தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 12, 2010

காதல்-திருக்குறள் கதை

குமார் மென் பொருள் துறையில் பணி புரியும் ஓர் இளைஞன். சென்னையில் பிரம்மச்சாரி வாழ்க்கை.உடற்பயிற்சி யெல்லாம் செய்து உடலை முறுக்காக வைத்துக் கொண்டிருப்பவன்.கவர்ச்சியானவன்.ஒரு விடுமுறை நாளில் மிகவும் போர் அடிக்கவே ’நகர் மைய’த்துக்குச் சென்று சிறிது வேடிக்கை பார்த்து வரலாம் எனப் புறப்பட்டான். அங்கு நல்ல கூட்டம்,வேடிக்கை பார்க்க வந்தவர்,ஏதாவது வாங்க வந்தவர்,திரைப்படம் பார்க்க வந்தவர் என்று.அங்கு இருக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவனின் பார்வை ஓரிடத்தில் நின்றது.அங்கே ஒரு பெண்கள் கூட்டம்.
அக்கூட்டத்தில் ஒரு பெண் தனித்துத் தெரிந்தாள்.அவள் அழகைப் பார்த்து அவன் பிரமித்து நின்றான்.

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு”
(தெய்வப் பெண்ணோ!மயிலோ!கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ?என் நெஞ்சம் மயங்குகின்றதே)

அவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தான்.தலை முதல் கால் வரை பார்த்தான்.பின் மீண்டும் காலிலிருந்து தலை வரை மெள்ள அவன் பார்வை நகர்ந்தது.நடுவில் நின்றது,பார்த்தான்;பிரமித்தான்!

“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
(மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் ஆடை,மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது)

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது,அவளின் பார்வை அவன் பக்கம் திரும்பியது.அவள்கண்களை நேருக்கு நேர் பார்த்த அவன் ஒரு மின்னல் தாக்கியது போல் உணர்ந்தான்.

“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.”
(நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானேதாக்கி வருத்தும் அணங்கு,ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது)

இருவர் கண்களும் சில நொடிகள் கலந்து நின்றன.பின் அவள் தன் பார்வையைத்திருப்பிக் கொண்டாள்.குமாரும் அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்பது கூடாது என்று சற்றே வேறு பக்கம் திரும்பினான்.மீண்டும் பார்வையை அவள் பக்கம் திருப்பினான்.அது வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள்,தன் பார்வையைத் விலக்கினாள்.தலை கவிழ்ந்தாள்.

“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
(யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்;நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத்தனக்குள் மகிழ்வாள்).
இந்தப் பார்வை விளையாட்டு சிறிது நேரம் தொடர்ந்தது.அவன் அவளுடன் பேச விழைந்து,அவளை நோக்கி நடக்க முற்பட்டபோது,அவள் தன் தோழிகளுடன் அங்கிருந்து,புறப்பட்டு விட்டாள்.அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது தூரம் சென்ற பின் அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.மெல்லச் சிரித்தாள்.
பின் அவன் இதயத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

(இடைவேளை!)

7 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது. திருவள்ளுவர் இருக்காரே...சான்ஸே இல்ல போங்க

    பதிலளிநீக்கு
  2. நன்றாக இருக்கிறது. திருவள்ளுவர் இருக்காரே...சான்ஸே இல்ல போங்க

    பதிலளிநீக்கு
  3. @பலூன்காரன்
    //திருவள்ளுவர் இருக்காரே...சான்ஸே இல்ல போங்க//
    ம்மிகச் சரி!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. குறள்களின் மூலம் சாண்டில்யன் பாணியில் கதை துவங்கி உள்ள உத்தி புதுமை ஆனது ! இதயம் இழந்த இளைஞனின் நிலை என்ன ? வாசு

    பதிலளிநீக்கு
  5. @vasu
    //இதயம் இழந்த இளைஞனின் நிலை என்ன ? //
    கொஞ்சம் தவிக்கட்டும் அவ்விளைஞன்!--பொறுத்திருங்கள் நீங்களும்.நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
  6. மிக மிக அருமை சென்னை பித்தன் அவர்களே.

    'ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தது எப்படியோ?' என பாடத்தோன்றுகிறது
    .
    பறக்கட்டும் உங்களது கற்பனைக்குதிரை
    .
    தொடரட்டும் உங்களது பணி.

    பதிலளிநீக்கு
  7. நன்றி நடனசபாபதி அவர்களே,
    கற்பனைக்குதிரை பறக்கா விட்டாலும்,ஒழுங்காக ஒடுவதற்காவது உங்கள் வாழ்த்துக்கள் உந்துகோலாக இருக்கும் என நம்புகிறேன்.
    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு