தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 30, 2011

சூப்பர் சாப்பாடு.

நமது தமிழ்நாட்டுத்  தினசரி சைவ உணவு  மூன்று  வரிசை முறைகளைக் கொண்டதாக  இருக்கிறது.



--முதலில் சாம்பார் சாதம்,அடுத்து ரசம் சாதம்,கடைசியில் மோர் சாதம் என்று.



இவை மனிதனின் மூன்று குணங்களின் குறியீடு.



சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த குழம்பு.பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே 

காரக்குழம்பு,  புளிக்குழம்பு,வற்றல் குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.


(இங்கு ஒரு செய்தியைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.அந்தக்காலத்தில்

 மதுரை கணேஷ் மெஸ்ஸில்,சாம்பாரோடு,வெந்தயக் குழம்பு அல்லது மிளகு 

குழம்பு  ஏதாவது கொடுப்பார்கள்.ஆகா!!




குழம்பு என்றால்,குழம்பியிருப்பது.  குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;ஆனால்

ரசத்தில் காய் சேர்க்கப் படுவதில்லை,குழம்பில் சேர்க்கப்படும் காயைத் தான் 

என்றும் சொல்வார்கள். 

கி.வா.ஜ.அவர்கள் அழகாகச் சொல்வார்,குழம்பில் ’தான்’ இருக்கிறது எனவே


 குழம்பியிருக்கிறது.ரச்த்தில் ’தான்’ இல்லை ;அதனால் தெளிவாக 

இருக்கிறது.

 எங்கு ”தான்” இருக்கிறதோ அங்கு குழப்பம்தான் இருக்கும்.


  
குழப்பம் என்பது  தமோ குணத்தைக் குறிக்கும். எனவே குழம்பிய சாம்பார்  

 குழப்பம் நிறைந்த  தமோ குணத்தையும்,தெளிவான ரசம் ரஜோ 

குணத்தையும்,  மோர் சத்துவ குணத்தையும்  குறிக்கும்.

நமது இந்த உணவு நமக்கு அறிவுறுத்துவது நாம் செல்ல வேண்டிய பாதையை-

குழப்பம் நிறைந்த செயலற்ற நிலையிலிருந்து, தெளிவான செயல்பாட்டுக்குச் சென்று பின் கடைசியில்  ‘அறிந்துகொள்ளும்” நிலையை அடைவது.



இதெல்லாம் எழுதியதில் பசி வந்து விட்டது!

ஆனால் இப்ப  டிஃபன்தான்.

நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் இந்த.சாம்பார்,ரசம்,மோர் எல்லாம்..

சாப்பிட்டு விட்டு ”ஐ வாண்ட் சம் மோர் ”என்று சொல்லலாம்!

(இப்போதுதான் கவனித்தேன்.இந்த ஆண்டில் ஜனவரி முதல் இன்று வரை இப்பதிவுடன் 200 பதிவுகள் எழுதி விட்டேன்! நன்றி!நன்றி!!நன்றி!!!)


திங்கள், நவம்பர் 28, 2011

யார் தெரியுமா?!

படத்தில் இருப்பவர்களில் கலைஞரைத் தெரியும்;பெரியாரைத் தெரியும்;ஜகஜீவன்ராமைத்தெரியும் ஆனால் -----

அந்த மணமகன் -மணமகள் யார்?தெரிகிறதா?

புகைப்படம் -ஹிண்டு

சனி, நவம்பர் 26, 2011

அப்படிப் போடு!

சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிப் பகுதியில் இருந்த பையனிடம் ஒரு பெரியவர் வந்தார்.

“ஒரு அரைக்கட்டு பாலக் கீரை வேண்டும்”என்றார்.

பையன் சொன்னான்”ஒரு கட்டாகத்தான் வாங்க வேண்டும் .அரைக் கட்டெல்லாம்  விற்பதில்லை.”

அவர் கேட்கவில்லை.பையனிடம் தகராறு செய்தார்,

பையன் பார்த்தான்.”நான் போய் மேலாளரைக் கேட்டுச் சொல்கிறேன்” என்று  சொல்லி மேலாளர் அறைக்குப் போனான்.மேலாளர் ஒரு பெண்.

“ மேடம், ஒரு கிழட்டு முட்டாள் வந்து அரைக்கட்டுக் கீரை கேட்டுக் கழுத்தறுக் கிறான்” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்த்தான்.அந்தப் பெரியவரும் அவன் பின்னாலேயே அங்கு வந்திருந்தார்.

பையன் மேலாளரிடம் சொன்னான்”மேடம்,மீதிப்பாதியை இந்தப் பெரியவர் வாங்கிக் கொள்கிறாராம்.”

மேலாளர் புரிந்து கொண்டு அரைக் கட்டுக் கொடுக்கச் சொல்லி விட்டார்.

சிறிது நேரம் கழித்து மேலாளர் பையனைக்கூப்பிட்டார்.

“மிகப் புத்திசாலித்தனமாக நிலைமையை சமாளித்தாய்.உனக்கு எந்த ஊர்?

“இல்லாதபுரம்”என்றான் சிறுவன்

(நான் ஏதாவது ஊர்ப் பேரைச் சொல்லி யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாமே!)

”ஏன் ஊரை விட்டு வந்தாய்”மேலாளர்

“அங்கே  இருக்கிறவரெல்லாம் ஒண்ணு  அலுவகத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்,  இல்லை பொறுக்கியாய்  ஊர் சுற்றுகிறார்கள்”

“அப்படியா?என் கணவர் அந்த ஊர்தான்”என்றார் மேலாளர்.

பையன் கேட்டான்”எந்த அலுவலகத்தில் வேலை பார்த்தார்?”

கட்சி கலைக்கப் படுகிறது!தலைவர் வருத்தம்!


தனது கட்சி கலைக்கப்படுவதாக தலைவர் செ.பி. அவர்கள்  இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.அவரது கட்சி பற்றிய தகவல்கள் முன்பே இங்கு வெளியிடப்பட்டன. பாருங்கள்!

அறிக்கையின் விவரம்-

//இந்த ஆண்டு சனவரி மாதம் மிகுந்த எதிர்பார்ப்புடன் எனது ”அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம்” தொடங்கப்பட்டது.கட்சியின் அடிப்படைக் கொள்கையாக நேருவின் சோசலிஸம், காமராஜின் ஜனநாயக சோசலிஸம் ,ராஜாஜியின் தாராள மயமாக்கல்,பெரியார்,அண்ணாவின் சுயமரியாதைக் கொள்கைகள் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதக் கலவையான ”அநேகாபெராயிசம்” உருவாக்கப் பட்டது.மிக நல்ல திட்டங்களை மக்கள் முன்,குறிப்பாகப் பதிவர்கள் முன் வைத்தேன்.எதிர்கால இந்தியாவின் சுபிட்சத்துக்கான தாரக மந்திரம் அநேகாபெராயிசம் என்பதில் எனக்கு இப்போதும் ஐயமில்லை.

பதிவர் வாரியம் ஒன்று அமைத்துப் பதிவர்களுக்கு வீடு கட்டித்தருதல், இலவசக் கணினி வழங்குதல் போன்ற பல நல்ல திட்டங்களை பதிவர்கள் முன் வைத்தேன்.

பின் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கிடலாம் எனத்தீர்மானித்து அது பற்றிக்  கட்சியின் ஆதரவாளரான நாஞ்சில் மனோ அவர்களுடன் கலந்தாலோசித்தேன்.

ஆனால் இன்று நாடு இருக்கும் நிலையைப் பார்த்தால் என் கட்சி இந்த ஊழல் சூழலில் நிலைத்து நிற்க இயலாது எனத் தோன்றி விட்டது!விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறி விட்டது .எந்தக்கட்சியும் அது பற்றி உண்மையான கவலை கொள்ளாமல் முதலைக் கண்ணீர் வடிக்கும் அவல நிலையைப் பார்க்கிறேன்.மக்கள் படும் இன்னல் என்னால் காணச் சகிக்கவில்லை.இயலாமையில் மனம் புழுங்குகிறேன்.

எனவே சில நாட்கள் இந்தத்துன்பங்களைக் காணாத தூரத்துக்குப் போய்விடத் தீர்மானித்திருக்கிறேன். ஸ்விட்சர்லாந்து சென்று சில நாட்கள் இருந்து வருவேன்.
அதற்கு முன் கட்சியைக் கலைக்கும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

அநேகாபெராயிசம் வாழ்க! //

வெல்க தமிழகம்!

இந்த அறிக்கை வெளியிடும்போது கட்சியின் மற்ற இரண்டே உறுப்பினர்களான அவரது மகளும்,மகனும் உடன் இருந்தனர்!

வெள்ளி, நவம்பர் 25, 2011

பறவைகள் பலவிதம்-அரியவை

பாருங்கள்,ரசியுங்கள்,!

     அரியவை!

                                                          இமாலய மோனல்

                                                        ஃபார்மோசன் மேக்பை

                                              லேடி ஆம்ஹெர்ஸ்ட்’ஸ்  ஃபெசண்ட்

                                             குருதி  வடியும்  இதயக் குருவிகள்

                                                         பெயர் தெரியவில்லை!

                                                                நிகோபார் புறா


                                                      வின்சன் சொர்க்கப் பறவை

                                                      கோல்டன் ஃபெசண்ட்
                                                                                                                    
                                                                       

                                                   


                                                                      


                                                    




ஈத்துவக்கும் இன்பம்-(தொடர்ச்சி)

தொடர்கிறது--

கேள்வி.4-யாருக்குக் கொடுப்பது?

பல நேரங்களில் நாம் நம்மிடம் கேட்கும் நபர் பெறத்  தகுதியானவர் அல்ல என்ற ஒரு தவறான  அபிப்பிராயத்தை நாமே உருவாக்கிக் கொண்டு கொடுப்பதைத் தவிர்க்கிறோம்.அது தவறான அணுகு முறையாகும்.எனவே கொடுக்கும்போது   இது போன்ற முன் முடிவுகள் எடுக்காமல் கொடுக்க வேண்டும்.

கேள்வி.5-எப்படிக் கொடுக்க வேண்டும்?

யாருக்குக் கொடுக்கிறோமோ அவர் சிறுமைப்படும் விதத்தில் கொடுக்கக் கூடாது.கொடுப்பதில் அளவற்ற பெருமை காட்டி வாங்குபவரைச் சிறுமைப் படுத்தக் கூடாது.

கொடுக்கும்போது கூடப் பெறுபவர் கைதாழ்ந்தும் தன் கை உயர்ந்தும் இருக்கலாகாது என்னும் எண்ணத்தில் ,கர்ணன் கொடுக்க வேண்டிய பொருளைத் தன் கையில் வைத்து நீட்டப் பெறுபர் அதை எடுத்துக் கொள்வராம். சொல்வார்கள்”வலது கை கொடுப்பது,இடது கைக்குத் தெரியக்கூடாதுஎன்று. தான் கொடுப்பதை விளம்பரப்படுத்திப் பெருமை தேடாமல் பிறர் அறியாமல் கொடுப்பதே சிறந்தது.

கேள்வி.6- கொடுத்தவர் மன நிலை எப்படி இருக்க வேண்டும்?

இப்படிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்ததே என மகிழலாம்.ஆனால் நான் கொடுத்தேன் என்ற கர்வம் இருக்கலாகாது.கொடுத்து விட்டோமே என்ற வருத்தமும் இருக்கலாகாது.

ஆனால் ஏகலைவன் வருத்தம் வேறு விதமானது

ஏகலைவன் தனது வலது கைக் கட்டை விரலை துரோணருக்குக் குரு தக்ஷிணையாகக் கொடுத்த கதை நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால்       அதற்குப் பின் நடந்த ஒரு நிகழ்ச்சி அறியப்படாத ஒன்று.

ஏகலைவன் இறக்கும் நேரத்தில் அவனிடம் கேட்கப்பட்டது,அவன் தனது கட்டை விரலை வெட்டிக் கொடுத்ததற்காக எப்போதாவது வருந்திய துண்டா என்று.அவன் சொன்னான்”ஆம் .ஒரே ஒரு முறை வருந்தினேன். குருக்ஷேத்ரப் போரில், அஸ்வத்தாமன் இறந்தான் என்ற பொய்ச் செய்தியால், மனமுடைந்து,போரிடுவதை நிறுத்தியிருந்த ஆச்சாரியாரை பாண்டவர்கள் கொல்வித்தபோது வருந்தினேன்,என் வலது கைக் கட்டைவிரல் இல்லையே என்று.இருந்திருந்தால்,என் குருநாதரை யார் கொன்றிருக்க முடியும்?”

இந்த வருத்தம் முன்பே கொடுத்துவிட்டதால் ,மேலும் கொடுக்க இயலாமல் போய்விட்டதே என்னும் வருத்தம்.ஆக்க பூர்வமான வருத்தம்

கேள்வி.7-என் மக்களுக்கு நான் எவ்வளவு விட்டுச் செல்ல வேண்டும்?

வாரென் பஃபெட் அழகாகச் சொன்னார்”அவர்களுக்கு ஏதாவது செய்வதற்குத்தேவையானதை விட்டுச் செல்லுங்கள்.எதுவுமே செய்யாமல் இருப்பதற்குத் தேவையானதை அல்ல!”

ஆம்!அவர்களிடமிருந்து உழைப்பென்னும் உன்னதமான பொருளைப் பறித்து விடக்கூடாது.

கடைசியாக கபீர் அவர்களின்  அழகிய கூற்றுடன் முடிக்கிறேன்.

“உங்கள் வீடு செல்வத்தால் நிறையும்போதும்,நீங்கள் பயணிக்கும் படகு தண்ணீரால் நிறையும்போதும்,இரண்டு கைகளாலும் அள்ளி எடுங்கள். இறையுங்கள்.அதுவே நன்மை பயக்கும்”

டிஸ்கி:-இதை எழுதி முடித்ததும் ஒரு குறள் நினைவுக்கு வந்தது.யாராவது இதையும் சொல்வார்களோ? :))  

”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
 சொல்லிய வண்ணம் செயல்”                          !!

இயன்ற அளவு செய்யலாமே!

வியாழன், நவம்பர் 24, 2011

ஈத்துவக்கும் இன்பம்!


”ஊருணி நீர்நிறைந் தற்றே  உலகவாம்
பேரறி வாளன் திரு.”   ---   (திருக்குறள்)

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளனின் செல்வம்  ஊரார் நீர் உண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது .  (முனைவர்.மு.வ.)

ஆம்.அக்குளத்து நீர் பலரின் தாகம் தீர்க்கப் பயன்படுகிறது.அதில் நீர் இருக்குமளவும் அக் குளம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

 கொடுப்பது சிறந்தது.கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.ஆனால் இதிலும் பல கேள்விகள் எழுகின்றன.

அவை.......

கேள்வி.1)எப்போது கொடுக்க வேண்டும்?

மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. யாசகம் கேட்டு வந்த ஒருவனை தர்மபுத்திரன் மறு நாள் வருமாறு சொல்கிறான்.அதைக் கேட்டு பீமன் மகிழ்ந்தானாம் தன் அண்ணன் மரணத்தை வென்று விட்டான் என!ஏனென்றால் நாளை உயிருடன்   இருப்போம் என்ற நம்பிக்கையில் அல்லவா அவன் நாளை வரச் சொன்னான்! தருமனுக்கும் புரிந்தது.

எனவே நாளைக்காகக் காத்திருக்க வேண்டாம்.இன்றே,இப்போதே நல்ல நேரம்தான், கொடுப்பதற்கு.

கேள்வி.2)எவ்வளவு கொடுக்க வேண்டும்?
  
ராணா பிரதாப்,போரில் தோற்று அனைத்தையும் இழந்து நம்பிக்கையற்று இருந்த நேரத்தில் ,அவரது அமைச்சர் ஒருவர் தன் செல்வம் முழுவதையும்  ராணாவிடம் அளிக்க,அதை வைத்து ராணா படை திரட்டி,மீண்டும் போர் தொடுத்து வென்றாராம்.

எனவே பதில்”இயன்ற   அளவு கொடுங்கள்”

கேள்வி.3)என்ன கொடுப்பது?

பணம் மட்டுமல்ல.உங்களால் இயன்றது ,கொடுப்பது,ஒரு பூவாக இருக்கலாம்; புன்னகையாக இருக்கலாம்.

என்ன,எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல;எப்படிக் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம்!

எதைக் கொடுத்தாலும் அது முழு மனதுடன் கொடுக்கப்பட வேண்டும்.

திருமூலர் அழகாகச் சொல்வார்---

"யாவர்க்கு மாம்இறை வற்கொரு  பச்சிலை
 யாவர்க்கு மாம்பசு வுக்கொரு  வாயுறை
 யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
 யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே"


நான் திருப்பூரில் வங்கி மேலாளராக இருந்தபோது ஒரு வாடிக்கையாளர் சொன்னதை நான் மறக்க மாட்டேன்.அவர் கேட்ட கடனை நான் கொடுக்க வில்லை.ஆனால் அவர் சொன்னார்”நீங்கள் கடன் கொடுக்க வில்லை   என்று  எனக்கு வருத்தமேயில்லை.இயலாது என்பதையும் நீங்கள் சிரித்த முகத்துடன் சொன்னீர்கள்”.



(மேலும் சில கேள்விகளும் பதில்களும் நாளை)

புதன், நவம்பர் 23, 2011

ஸ்டார்ட் காமிரா! ஆக்‌சன் !( சென்ற இடுகையின் தொடர்ச்சி)

பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வந்த பின் நாடகம் மட்டுமல்ல,வேறு எந்தக் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. மீண்டும் மேடை ஏறப் பல ஆண்டுகள் ஆகி விட்டது.

வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி மன மகிழ் மன்ற விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.ஆச்சரியமாக மீண்டும் அந்த நாடகத்தில்  இரு வேடங்களில் (!) நடிக்க வேண்டியதாயிற்று -ஒரு ‘தொண தொணப்பு‘க் கிழவனார்,மற்றும் காவல் துறை ஆய்வாளர்.நாடகம் தொடங்குமுன் ஆய்வாளர் வேடத்தில் நாடகம் நடந்த சபா (ஆர்.ஆர் சபா) அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை சிறிது மிரட்ட அவர்கள் நிஜமாகவே பயந்தது ஒரு சுவையான அனுபவம்.வழக்கம்போல் இந்த நாடகத்திலும் என் நடிப்பு பாராட்டப்பட்டது.(டம் டம் டம்).

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி.சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,என் நண்பர் ஒருவர் மூலமாக.தொடரின் பெயர் “சந்திரலேகா”.அத்தொடரில் என்னுடன் பிரபலமான பலர் நடித்தனர்.நிழல்கள் ரவி, மலேசியாவசுதேவன்,. சபிதா ஆனந்த், பி.ஆர்.வரலட்சுமி, பிர்யதர்ஷினி முதலியோர்.கதாநாயகனின் அலுவலக முதலாளியாக ஒரு பாத்திரம் ஏற்றேன்.கதாநாயகியாக நடித்த பிரிய தர்ஷினிஅப்போது கல்லூரியில் படித்து வந்தார்.


முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் தோட்டத்தில்.முதல் நாளே சிறிது உருக்கமான காட்சி.படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயக நடிகர் “முதல் நாள் என்று சொல்கிறீர்கள்; ஆனால் மிக அனுபவமான நடிகர் போல நடிக்கிறீர்களே” என்று பாராட்டினார். மகிழ்வுந்தில் என்னைத் திரும்ப அழைத்து வந்த ஒருவர் “நான் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு இயல்பான ‘கெத்து’இருக்கிறது உங்களிடம்” என்று பாராட்டினார்.

பின் ஸ்ரீதேவி வீடு,ஏ.வி.எம்.ஸ்டுடியோ என்று நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடைபெற்றது.இயக்குனர் முதல் டச்-அப் பையன் வரை எல்லோரும் என் நடிப்பைப் பாராட்டினர்.

ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக் காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்த சானல் மூடப்பட்டது. 

அத்தொடர் வெளி வரவில்லை.

 இயக்குனர் பெயர் தினகரன்.சானல்,ஜே.ஜே. 

 அதன் பின் நானும் பணி மாற்றலில் புனே,அலகாபாத் என்று போய் விட்டேன்.  
2001இல்  விருப்ப ஓய்வில் திரும்பி வந்த பின் ஏனோமுயற்சி செய்யும் எண்ணமே வரவில்லை.

என் கவனமும் ஆன்மீகம்,ஜோதிடம் என்று திரும்பி விட்டது.

எல்லாம் அவன் செயல்!

டிஸ்கி:-என் ஆன்மீகப்பதிவுக்கு இங்கே க்ளிக்குங்கள்
               


செவ்வாய், நவம்பர் 22, 2011

குட்டி நடிகர் திலகம்!

        நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது, ஒரு சிவ ராத்திரியன்று இரவு, நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடித்தோம்.’நீதிபதி’ என்ற அந்த நாடகத்தை எழுதி இயக்கியவன் நான்தான்.அதில் கதானாயகனாக நடித்தவனும் நான்தான்.அடுக்குமொழி வசனங்கள் நிறைந்த(கலைஞரின் தாக்கம்!) அந்த நாடகம் பெரிய பாராட்டைப் பெற்றது.அந்த ஊர் இளைஞர் சங்கத்தினர் அவர்களின் அடுத்த நாடகத்தில் எனக்கு ஒரு பாத்திரம் அளிப்பதாகக் கூறினர்.ஆனால் நான் வேறு ஊர் சென்று விட்டதால் அவர்களின் நாடகத்தில் நடிக்கவில்லை.


           நான் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளியில் “நண்பர்கள் குழாம்”என்ற ஒருஅமைப்பில் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது நிகழ்ச்சி தயார் செய்து அளிக்க வேண்டும்.ஒரு மாதம் என் வகுப்பின் சார்பில் நான் ஒரு நாடகம் தயார் செய்து நானே முக்கிய வேடத்தில் நடித்தேன்.பொறாமை கொண்ட ஒரு மன்னனாக நடித்தேன்.என் நடிப்பு மிகவும் பாராட்டப் பட்டது.அந்த நேரத்தில் எங்கள் பள்ளி ‘முத்தமிழ் விழா’வுக்காக ஒரு நாடகம் தயாரிக்கப் பட்டு வந்தது.பெயர்’தமிழ் இன்பம்” என நினைக்கிறேன்——(பெயர்  சரியாக நினைவில் இல்லை.)என் நடிப்பால் கவரப்பட்ட குழுவினர் என்னையும் அந்த நாடகத்தில் சேர்த்துக் கொண்டனர். அந்த நாடகம் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த நாடகம்.நான் திருவள்ளுவர்  வேடத்தில் நடித்தேன்.


அதில் மன்னன் ஒருவனுக்கு அறிவுறுத்த நான் பேசிய குறள் இன்னும் மறக்கவில்லை.”உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” இந்த நாடகத்தில் நான் நடித்த மன்னன் நாடகமும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டு விட்டது.ஆக முதலிலியே நாடகத்தில் இரு வேடம் ஏற்று நடித்தேன்..திருவள்ளுவர் வேடத்தில் நடித்ததும் உள்ளே சென்று அவசரமாக ஒப்பனையைக் களைந்து மன்னன் வேடத்துக்கான ஒப்பனை செய்து கொண்டு உடைகளைத் தரித்துக் கொண்டு தயாரானது மிக சுவாரஸ்யமான அனுபவம்.


பள்ளி ஆண்டு விழாவில் ‘ராஜ ராஜ நரேந்திரன்’ என்ற நாடகம் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.ஏற்கனவே நல்ல நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் அந்த நாடகத்திலும் எனக்கு ஒரு வேடம் தருவதாக முடிவு செய்யப்பட்டது.நான் முன்பு நடித்த மன்னன் பாத்திரம் ஒரு வில்லத்தனமான நாயகன் என்பதால் இந்த நாடகத்திலும் எனக்கு ‘மகாசயர்’ என்ற வில்லன் வேடம் என்று முடிவு செய்தார்கள்(image ! !).ஆனால் கதானாயகன் நரேந்திரனாக நடிப்பதற்கு சரியான மாணவன் கிடைக்காததால் நானே நரேந்திரனாக நடித்தேன். அதில் சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கும் போது என் துரோணாசாரியார் ‘சிவாஜி’ அவர்களையே மனதில் நிறுத்தி நடித்தேன்.என் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.என்னை எல்லோரும் “குட்டி நடிகர் திலகம்” என்று அழைக்கத் தொடங்கினார்கள்.


இதே நாடகம் கோடை விடுமுறையில் நடக்கும் பொருட்காட்சியிலும் நடத்தப்பட்டது.என் ஜோடி அம்மங்கையாக நடித்த மாணவன் என்னை விட சிறிது உயரம்.எனவே அவனை மேடையில் சிறிது தலையைக்குனிந்து கொண்டே நடிக்கச் சொல்லியிருந்தேன்.இருந்தும் இந்த உயர வித்தியாசம் பார்வையாளர்களிடம் கேலிச் சிரிப்பை எழுப்பியது.நாடகம் பார்க்க வந்திருந்த என் தாயார் மற்றும் சகோதரிக்கு சிறிது சங்கடத்தை எற்படுத்தியது.ஆனால் சிறிது நேரம் சென்று என் முக்கிய காட்சி வந்ததும் சிரித்தவர்கள் எல்லாம் என் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தனர்.என் தாயின் அருகில் அமர்ந்திருந்த பெண் ”இந்தப் பையன் சிவாசி மாதிரியே நடிக்குதே”என்று வியந்து பாராட்டவும் என் தாயார்”என் மகன்தான்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் களாம்.

இந்த நாடகத்தில் “தூது நீ சொல்லி வாராய்” என்று நிலவைப் பார்த்து நான் பாடும் பாட்டு ஒன்று உண்டு.இது வேண்டாம் என்று முதலில் முடிவு செய்தோம்.ஆனால் அந்தக் காட்சி வருவதற்கு முன்னால் எங்கள் தமிழ் ஆசிரியர் அந்தப்பாட்டையும் சேர்க்கச் சொல்லி விட்டார்.அது காட்சி அமைப்பாளருக்குத் தெரியாது எனவே நான் பாட ஆரம்பித்தவுடன் நிலா காணாமல் போய் விட்டது!! (நான் பாடியது நிலாவுக்கே பொறுக்க வில்லை.ஹா,ஹா)

இப்படியாக பள்ளியில் என் நடிப்பின் காரணமாக ஒரு ராஜாவாகவே வலம் வந்தேன்.இதில் என் கணித ஆசிரியருக்குத்தான் வருத்தம்-’நடிப்பு வந்து என் படிப்பைக் கெடுத்துவிட்டது’ என்று...

(இன்னும் வரும்)

இது ஒரு மீள் பதிவு-சில மாற்றங்களுடன்.

திங்கள், நவம்பர் 21, 2011

தலயா,தளபதியா?அதுதான் கேள்வி!

தொலைபேசி மணி ஒலித்தது.

எடுத்தேன்.

“ஹலோ!சென்னை பித்தன் பேசுகிறேன்”

மறுமுனையிலிருந்து குரல்”ஹலோ!நான் ஏபிசி ஃபில்ம்ஸிலிருந்து மாக்கான்   பேசுகிறேன்.நான் தயாரிப்பாளர்.நம்ம டைரக்டர் உங்க “அங்கதன் காத்திருக்கிறான்” படிச்சுட்டு ,அதை டெவலப் பண்ணி ஒரு    நல்ல திரைப் படமாக்கலாம்னு  நினைக்கிறார்.பழி வாங்கும் மெயின் லைனுடன்,காதல்,சென்டிமெண்ட்,சண்டை எல்லாம் சேர்த்து ஒரு ஸ்க்ரீன்ப்ளே அவுட்லைன் ரெடி பண்ணி நாளை மாலை 4 மணிக்கு எங்க ஆஃபீசுக்கு வாங்க.முடிச்சுடலாம்.”


“சரி” சொல்லி விட்டுத் தொலை பேசியை வைத்தேன்.தலைகால் புரியவில்லை.மக்கு இப்படி ஒரு ஆஃபரா? இப்பவே தொடங்கிடலாம்.


தனியாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்.5 மணி நேர வேதனைக்குப் பின், பிறந்தது ஒரு அவுட்லைன்!


மறுநாள் போனேன்.மாக்கான்,இயக்குனர் பள்ளம் மண்டு ,இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்.


நேரத்தை வீணாக்காமல் தொடங்கினேன்.


//ஒரு கிராமம்.அங்கு கோவில் திரு விழா.பெண்கள் பொங்கல் வைக்கிறார்கள்.     குலவையிடுகிறார்கள்.ஆட்டம் ஆரம்பம்.ஒரு       வாலிபன்  பாடுகிறான்  அய்யனார் சாமி வந்து எங்களைக் காப்பாத்து நீ” என்று,தொகையறாவாக”.


இப்போ ஹீரோ எண்ட்ரி.”நான் ஜெயிக்கப் பிறந்தவண்டா ”என்று பாடியபடி.


பாட்டு முடியும்போது சில ரவுடிகள் வந்து கலாட்டா செய்ய,ஹீரோ  எல்லாரையும் உதைத்து அனுப்புகிறார்.

கோவிலில் கிராமத் தலைவனான சித்தப்பாவுக்கு முதல் மரியாதை நடக்க,ஹீரோ மனம் புழுங்குகிறார்.


வீட்டுக்குத் திரும்பிய பின் அம்மாவிடம் பொருமுகிறான்.நான் நடந்ததை   யெல்லாம் மறக்கவில்லை. என்று சொல்ல ஃப்ளாஷ் பேக்கில் அவன் சிறுவனாயிருந்தபோது,ஒரு நகர அரசியல்வாதி துணையுடன்  சித்தப்பா அவன் தந்தையைக்கொன்று தலைவைனான காட்சி மனதில் விரிகிறது.


இது முடிந்ததும்,ஹீரோவுக்கு சென்னை அப்போலோ மருத்துவ மனையிலிருந்து  பணி நியமன உத்தரவு வருகிறது.


ஆம் .ஹீரோ ஒரு டாக்டர்.லண்டனில் போய்ப் படித்தவர்.


அவர் அம்மா முறுக்கு சுட்டு விற்று பணம் சம்பாதித்து அவரைப் படிக்க வைத்தார்.ஹீரோவும் இந்தியாவிலேயும்,பின் லண்டனிலும் பகுதி நேர ஊழியம் செய்து சம்பாதித்தார்---(இதுவும் ஃப்ளாஷ் பேக்.)


லண்டனில் ஒரு சக தமிழ் மாணவியுடன் காதல் ஏற்படுகிறது.

(லண்டன் பாரிஸ்,ஸ்விட்சர்லாந்து இங்கெல்லாம் டூயட் பாட்டு).எல்லாம் ஃப்ளாஷ்பேக்.


சென்னை செல்லும்முன் சித்தப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், ஹீரோ போய்ப் பார்த்து ஒரு ஊசியும் போடுகிறான்.


பின் சென்னைப் பயணம்.அங்கு காதலி கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அவள் அப்பாதான் ஹீரோவின் தந்தையைக் கொன்றவர். காதலா?கடமையா?

(இங்கே ஒரு பாட்டு வச்சிக்கலாம்)


ஹீரோ ஒரு முடிவுடன் காதலைத் தொடர்கிறான்.


ஒரு முறை பீச்சில் காதலியுடன் இருக்கும்போது,ரவுடிகளுடன் ஒரு சண்டை!

ஒரு சமயம் காதலி அவள் அப்பா இருவருக்கும் டெங்கு வந்து விட,ஹீரோ வந்து ஊசி போடுகிறான்.


இதற்கிடையில் சித்தப்பா மாரடைப்பால் மரணம் என்று செய்தி வர ஹீரோ ஊருக்குப் போகிறார்.அங்கு அவர் தலைவராகிறார். இனிக் கிராமத்திலேயே பணி புரிவேன் எனச் சொல்லிச் சென்னை திரும்புகிறார்,வேலையை ராஜினாமா செய்ய.


சென்னைக்கு வந்து பணியிலிருந்து விலகக் கடிதம் கொடுத்துச் சில நாட்கள் இருக்கும்போது காதலியின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். காதலியைத் தேற்றி  ஊருக்குச் சென்று அன்னையிடம் பேசி விட்டு வருவதாகச் சொல்லிப் போய்,அன்னையைக் கண்டு.தான் கண்டுபிடித்த மருந்தால் இருவரையும் கொன்ற விஷயத்தைச் சொல்கிறார்அந்த மருந்து மெல்ல வேலை செய்து ஒரு மாதம் கழித்து மாரடைப்பை ஏற்படுத்தும், எதுவும் கண்டு பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்.


அவரைத்தேடி வந்த காதலி அதைக் கேட்டு விட்டு,அவரைக் கொலை காரன்  என்று சொல்லி அழ.ஹீரோவின் தாய் அவளிடம் பழைய நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லிச் சமாதானப்படுத்தி இருவர் கைகளையும் இணைத்து வைக்கிறார்!

டாக்டர் தொழிலை பயன்படுத்தி இரு கொலைகள் செய்த தான் இனி அத் தொழிலைச் செய்யப்போவதில்லை என்றும்,விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும்  ஹீரோ சொல்கிறார்.

முடிவில் அவர் தந்தை பெயரில் ஒரு மருத்துவ மனை  நிறுவி அதை ஹீரோயின் கவனித்துக் கொண்டிருக்க,ஹீரோ டிராக்டர் ஒட்டி வயலை உழுதிடும் காட்சியோடு படம் முடிகிறது.

சுபம்----//

எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

“படத்துக்கு டைட்டில் “அங்கதன் F.R.C.S” என்று வைக்கலாம்” நான்.

அதுவும் பிடித்துப் போகிறது.

”பதிவர்கள் கவிதை வீதிசௌந்தரையும்,அம்பாளடியாளையும் பாட்டெழுதச் சொல்லலாம்”நான்.

எந்த ரோல் யார் யார் என்பதும் முடிவாகிறது.
ஹீரோயின் த்ரிஷா!(செங்கோவி மன்னிக்க)ஹீரோ?

இயக்குனர் பள்ளம் சொல்கிறார்” யோசிக்கலாம், அஜீத் அல்லது விஜய்--யார்?”

”அதுதான் கேள்வி!!”

சனி, நவம்பர் 19, 2011

பரல்கள்!

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் வே,நடனசபாபதி அவர்கள் ஒரு புதிர் வாக்கியம் கொடுத்து விடை தெரியுமா எனக் கேட்டிருந்தார்.

“பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
காலெடுத்துத் தேய்”.           இதுதான் அந்த வாக்கியம்.

இதன் விடை,விளக்கமாக--

பத்துரதன் புத்திரன் --தசரதன் மகன்,இராமன்.
அவன் மித்திரன் ------சுக்கிரீவன்
அவன் சத்துரு----------வாலி
அவன் பத்தினி---------தாரை
காலை எடுத்தால்------தரை---இதுதான் விடை!!
-------------------------------------------------------------------------
 
 தெரிந்தால் சொல்லுங்கள்!

1)ஒவ்வொரு விதிக்கும் ஒரு விலக்கு உண்டு என்பது விதியானால்,அந்த விதிக்கும் விலக்கு உண்டா?

2)ஆலயத்தின் உச்சியில் இடிதாங்கி வைப்பது நம்பிக்கையின்மையைக் காட்டவில்லையா?

3)தொலைபேசியிலும்,கணிப்பொறியிலும் எண்கள் வரிசை மாறி இருப்பதேன்?

-----------------------------------------------------------------------------------------------
நடத்துனர் பயணிகளிடம் டிக்கட் வாங்கி விட்டார்களா எனப் பார்த்துச் சீட்டுக் கொடுத்து வந்தார்.

பயில்வான் போல் உடலுடன்.பெரிய மீசையும்,முரட்டுத்தொற்றமுமாக ஒருவன் சீட்டு எடுக்கவில்லை எனத் தெரியும்.ஆனால் அவனிடம் பயந்தவாறே கேட்டார்.”இருக்குது” என அழுத்திச் சொல்லி விட்டான். தினமும் இது நடந்தது.

ஒரு முடிவுக்கு வந்தார்.

ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து,உடலை வலுப்படுத்திக் கொண்டார். சிறிது கராத்தேயும் கற்றுக் கொண்டார்.

சில மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அவனிடம் கேட்டார் “டிக்கட் எடுத்தாச்சா”

”இருக்குது”  வழக்கம்போல் பதில்.

”இருந்தாக்காட்டு” என்றார் நடத்துனர்.

அவன் தன் பையில் இருந்து பஸ் பாசை எடுத்துக் காட்டினான்!


மேலாண்மைப் பாடம்
“முதலில் பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதா என்பதை முடிவு செய்யுங்கள்,இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதை விடுத்து!!”

 --------------------------------------------------------------


”திருமணமாகாத மகள் வந்து சொன்னாள்

அம்மா நான் கர்ப்பம் என்று

அம்மா முறையிட்டாள் கடவுளிடம்

”அய்யோ ஆண்டவா ஏன் இப்படிச் செய்தாய்?”

அவனுக்கும்  கோபம் வந்தது!”




வெள்ளி, நவம்பர் 18, 2011

அங்கதன் காத்திருந்தான்---(நிறைவுப் பகுதி)



அன்னை உரைத்தபடி சுக்ரீவனிடமும் இராமனிடமும் ஆசி பெற அங்கதன் சென்றான்.இருவரும் இணைந்தே காணப்பட்டனர்.சுக்ரீவனை முதலில் வணங்கினான்.அவனும் ஆசி கூறினான்.பின் இராமனை வணங்கினான். ”நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ்வாய்” என வாழ்த்திய இராமன்,அவனை மார்புறத்தழுவினான்.அந்த நேரத்தில் அங்கதன் ஒரு புதிய அனுபவத்தை அடைந்தான்.எங்கோ மிதப்பது போன்ற அனுபவம்.மயிர்க் கூச்செரிந்தது.

அணைப்பிலிருந்து விடுபட்ட அங்கதன் தன் கோபம் குறைந்தது போல் உணர்ந்தான்.

”கூடாது.இவன் என் தந்தையைக் கொன்றவன் .காலம் கருதி நான் இப்போது நட்புடன் இருப்பேன்.காத்திருப்பேன் தகுந்த காலத்துக்காக”என மனதுள் உறுதி பூண்டான்.

சிறிது காலத்துக்குப் பின் சீதையைத் தேடி பல திசைகளிலும் வானரர்கள் சென்றபோது அங்கதனும் அதில் ஒருவன்.

பின் சீதையை அனுமன் கண்டு வந்து சேதி சொன்னபின்,இராமன் வானர சேனையோடு போருக்குப் புறப்பட்டான். போருக்கு முன் தூது அனுப்ப வேண்டும் என்று எண்ணியபோது இராமன் அங்கதனைத்  தேர்ந்தெடுத்தான்.

அங்கதன் போய் இராவணனைச் சந்தித்தான்.அப்போது அவன் கேட்ட கேள்வி அங்கதனைக் கலங்கச் செய்தது.

'"தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து, இரு கை நாற்றி,
பேதையன் என்ன வாழ்ந்தாய்"” என்று அவன் கேட்ட போது, அங்கதன் தன் நிலைமைக்காக நொந்தான்.தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்,

 ”காலம் வரும் அது வரை காத்திருப்பேன்.” என்று.

எல்லாம் முடிந்து கிஷ்கிந்தை திரும்பியதும் அங்கதன்  அன்னையைக் காண ஓடோடி வந்தான்.

“அம்மா!நடந்ததைக் கேள்விப் பட்டீர்களா?”

“எதைச் சொல்கிறாய் மகனே?இராமனின் வெற்றிதானே”

“அதுவல்ல.அதற்குப் பின் நடந்தது.இராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னானே அது.சே,தன் மனைவி மீதே நம்பிக்கை இல்லாத இவன் ஒரு ஆண்மகனா?”

“”தவறு மகனே! இராமனுக்கு மனைவி மீது முழு நம்பிக்கை இருந்ததால் தான் துணிந்து தீக்குளிக்க செய்து அதன் மூலம் உலகத்தாருக்கு உணர்த்தச் செய்தான்.அவள் ஒரு கற்புக்கனல்.அக்கனலை தீ ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவன் அறிவான்!”

அங்கதன் யோசனையுடன் அகன்றான்.

இராமன் அயோத்தி திரும்பினான்.

சில நாட்களுக்குப் பின் செய்தி வந்தது.இராமன்,யாரோ ஒருவனின் அவதூறுப் பேச்சைக் கேட்டுச்  சீதையைக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று.

அங்கதன் தாரையிடம் சொன்னான்.

தாரை கலங்கிப்போனாள்.எப்படி, ஏன்,என்று ஆயிரம் கேள்விகள்.

அங்கதன் சொன்னான்”அம்மா!அன்று சொன்னீர்கள்.இராமன் தன் மனைவியை நம்புகிறான் என்று.இப்போது என்னநடந்தது?எவனோ ஒருவன் சொன்ன சொல்லுக்காக மனைவியைக் காட்டுக்கனுப்பி விட்டான்.
யாருமே செய்யத் துணியாத ஒரு கொடுஞ்செயல் செய்தான்”

தாரை சொன்னாள்”மகனே! இராமன் அரசன்.அவன் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாயிருக்க வேண்டும்.எனவேதான் இந்த முடிவு எடுத்திருக்கிறான்.அவன் சீதையை எவ்வளவு நேசித்தான் என்பது யாவரும் அறிந்ததே.வனத்தில் சீதையைப் பிரிந்தபோது நிலை குலைந்து போனானே!”

”தன் உயிரினும் மேலான சீதையை இன்று பிரிந்து தன்னைத்தானே தண்டித்து  கொண்டு ,உயிரற்ற உடல் போல் இருக்கும் அவனுக்கு வேறென்ன தண்டனை இனி நீ தரப்போகிறாய்? விட்டு விடு .”

அங்கதன் சிந்தித்தான்.” /ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை, பிரிந்த பின்னை,/ இராமன் ஒரு உயிரற்றவன்தான் அவனைக் கொல்லுதல் நமக்கு அழகன்று.”

ஆனால்...........

இன்று அரச போகத்தில் தன்னை மறந்து ,நாட்டை மறந்து.குடி,பெண்டிர் எனப் போகத்தில் இருக்கும் அந்தத் துரோகி சிற்றப்பன்?இப்போதே நாட்டு மக்கள் என் மீது அதிக அன்பு கொண்டுள்ளனர். அதிகம் படை வீரரும் நான் சொல்வதைக் கேட்கச் சித்தமாயிருக்கின்றனர். நாள் நெருங்கி விட்டது. அந்த சுக்ரீவனை நிச்சயம்  கொல்வேன்”

அங்கதன் காத்திருந்தான்!


டிஸ்கிஇது முழுவதும் கற்பனையே.இராமாயணத்தில் இதற்கான கிளைக் கதையோ,கருவோ கிடையாது.

தந்தையின் வீரத்தைக் கண்டும் அது பற்றிப்பலர் கூறக்கேட்டும் வளர்ந்த ஒரு சிறுவன்,தன் தந்தை வஞ்சகமாக் கொல்லப்பட்டார் என்றறியும்போது, என்ன மன நிலையை அடைவான்?அதைத்தான் நான் இங்கு கதையாக்கி விட்டேன்.இது முழுவதும் அங்கதன் பார்வையே!


”மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை,”----போற்றுகிறேன்!.

நன்றி.