தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 24, 2010

இதுதான் காதல்!இதுவே காதல்!

நேற்று இரவு.
மணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்து பார்த்தேன்.
எங்கள் குடியிருப்பின் இரவுக் காவல்காரர் நின்று கொண்டிருந்தார்,நெஞ்சை லேசாக அழுத்திப் பிடித்தபடி.முகத்தில் வேதனை.

பதறிப் போய்க் கேட்டேன்”.என்ன பெருமாள்,உடம்பு சரியில்லையா?”
அவர் இல்லை என்று தலையசைத்தவாறே கேட்டார்”குடிக்கக் கொஞ்சம் சுடு தண்ணி குடுங்க சார்”
ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது.டம்ளரில் ஊற்றிக் குடிக்கும் சூடாகக் கொடுத்தேன்.
படியில் அமர்ந்து வெந்நீரை அருந்தினார்.தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.புறப்படத் தயாரானார்.

நான் கேட்டேன்”என்ன பெருமாள்,என்ன ஆச்சு?”
சிறிது தயங்கினார்.பின் சொன்னார்”என் சம்சாரம் போன வருஷம் காலமாயிட்டா.இன்னிக்குக் காலையிலேதான் வருஷத் திதி கொடுத்தேன்.இப்போ உட்காந்துக் கிட்டு இருக்கும்போது,அவ நெனைப்பு ரொம்ப அதிகமா வந்து.உடம்பெல்லாம் பட படன்னு வந்துடுச்சு.எல்லாமே ஒரே இருட்டான மாதிரி இருந்திச்சு.அதுதான் சார்”

அவரது வயது 65 என்பது எனக்கு முன்பே தெரியும்.
நான் கேட்டேன்”உங்களுக்கு எந்த வயசிலே கல்யாணமாச்சு?”
“22 வயசிலியே முடிச்சு வைச்சிட்டாங்க சார்”

நான் யோசித்தேன்.42 ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பின் பிரிந்து சென்ற மனைவியை நினத்து,அவளது பிரிவின் தாக்கத்தால்,அவர் உள்ள அளவில்,அதன் காரணமாக உடல் அளவில் பாதிக்கப் படுகிறார் என்றால்,அந்த அன்பு,அவர்களிடை இருந்த நெருக்கம்,அவர்களின் பரஸ்பரப் புரிதல் எத்தனை உயர்வானது?
அது வெறும் அன்பா?மண உறவா?நெருக்கமா?
அதற்கும் மேல்........
இதுதான் காதல்.உண்மைக் காதல்.

அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.

இந்தக் காதலுக்கு அவரின் உணர்வுகளே தாஜ் மஹால்!

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

7 கருத்துகள்:

  1. நிகழ்வை நீங்கள் சொல்லிய விதம் அருமை..

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஹரிஸ் அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. அவருக்கு (காதலுக்கு) என் சார்பாக ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
  4. நிகழ்வுகளை விளக்கியிருக்கும் விதம் அருமை..

    http://niroodai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. @Saravana kumar
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, உங்கள் சல்யூட்டுக்கும் அவர் சார்பாக நன்றி.
    @ அன்புடன் மலிக்கா
    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ."அது வெறும் அன்பா?மண உறவா?நெருக்கமா?
    அதற்கும் மேல்........இதுதான் காதல்.உண்மைக் காதல்."
    உண்மைதான். நன்றாக சொன்னீர்கள். அதனால்தான்
    தெய்வப்புலவர் சொல்லுகிறார்.

    "வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னன் நீங்கும் இடத்து. " என்று

    தொடரட்டும் உங்களது பதிவு இலக்கிய பணி.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நடனசபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு