தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 13, 2014

இறைவன் கேட்ட வரம்!

பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் என்று சொல்வார்கள்.

இன்று  பழைய பதிவுகளை நானே பார்த்துக்கொண்டிருந்தேன்!

(ஒரு முறை ஒரு சர்பத் கடையில் கூட்டமே இல்லாததால்.கடைக்காரர் தானே சர்பத் போட்டுக் குடித்ததைப் பார்த்த நினைவுதான் வருகிறது!)

அதிகப் பின்னூட்டங்களைப் பெற்ற ஒரு பதிவு ;இரண்டாண்டுகளுக்கு முன் எழுதியது,ஆனால் என்றும் நிலைக்கும் உண்மையைச் சொல்வது,என்னைக் கொஞ்சம் நிறுத்தியது.

இதில் நான் சொன்ன ஒரு செய்தியை இன்று உயர்  நீதி மன்றமே சொல்லியிருக்கிறது! --------”


”பால் அபிஷேகம் செய்யும்போது,பட்டினியால் வாடும் மக்களை நினையுங்கள்” என்று

இதை மீள்பதிவாகத் தந்தால் என்ன?

(எழுத  எதுவும் தோன்றாத நிலையில் இதைத்தவிர வேறு என்ன செய்ய?)

இதோ..............

கடவுள் பேசுகிறார்.........



//உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா! //

புதன், மார்ச் 12, 2014

விளக்குமாறு!




விளக்குமாறு!

வீட்டைக் குப்பையின்றி வைக்க உதவும்

கூட்டிப் பெருக்கும்போது அதற்குத் தெரியாது

குப்பைக்கும் ரூபாய் நோட்டுக்கும் வேறுபாடு

எல்லாம் சேர்த்துப் பெருக்கித் தள்ளும்

கூட்டுபவருக்குத் தேவை,கவனம்

வேண்டியது வேண்டாதது  பிரித்து அறியும் தன்மை.

பூசை முடிந்து போன பின்

தரையில் அட்சதை இருக்கலாம்

தாமரை மலர் இருக்கலாம்

இரட்டை இலைகளும் இருக்கலாம்!

பெருக்கும் கை பார்த்துப் பெருக்க வேண்டும்!

உதய சூரியனையே உதிக்காமல் செய்த

 பெண்ணொருத்தி நாடு இது

வாசலில் நீர் தெளித்து

விளக்குமாற்றால் பெருக்கிக்

கோலமிடவேண்டும் விடியும் முன்

 வீட்டுக் குப்பையைச் சேர்த்தெடுத்துத்

தொட்டியில்தான் கொட்ட வேண்டும்.

பார்க்கச் சுத்தமாயிருக்கக் குப்பையை

கட்டிலுக்கு அடியிலும் தள்ளலாம்

அதனால் என்ன பயன்?

பெருக்குவதற்கு மட்டுமே விளக்குமாறு!

பைத்தியக்காரன் கையில்

விளக்குமாறு கிடைத்தால்

தன்னையும் அடித்துக் கொள்வான்

பார்க்கும் பிறரையும் சேர்த்து அடிப்பான்!

அதற்கல்லவே விளக்குமாறு!