தொடரும் தோழர்கள்

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

காலம் மாறிப் போச்சு!!

                  நாட்டின் பிரதமர் முதியய  பெண்மணியின் காலில் விழுந்தது அந்தக்காலம்
                 
                           நாடாள நினைப்பவர் காலில் மூதாட்டி விழுவது இந்தக்காலம் !!
                                   
                                                            மேரா பாரத் மகான்!



      

திங்கள், பிப்ரவரி 27, 2012

பவர்கட்!

     
               கரண்டே இல்லையாம்!அப்புறம் டியூப் எதுக்குடா?         
                             கழட்டு சொல்றேன்!!        

   நன்றி:N.Sekar

சனி, பிப்ரவரி 25, 2012

ரஜினியின் ”எங்கிட்ட மோதாதே!”

                           என் கிட்ட மோதாதே!தூள் தூளாயிடுவே!

ஒரு கொள்ளை!ஒரு என்கௌண்டர்!ஒரு கேள்வி!

எதிர்பார்க்கவேயில்லலை,இப்படி நடக்குமென்று

கொள்ளை போய்விட்டது, என் இதயம்

பார்வை ஒன்றிலே திருடி விட்டாள் அவள்

யாரும் அறியாமல்,மௌனமாக நிகழ்ந்த கொள்ளை

கொள்ளை அடித்தவரை நேசிக்கும் விந்தை இங்குதான்!

ஆம்,கொள்ளைக்காரி அவளை நான் காதலித்தேன்.

உலகமே அழகுமயமாய்த் தெரிந்த காலம் அது

ஆனால் ஒருநாள்

மீண்டும் எதிர்பாராதது நிகழ்ந்தது.

ஒரு என்கௌண்டரில் அவள் என்னைச் சுட்டு விட்டாள்

“என்னை மறந்து விடுங்கள்” என்ற மூன்று சொற்களால். 

தொடக்கமும்  மூன்று சொற்கள்

முடிவும்     மூன்று  சொற்கள்!

ஆனால் என் இதயத்தைத் திருப்பித்தராமலே

அவள் சென்று விட்டாள்

கொள்ளையர்களை என்கௌண்டரில் கொல்வார்கள்

ஆனால் இங்கோ!

பறி கொடுத்தவனே என்கௌண்டரில் கொல்லப்பட்டு விட்டான்!

இது என்ன நியாயம்?

நீங்களே சொல்லுங்கள்!


டிஸ்கி1:தலைப்பு எழுதி விட்டுப் பதிவு எழுதுவது என்பது இதுதான்!




வியாழன், பிப்ரவரி 23, 2012

சிங்கமா?குரங்கா?


  கென்யாவில் ஒரு மிருக்காட்சி சாலையில் ஒரு சிங்கம் இருந்தது.மிருகங்களை நன்கு பராமரிக்க வசதியற்ற இடம், அது.சிங்கத்துக்கு ஆட்டுக்கறி அளிக்கப் பட்டாலும் ,அது போதவில்லை..தனக்கு விடிவு காலம் வராதா என ஏங்கியது.   ஒரு நாள் துபாயின் ஒரு மிக வசதியான மிருகக்காட்சி சாலையில் இருந்து வந்த மேலாளர் அந்த சிங்கத்தை துபாய்க்கு அனுப்பச்சொல்லி எற்பாடு செய்தார்.அந்த சிங்கத்துக்கு மிக மகிழ்சி. வசதியாக  வயிறு நிறைய நல்ல ஆட்டுக்கறி சாப்பிட்டு வாழலாம் என நினைத்தது.

துபாய்க்குச் சென்றதும் முதல் நாள் அதற்கு உணவு வழங்கப்பட்டதுஅதற்கு ஏமாற்றம்!பத்து வாழைப்பழம் !இடம் மாற்றத்தினால் சீரணம் ஆவது பிரச்சினையாகுமோ எனப் பயந்து பழம் கொடுத்திருப்பார்கள் என நினைத்தது.

ஆனால் தொடர்ந்து இரு நாட்கள் இது போலவே நடந்தது.மறு நாள், உணவளித்த மனிதனிடம் அது கேட்டது”நான் சிங்கம்!எனக்கு இப்படியா உணவளிப்பது?”

அவன் சொன்னான்”நீ சிங்கம்தான் தெரியும்.ஆனால் நீ இங்கு வந்திருப்பது ஒரு குரங்கின் ’நாட்டு நுழைவனுமதி’யில்!”(visa)
..
..
..
..
நீதி:வெளிநாட்டில் குரங்காக வாழ்வதை விடத் தன் நாட்டில் சிங்கமாக வாழ்வது சிறந்தது!


புதன், பிப்ரவரி 22, 2012

ஹலோ,ஹலோ சுகமா?

பொதுவாகவே எல்லோரும் தொலைபேசியைக் கையில் எடுத்ததும் சொல்லும் முகமன் ”ஹலோ” என்பதுதான்.

ஆனால் நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக,தொலைபேசியில் ஹலோ சொல்வதில்லை .மாறாக”ஓம் நமச்சிவாய”என்று சொல்லி வருகிறேன்.என் நண்பர்களின் வீடுகளில் என் நண்பருடன் நான் பேச எண்ணும்போது தொலபேசியை எடுப்பவர்-அவர் மனைவி ,மக்கள்-யாராயிருப்பினும் “ஓம் நமச்சிவாய பேசுகிறார்” என்று சொல்லி விட்டுத் தொலை பேசியை நண்பரிடம் கொடுக்கிறார்கள்.தொலை பேசியில் மட்டுமன்றி நேரில் சந்திக்கும் நேரங்களிலும் நண்பர்களிடம் நான் கூறும் முகமன்”ஓம் நமச்சிவாய”இதனால் பலர் என்னை ஒம் நமச்சிவாய என்ற பெயரிலேயே அழைக்கவும் தொடங்கி விட்டனர்.

இது போன்று சில ஆன்மீக அமைப்புகளைச் செர்ந்தவர்கள் கூறுவது வழக்கம்.சின்மயா மிஷனில்”ஹரி ஓம்” என்றும் இஸ்கானில்” ஹரே கிருஷ்ணா” என்றும்,வேத்தாத்திரி மகரிஷி அமைப்பைச் சேர்ந்தவர்கள்”வாழ்க வளமுடன்”சத்ய சாயி பாபாவின் பக்தர்கள்”சாயிராம்” என்றும் கூறுவதை வழக்கமாகக் கொண்டுளனர்.

இந்த ஹலோவை விட்டு விட்டுத் தனித்துவமாக ஏதாவது சொல்ல அனைவரும் முயலாலாமே.மறு முனையில் கேட்பவர்கள்,உடனே நீங்கள்தான் பேசுகிறீர்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வர் அல்லவா?அது மட்டுமன்றி ஒரு நல்ல சொல்லைக் கேட்ட மன நிறைவு வேறு!

என் உறவினர் ஒருவர் என்னைப் பின்பற்றித் தொலை பேசியில்”திருச்சிற்றம்பலம்”என்று சொல்லத் தொடங்கி விட்டார்

என்ன சொல்லலாம்
1)வணக்கம்
2)வாழ்க ,வளர்க.
3)இந்த நாள் இனிய நாள்
4)நல்லதே நடக்கும்
5)நீங்கள் விரும்பும் கடவுள் பெயர்.

எத்தனையோ சாத்தியங்கள் இருக்கின்றன.உங்கள் கற்பனையின் வீச்சே எல்லை!

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ஆக்க பூர்வமான சிந்தனை.



(இணையத்தில் படித்தது-தமிழ் தாயகம்)


டிஸ்கி:  ஒரு முறை  வங்கி விழாவொன்றில் முனைவர்.கண சிற்சபேசன் முன்னிலையில் நான் உரையாற்றிக் கொண்டி ருந்தபோது ,உரையின் இடையே positive thinking என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன வென்று அவரையே கேட்டுத் தெரிந்து கொண்டு உரையைத் தொடர்ந்தேன். அன்று அவர் எனக்கு அளித்த பதிலே ”ஆக்க பூர்வமான சிந்தனை ”

திங்கள், பிப்ரவரி 20, 2012

சிவராத்திரியும் ஸ்ரீருத்ர பாராயணமும்

 இன்று மாலை 6 மணிக்குத் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் எங்கள் வேதக் குழுவின் ருத்ர பாராயணம் நடை பெற்றது.பாராயணம் முடிந்தபின் சிறப்பு தரிசனம்.எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தபின் எனது நண்பர் ஒருவர் சொல்லிய படி சிவராத்திரி பற்றி ஏதாவது எழுத வேண்டுமே என யோசனை.எனவே பல இடங்களிலிருந்த பெற்ற தகவல்களின் ஒரு தொகுப்பாக மகாசிவராத்திரி பற்றிய இப்பதிவு!

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசியன்று மாத சிவராத்திரி ஆகும்.மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி  மகா சிவராத்திரியாகும்.


ஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிவராத்திரிகள்:
நித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.
யோக சிவராத்திரி: சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.
 



பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக் கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூசை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை பூசை செய்தாள். பூசையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.   

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. 


இன்னொரு கதை. ஒரு நாள் அன்னை உமா விளை யாட்டாக   ஈசனின் கண்களை மூடியதாகவும், இதனால் உலகமே இருள் அடைந்து போனதாகவும், இதனால் பயந்து போன தேவர்கள் இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச்செய்ததாகவும் அந்த இருண்ட இரவே சிவராத்திரி ஆகும் என்றும் வழங்கப்படுகிறது
 

மற்றொரு கதையில் ஒரு முறை ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. ஆகவே இரவில் வீடு திரும்ப அஞ்சிய வேடன் ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான்.  தூக்கம் வராமலிருக்க வேடன் அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் தன்னைஅறியாமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்ட வேடனிற்கு மோட்சம் கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் சிவராத்திரி அன்று வில்வம்  கொண்டு சிவனை வழிபட்டால் சகல வினைகளும் நீங்கி சகல சுகங்களையும் நாம் பெறலாம் என்பதே ஆகும்.
  
 

சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நிதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக் கண்டு களிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 

நான்கு காலப் பூசை விவரங்கள்
முதல் சாமம்- பஞ்சகவ்ய அபிசேகம், சந்தனப்பூச்சு, வில்வம் தாமரை அலங்காரம் அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் ருக்வேத பாராயணம்.

இரண்டாம் சாமம்- சர்க்கரை பால் தயிர் நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல் துளசி அலங்காரம் வில்வம் அர்ச்சனை பாயாசம் நிவேதனம் யஜுர் வேத பாராயணம்.

மூன்றாம் சாமம் தேன் அபிசேகம் பச்சைக் கற்பூரம் சார்த்துதல் மல்லிகை அலங்காரம் வில்வம் அர்ச்சனை எள் அன்னம் நிவேதனம் சாமவேத பாராயணம்.

நான்காம் சாமம்- கரும்புச்சாறு அபிசேகம் நந்தியாவட்டை மலர் சார்த்துதல் அல்லி நீலோற்பலம் அலங்காரம் அர்ச்சனை சுத்தான்னம் நிவேதனம் அதர்வண வேத பாராயணம். 


பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.



  

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்-புத்தக வெளியீட்டு விழா

இன்று புலவர் சா.இராமாநுசம் அவர்களின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடை பெற்றது.படத்தில் இருப்பது அப்புத்தகமே.


மாலை 3.30 க்கு வீட்டிலிருந்து புறப்பட்டு,23-சி பேருந்தைப் பிடித்து,ஆயிரம் விளக்கு நிறுத்தத்தில் இறங்கி,சிறிது நடைக்குப் பின்,நூலகத்தை அடைந்தேன்.விழா முதல் மாடியில் என்றறிந்து அங்கு சென்றேன்.அரங்கிற்கு வெளியிலேயே நின்று கொண்டி ருந்த   ஒரு பெண்மணி மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். அருகில் புலவர் ஐயா நின்று கொண்டிருந்தார்.அவரிடம் கை குலுக்கி நான் யார் எனத் தெரிகிறதா எனக் கேட்டேன்.அவர் பார்த்தது போல் தோன்றுகிறது என்று சொன்னதும்,வரவேற்ற பெண்மணி ”சென்னைபித்தன்’என்று சொல்லி விட்டு,உங்கள் வலைப்பூவில் உள்ள புகைப்படத்தில் இது போலவே கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறீர்களே”என்றும் சொன்னார் (தமிழ்வாணன் போல் எனக்கும் இந்தக்கண்ணாடி ஒரு அடையாளம் ஆகி விடும் போலிருக்கிறது!)


அங்கு ஒரு மேசைமீது காகிதத்தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி ஒரு தட்டு வழங்கப்பட்டது!(இனிப்பு,சமோசா). பின்னர் தேநீர்.

புலவர் ஐயா “கணேஷ் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.


அரங்கினுள் நுழைந்தேன்.இதமான குளுமை.வசதியான இருக்கைகள்.பதிவர் கணேஷைத் தேடிக்கண்டு பிடித்தேன். அவர் அருகில் அமர்ந்தேன். பேசிக்கொண்டிருந்தோம்.பதிவர் ஸ்ரவாணி அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.சிறிது நேரத்தில் அவரும் கணவருடன் வந்து சேர்ந்தார்.

     பதிவர் ஸ்ரவாணி,அவர் கணவர்,’ மின்னல் வரிகள்’ கணேஷ்.


 விழா தொடங்கியது.பலர் புலவர் ஐயாவுக்குப் பொன்னா டைகள்  அணிவித்தனர்.ஆனால்  ஒரு சொல்லாணா மகிழ்ச்சி அளித்த  நெகிழ்வான தருணம் பதிவர்கள் மூவரையும் பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து புலவர் ஐயா அவர்கள் எங்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை அளித்ததுதான்.ஐயா,உங்கள் அளவற்ற அன்பில் நெகிழ்ந்து. போனோம்.தமிழ் அறிஞர்கள் நிறைந்த அரங்கில் ஒரு அங்கீகாரம்!ஐயா எனக்கு இது பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை! 
  
                              
           மேடையில் புலவர் ஐயாவுடன் மற்றத் தமிழ் அறிஞர்கள்
    
புத்த்க வெளியீட்டுக்குப் பின் சிலர் பாராட்டிப் ,பேசத் தொடங்கினர்.ஆனால்,எங்கள் மூவருக்கும் தவிர்க்க இயலாத வேலைகள் இருந்த காரணத்தால்  விழா முடியுமுன்பே ஒவ்வொருவராய் விடை பெற்றோம்.


ஐயா கேட்டுக்கொண்டபடி சில வார்த்தைகள் வாழ்த்திப் பேசாமல் வந்தது எனக்கு வருத்தமே.ஆனால் என் நிலைமை அப்படி..என்ன செய்ய?


பதிவர்கள் பலர் வருவர் என எதிர்பார்த்தேன்,ஆனால் நாங்கள் மூவர் மட்டுமே.புலவர் ஐயாவும் எதிர்பார்த்திருந்தார்.


புத்தகம் மிக நேர்த்தியாக அச்சிடப் பட்டிருக்கிறது.கவர்ச்சியான அட்டை.வலையில் வந்த 102 கவிதைகள்,7 தலைப்புகளில். ரூ.60 விலையுள்ள புத்தகம் அரங்கில் ரூ.50 க்குத் தரப்பட்டது.


நிதானமாக அமர்ந்து எல்லாக் கவிதைகளையும் படிக்க வேண்டும்.


புலவர் ஐயாவுக்கு வயது 80 க்கு மேல் என அறிகிறேன். இப்போதும் சலிப்பின்றித் தமிழ்த் தொண்டு செய்து வரும் அவர்கள்,பல்லாண்டு உடல்  நலத்துடன் சிறப்பாக வாழ்ந்து, மேலும்பல நூல்கள் வெளியிட இறைவன் அருள் புரியட்டும்.


டிஸ்கி:இன்று தெரிந்து கொண்டது-கவிதை என்பது தமிழல்ல-’பா ’என்பதே சரியான சொல்லாகும்(மேடையில் கேட்டது)

சனி, பிப்ரவரி 18, 2012

ஒரு மேய்ப்பரும் கணக்காய்வாளரும்!

ஒரு மேய்ப்பன் ஊருக்கு வெளியே தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனருகில் ஒரு பெரிய மகிழ்வுந்து  வந்து நின்றது.அதிலிருந்து மிக விலை மதிப்புள்ள ஆடைகள் அணிந்த ஒருவர் இறங்கினார்.ஆட்டு மந்தையை ஒரு பார்வை பார்த்தார்.

பின் மேய்ப்பனைப் பார்த்துக் கேட்டார்”உன் மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள் இருக்கின்றன என்று நான் சரியாகச் சொன்னால்,உன் ஆடுகளில் ஒன்றை எனக்குக் கொடுப்பாயா?”

அவனும் சம்மதித்தான். 

அந்த மனிதர் இணைய  இணைப்புள்ள தன் மடிக் கணினியை எடுத்து. நாசாவின் ஒரு இணைய தளத்தின் மூலம்,அந்த இடத்தை ஆராய்ந்து,கணினியில் சில கணக்குகளுக்குப் பின் அவனிடம் சொன்னார்”உன் மந்தையில் சரியாக 368 ஆடுகள் இருக்கின்றன”

மேய்ப்பன் ஒப்புக் கொண்டு அவரை ஒரு ஆட்டை எடுத்துக் கொள்ளச் சொல்ல அவரும் எடுத்துக் கொண்டார்.

இப்போது மேய்ப்பன் கேட்டான்”நான் உங்கள் தொழில் என்ன என்று சொன்னால்,நீங்கள் எடுத்துக் கொண்டதைத் திருப்பிக் கொடுத்து விடுவீர்களா?”

அவர் ஒப்புக் கொண்டார்.

அவன் சொன்னான்”நீங்கள் ஒரு கணக்காய்வாளர்(ஆடிட்டர்)”

அவர் அதை ஆச்சரியத்துடன் கேட்டார்”எப்படிச் சொன்னாய்?”

மேய்ப்பன் சொன்னான்”மிக எளிது. 
ஒன்று,தேவையின்றி நீங்களாகவே வந்தீர்கள். 
இரண்டு எனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தைச் சொல்வதற்குக் கட்டணம் பெற்றுக் கொண்டீர்கள். மூன்றாவதாக உங்களுக்கு என் தொழில் பற்றி எதுவும் தெரியாது!

தயவு செய்து என் நாயைத் திருப்பிக் கொடுக்கிறீர்களா?”

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

காதலி விட்டுச் சென்ற செல்வங்கள்!

என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
அடைந்தவை சில,அபகரித்தவை சில
அனைத்துமே விலை மதிப்பற்றவை
பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்
அதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்
பார்க்கலாம் வாருங்கள்.

இதோ இப்பெட்டியில் பட்டுத்துணியில்
படுத்திருக்கும் இந்த ஸ்பூன்.
ஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.
ஐஸ்க்ரீமைத் துளிதுளியாய் அவளெடுத்து
செம்பவள இதழ் திறந்து உண்ணும்போது
அவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.
இன்றைக்கும் அவள் இதழின் இனிமை
இதை விட்டு நீங்கவில்லை!

இந்த டம்ப்ளரில் எழுதியிருக்கிறது
சாந்தி விஹாரில்  திருடப்பட்டதென்று
சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.

அந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்!
சாப்பிட்ட பின் நளினமாய் அவள்
இதழொற்றிக்  கசக்கியெறிந்த  காகிதம்
சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.

சாந்தோம் சந்திப்பில் ஒரு நாள்
கன்னத்தில் ஏதோ கறையென்று நான் சொல்ல
அவள் துடைத்தும் போகாத காரணத்தால்
நான் துடைக்க உதவிய  இக்கைக்குட்டை!
பட்டுக் கன்னத்தின் ஸ்பரிச சுகம் பெற்றதன்றோ!

அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்
அவள் கைகள் அளைந்த கடல் மணல்
அவள் பொறுக்கிப் போட்ட சிப்பி
அவள் பல் பதிந்த என் பேனா

பிரியும் முன் ஒரு நிமிடம் என் நெஞ்சில் சாய்ந்து
கண்ணிர் உதிர்த்தபோது கரைந்த மையால்
கறையான என் சட்டை 
இவையெல்லாமே என் சொத்துக்கள்!

என்னுடன் அவள் இல்லை இன்று
ஆனால் அவள் நினைவுகளும்
அவள் காதலின் குறியீடாய் இவையும்
என்றுமே இருக்கும் என்னுடன்!

வியாழன், பிப்ரவரி 16, 2012

துன்பம் எப்படிப் பட்டது?


உலகில் துன்பங்கள்,வேதனைகள்  நிரம்பியுள்ளன.ஆனால் அவற்றை வெற்றி கொள்வதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

வலி என்பது தவிர்க்க இயலாதது;ஆனால் வேதனை என்பது வருவித்துக் கொள்வது.

சிலுவையில் அடிக்கப்பட்டபோது ஏசு பிரானுக்குச் சொல்லொணா வலி இருந்திருக்கும்.ஆனால் அதனால் அவர் வேதனைப்படவில்லை. மாறாக அந்த நிலையிலும் அதைச் செய்தவர்களுக்காக இறைவனை மன்னிக்கச் சொல்லி வேண்டும் அன்பு அவருக்கு இருந்தது.

வேதனைகள் சில நேரங்களில் கவலை எனும் உருவில் வந்து வாட்டுகின்றன.அது தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் செயலே.முல்லா நஸ்ருதீன் ஓரிரவு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார்.மனைவியிடம் சொன்னார்”நான் அப்துல்லாவிடம் வாங்கிய கடனை நாளை தருவதாக வாக்களித்திருந்தேன்.ஆனால் அது என்னால் இயலாது”.நஸ்ரூதின் மனைவி அப்துல்லாவைச் சந்தித்து “என் கணவரால் நாளை பணம் தர இயலாது” எனக் கூறி விட்டுவந்து,கணவனிடம் சொன்னாள்”நீங்கள் தூங்குங்கள்.இப்போது அப்துல்லா கவலைப் படட்டும்!”

வேதனை என்பது பல நேரங்களில்,குற்ற உணர்வின் காரணமாக நமக்கு நாமே கொடுக்கும் தண்டனையாகி விடுகிறது.ஞானத்தைத் தேடிப் புறப்பட்ட புத்தர் தனது பழைய ஆடம்பர வாழ்வை எண்ணிக் குற்ற உணர்வுடன்  உண்ணா நோன்பை மேற்கொண்டார்.அதன் காரணமாக மயக்கமடைந்தார்.கண் விழித்த போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு பாடகன் தன் சீடனிடம்”இதோ இந்த  தம்பூராவின் நரம்புகளுக்குச்  சரியான அளவு அழுத்தம் கொடுத்தால்தான் சுருதி சுத்தமாக மீட்ட முடியும்,அதிகமானால் அறுந்து விடும்;குறைவாயின் தொங்கிப் பயனற்று விடும்.”புத்தர் புரிந்து கொண்டார்.வேதனைப்படுவது நரம்பை இழுத்து முடுக்குவது போல்; வெறும் இன்பங்களில் திளைத்தல் என்பது முடுக்காத நரம்பு போல் என்று.

வேதனை அனுபவிப்பது என்பது ஒரு சோம்பேறித்தனத்தின் சின்னம்; மனச்சோர்வில்ஆழ்த்தும்.இரு நண்பர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.ஒருவன் ஊமையாக,அழுதுகொண்டேசாகத் தயாரானான். 

மற்றவன்மன்னனிடம்சொன்னான் ”மகாராஜா! எனக்கு ஓராண்டு அவகாசம் கொடுங்கள்.நான்உங்கள்குதிரைக்குப்பறக்கக்கற்றுக்கொடுக்கிறேன் ”மன்னனும் ஒப்புக் கொண்டான்.பின் நண்பன் அது பற்றிக் கேட்ட போது அவன் சொன்னான்”ஓராண்டு என்பது நீண்ட காலம்.என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.அந்தக் குதிரை சாகலாம்.மன்னனே சாகலாம்.ஒரு வேளை குதிரை பறந்தாலும் பறக்கலாம்”

சிலருக்கு வேதனைப் படுவது என்பது மகிழக்கூடிய,மற்றவர் கவனத்தைக் கவரக் கூடிய செயலாக இருக்கிறது. ஒரு முறை ரயிலில் ஒருவர் சென்றார்.இரவு தூங்கும் நேரம்.கீழ்ப் படுக்கையில் இருக்கும் ஒருவர்”எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறதே” எனத் துன்பம் தோய்ந்த குரலில் சொன்னார்.மற்றவர் தன்னிடமிருந்த நீரை அவருக்கு அருந்தக் கொடுத்தார்.பின் உறங்க ஆயத்தமானார்.மீண்டும் அதே துன்பக் குரல்”ஐயோ!எனக்கு எவ்வளவு தாகமாக இருந்தது!”

நமக்கு வரும் வலிகளை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?