தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 04, 2010

குறள் சொல்லாக் கதை!

"குறை ஒன்றும் இல்லை-----”--கைபேசி-
"சொல்லு காயத்ரி,என்ன விஷயம்?"
"இன்னிக்கு சாயந்திரம் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவே அஷ்வின்?"
"எங்க எம்.டி.என்னைக் கூப்பிட்டு ரொம்ப முக்கியமான வேலை ஒண்ணைக் குடுத்திருக்காரு.இன்னைக்கு லேட்டா உக்காந்தாவது முடிச்சாகணும்.ஏன் கேட்ட?"
"இல்லே,இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்கிரமே வந்துடுவேன்.எங்கேயாவது வெளியே போயிட்டு டின்னரையும் முடிச்சுட்டு வந்துடலாம்னு நெனச்சேன்."
"ரொம்ப வருந்துகிறேன்,என் இனிய இதயமே!மற்றொரு நாள்?"
"அதை அப்போப் பார்த்துக்கலாம்.இன்று நான் வேறு ஏதாவது செய்து கொள்கிறேன்."


இரவு.வெளியே எங்கும் செல்ல மனமின்றி பீட்சா வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு,சிறிது நேரம் டி.வி.பார்த்துவிட்டு ,படுக்கையில் படுத்தபடியே புத்தகத்தைப் புரட்டிவிட்டுத் தூங்கிப் போனாள் காயத்ரி. தன்னிடம் இருக்கும் சாவியை உபயோகப்படுத்தி அஷ்வின் கதவைத் திறக்கும்போது விழிப்பு வந்தது.கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி இரண்டு.அஷ்வின் உள்ளே வந்து உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் அவளருகில் படுத்தான்.அவள் அவனை அணைத்து அவன் உதடுகளைத் தன் உதடுகளால் ஒற்றினாள்.
"காயத்ரி,நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்"சொல்லிய படியே அவன் தூங்கிப் போனான்.

மறு நாள்.
"யே தில் யே பாகல் தில் மேரா--------"அலைபேசி
"ஹலோஅஷ்வின்,சொல்லு."
"ஹை,காயத்ரி,ஒரு மகிழ்வான செய்தி.இந்த மாதத்திலிருந்து எனக்கு ரூ.10000/= சம்பள உயர்வு.இதை இன்று மாலை கொண்டாடலாம்,சரியா"



"வருந்திகிறேன், அஷ்வின்.இன்று எங்கள் அலுவலகக்கணினி செயல்பாட்டில் கொஞ்சம் பெரிய சிக்கல்.சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்ல முடியாது.எப்படியாயினும்,வாழ்த்துகள், அஷ்வின்"

"எனக்கு ஏமாற்றம்தான்;உடன் பணி புரியும் யாரையாவது அழைத்துச் சென்று கொண்டாடி விடுகிறேன்"

"யே தில் யே பாகல் தில் மேரா--------"அலைபேசி-
"ஹல்ல்லோ,என்ன காயத்ரி?'
"எங்க இருக்கே அஷ்வின்?"
"பார்க் ஷெரடன்.மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்"
"உடன் யார்?வழக்கமான நண்பர்களா?எதுவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்."
"இல்லை,இல்லை,நீ நினைப்பது போல் இல்லை.ஒரு நண்பியுடன் இருக்கிறேன்."
"யார்?"
"உனக்குத் தெரியாது.புதிதாகச் சேர்ந்தவள்.என் கீழ் பணி புரிகிறாள்.சுமிதா என்று பெயர்."
"ஒகே.நான் வீட்டுக்குக் கிளம்புகிறேன்.நீ சும்மா இருந்தால் வந்து அழைத்துப் போக இயலுமா என்று கேட்பதற்காகத்தான் பேசினேன்.நான் ராஜேஷை வீட்டில் கொண்டு போய் விடச் சொல்லி விடுகிறேன்."

இப்படித்தான் பலஇரவுகள் இவர்களுக்குக் கழிகின்றன.வேலைப் பளு,மாறுகின்ற இரவு நேர வேலை,வேலையில் இருக்கும் இறுக்கம்,அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் இவற்றின் காரணமாகப் பாதி இயந்திரங்கள் ஆகிப் போனார்கள்.ஒருவருக்கு மற்றவர் துணை தேவைப் படும் போது அது கிடைப்பதில்லை.

இவர்கள் காதலித்து மணந்தவர்கள். அப்போதாவது விடுமுறை நாட்களில் சந்தித்து மனம் விட்டுப் பேசி ஒருவர் அண்மையில் மற்றவர் மகிழ்ந்ததுண்டு.பார்க்காத இடைவெளியில் மனம் ஏங்கியதுண்டு.அப்போது இருவர் ரசனையும் ஒன்று போலத் தோன்றியது. ஒருவருக்காகவே மற்றவர் படைக்கப் பட்டவர் எனத்தோன்றியது. இப்போதோ--?அவள் ஒவியக் கண்காட்சிக்கு என்று சொன்னால் அவன் முகம் சுளிக்கிறான்.சினிமா போகலாம் எனச் சொல்கிறான்.அவள் கர்னாடக சங்கீதம் என்றால் அவன் மெல்லிசை என்கிறான். அப்போது காதலும் இருந்தது;காமமும் இருந்தது.
இப்போது,காதலிக்க நேரமில்லை;காமத்துக்கும் நேரமில்லை.என்றோ ஒரு நாள் முயக்கமும் வெறும் உடல்களின் கூடலாகத்தான் இருக்கிறது.

ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது-அதிகமான மண முறிவுகள்(மன முறிவுகளால் வந்தவை) மென் பொருள் துறையில் இருக்கும் தம்பதியரிடையேதான் எற்படுகின்றன என்று.

பணம் மட்டுமே வாழ்க்கையாகுமா?

இவர்களை ”இதுதான் காதல்,இதுவே காதல்” என்ற என் இடுகையின் (24-11-2010) நாயகனான இரவுக் காவல்காரருடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவர்கள் காதலித்து மணர்ந்தவர்கள்.

அந்த வயதான மனிதரும் ,இறந்து போன அவர் மனைவியும் மணந்தபின் காதலிக்கத் துவங்கியவர்கள்.

எது நின்றது? வென்றது?

4 கருத்துகள்:

  1. இன்றைய நிலையை நன்றாக அலசி உள்ளீர்கள். தற்கால விலைவாசியை நோக்கும்போது, கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால் தான் வாழ்க்கை சக்கரம் ஓடும் நிலையில் உள்ளது. அதற்காக உழைக்க ஆரம்பித்ததும், பணமே வாழ்க்கை ஆகிவிட்டது பரிதாபம் தான். அந்த வயதான மனிதருக்கு இவ்வளவு பணம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் மனைவியின் மேல் உள்ள காதல்?? மதிப்பிடமுடியாதது. இளைய தலைமுறை இதை உணரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. //பணம் மட்டுமே வாழ்க்கையாகுமா? // அருமையான கருத்து, நாம் தான் பணத்தை ஆள வேண்டும் பணம் நம்மை ஆளக்கூடாது.

    பதிலளிநீக்கு
  4. //நாம் தான் பணத்தை ஆள வேண்டும் பணம் நம்மை ஆளக்கூடாது.//
    சரியாகச் சொன்னீர்கள்,இனியவன் .
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு