒருவாரம் கழித்து பார்க்கலாம்
    என்றதால் நீங்களும் எழுத ஒரு
    வாரம் எடுத்துகொண்டீர்கள் போல.
    தங்கள் தொடர்கதை வராத போது
    இருந்த கோபம்(?) தொடர்கதையைப்பார்த்தவுடன்
    "எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
    பழிகாணேன் கண்ட விடத்து."
    என்ற குறள்சொல்வதுபோல் பறந்தோடிவிட்டது.

    பதிலளிநீக்கு
  2. @வே.நடனசபாபதி
    சில படத்தயாரிப்பாளர்கள்,ஒரு பெரிய படம் எடுக்கும்போது நடுவில் ஒரு சிறிய படம் எடுத்து வெளியிடுவார்கள்-பெரிய படத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவைப் படுவதால்.அது போலத்தான் இதுவும்.அதற்காகத்தான் நடுவில் ஐந்து இடுகைகளை இட்டு நிரப்பி விட்டேன்.
    அருமையான குறள் மேற்கோள் அதுவும் காமத்துப்பாலி லிருந்தே!
    நன்றி.
    @LK
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கற்பனை உலகில் மிதக்கும் காதலர்களை சிறிது காலம் தொந்தரவு செய்ய வேண்டாமே ! அந்த சுகம் அனுபவித்தவருக்குத்தான் தெரியும்.! நிஜத்தை காட்டிலும் கற்பனைக்குத்தான் வலு அதிகம் . தங்கு தடை இன்றி காதலர்கள் அவர்கள் உலகில் சஞ்சரிக்கட்டும் ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. @vasu,
    அடுத்து என்ன எழுதுவது என்று எனக்குத் தோன்றும் வரை அக்காதலர்கள் அவர்கள் உலகில் சஞ்சரிக்க வேண்டியதுதான்!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு