தொடரும் தோழர்கள்

சனி, மே 31, 2014

வலைப்பதிவுப் பணி அவுட்சோர்ஸிங்!!


ப்ளஸ்ஸில் இரு நாட்களுக்கு முன் வலைப்பதிவுப் பக்கமே நான் வருவதில்லை என்று நானே வருத்தப்பட்டு எழுதியிருந்தேன்!(வேறு யார் வருத்தப்படப் போகிறார்கள்?!)

அப்போதுதான் அதற்கான சரியான தீர்வு பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதியது நினைவுக்கு வந்தது!

இதோ அந்த இடுகை!

************

//சில நாட்களாக ஒரு எண்ணம்!

பதிவு வேலையை வெளியாரிடம் ஒப்படைத்தால் என்ன?!(outsourcing)

நானும் பதிவே கதி என்று இருக்கக் கூடாது,பதிவும் நல்ல விதமாகத்தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால்,அவுட்சோர்சிங் தான் சிறந்த வழி எனத் தோன்றுகிறது!

எனவே இந்தப் பதிவின் மூலம் இதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறேன்!

விண்ணப்பிவர்களுக்கான அடிப்படைத்தகுதிகள்-

1)தமிழ் நன்கு எழுதப் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் அனுமதிக்கப் படும்!

2)நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து அவற்றிலிருந்து பதிவுக்கான செய்தியை உள்வாங்கிக் கொள்ளும் திறன்.

3)பத்திரிகைகளில் வெளியாகும் சுவாரஸ்யமான விஷயங்களை வெட்டி ஒட்டிப் பதிவு எழுதும் திறமை!

4)மொக்கைப் பதிவாக இருந்தாலும் சுண்டியிழுப்பது போல் தலைப்பு வைக்கும் ஆற்றல்!

5)திரைப்படப் பாடல்கள் பற்றிய அறிவு,நடிகர்கள் பற்றிக் கிசு கிசுக்கள் தெரிந்துகொள்ளுதல்,திரைப்படம் பார்க்காமலே கூட விமரிசிக்கும் திறமை,இவையெல்லாம் அவசியம்!

6)பதிவுக்கு நிறையப் பின்னூட்டங்கள்,வருகைகள்,திரட்டிகளில் வாக்குகள் வரவழைப்பதற்காக,பல பதிவுகளைத் தொடர்தல்,வாக்களித்தல், பின்னூட்டமிடுதல் ஆகியவை திறம்படச் செய்தல்!முக்கியமாக டெம்ப்ளேட் பின்னுட்டங்கள் இடுதல்!
கீழ்க்கண்டவை வேலை முறைமைகள்---

1)ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.பணியின் தரத்தைப் பொறுத்து வேலை நீட்டிப்பது அமையும்.

2)குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு 30 பதிவுகள் எழுதப்பட வேண்டும்!

3) ஒரு பதிவுக்கான குறைந்த பட்ச வாக்குகள்,தமிழ் மணத்தில் எட்டும், இண்ட்லியில் 25உம் நிச்சயம் கிடைக்க வேண்டும்.

4)ஒரு மாதத்துக்கான சராசரி வருகைகள்(ஹிட்ஸ்),குறைந்த பட்சம் 6000 இருக்க வேண்டும்!

5)இந்த வலைப் பதிவின் தரத்தைக்(அப்படியொன்று இருக்கிறதா?!) குறைக்கும் படியான இடுகைகள் வெளி வரக் கூடாது!

6)சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

ஒப்பந்த ஊதியம்விவரங்கள்—

1)முறைமைகள் வழுவாமல் செயல் படும் பட்சத்தில், ஒவ்வொரு ஞாயிறன்றும், மயிலை, கையேந்தி பவனில்,இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப் படும்!
(யாரப்பா அங்கே முணு முணுக்கறது,ஞாயிறு கையேந்தி பவன் லீவு என்று)

2)வருகைகள் 6000த்துக்கு மேற்படும் மாதங்களில் ஊக்க போனஸாக,ஒரு ஞாயிறன்று, மயிலை சங்கீதா/சரவணபவன்/கற்பகாம்பாள் மெஸ் எங்காவது,இரவு டிஃபன் சாப்பிட்டுக் கொள்ளலாம்!

3)தமிழ் மணம் ராங்கில் 100க்குள் வந்தால்,பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.

விண்ணப்பம் ஏதும் அனுப்பாமலே 31-04-2011 அன்று மாலை 5.00 மணிக்கு மரினா, காந்தி சிலைக்கு அருகில் நடக்கும் நேரடி நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்! அனைவருக்கும் ஒரு பொட்டலம் சுண்டல் வழங்கப்படும்!//
******************

நல்ல ஐடியாதானே?

ஞாயிறு, மே 11, 2014

அம்மாவின் அன்பு!



விளக்க இயலாதது

முடிவொன்று இல்லாதது

தன்னலம் கலவாதது

என்றும் நிலைப்பது

அழிவற்றது,

அகற்ற இயலாதது

பொறுமை நிறைந்தது

மன்னிப்பு அருள்வது

என்றும் துணை நிற்பது

நம்பிக்கை வைப்பது

நல்லதையே செய்வது

அனைத்தையும் கடந்தது

அறிவால் அளக்க முடியாதது

ஆண்டவனின் ஆசிர்வாதம்

அம்மாவின் அன்பன்றோ!



வெள்ளி, மே 09, 2014

தூண்டில் மீன்களும்,தூண்டில் போடும் கண்களும்!



மீன்!
வலை வீசியும் பிடிக்கலாம்
இல்லை தூண்டில் போட்டும் பிடிக்கலாம்!

மொத்தமாய்ச் சிக்கும் மீன் வலை வீசினால்!
ஒற்றையாய்த் தான் கிடைக்கும் தூண்டிலில்!

மீன் கூட்டத்தில் வலைவீசி ஒரு வீச்சில்
வலை நிறைய அள்ளுகிறான் வலைஞன்!
தூண்டில் வீசி காத்திருக்கிறான் கொக்கு போல்
உறு மீன் வரவுக்காகத் தூண்டில்காரன்!

வலை மீன் செல்கிறது சந்தைக்கு ஏனெனில்
வலைஞனுக்கு அது தொழில்!
தூண்டில் மீன் செல்கிறது வீட்டு அடுப்புக்கு
இல்லையேல் மீண்டும் நீர் நிலைக்கு!
ஏனெனில் அவனுக்கு அது உணவு தேடல்
இன்றேல் பொழுதுபோக்கு.

வலை மீன் விரும்பி வந்து வலையில் விழுவதில்லை!
தூண்டில் மீன் கொக்கி இரைக்காய்த் தானே மாட்டுகிறது!

கடல் மீன்,ஆற்று மீன்,குளத்து மீன்,ஏரி மீன்
என்று எங்கெல்லாம் மீன்?

கடல் மீனைப் பிடிக்கத் தூண்டில் பயனில்லை
மற்ற மீனுக்கு வலையும் வீசலாம்!

வஞ்சிரம்,கொடுவா,வாளை,இறால் என்று
கொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!

எல்லா மீனும் உணவாகப் போவதில்லை!

கண்ணாடிப் பெட்டிக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
என்னாளும் நீந்தி ஓடும் சில மீன்கள்!
சுதந்திரத்தை இழந்த பின்னும் சுதந்திரமாய் இருப்பதாய்!

பெண்களின் கண்களுக்கு உவமையாய்ச் சொல்வர் மீனை
உண்மையில் உவமை சரி ஆனாலும் வேற்றுமை-
மீன் தூண்டிலில் மாட்டும்,
கண் தூண்டில் போடும்!


நட்சத்திரங்களை விண்மீன்கள் என்றுரைப்பர்.
வானப் பெருங்க்கடலில் நீந்துவதாலா?

பெண்ணின் கண்ணுக்கும் விண்மீனுக்கும் ஒப்பிடுவான் செகப்பிரியர்
ரோமியோ சொல்கிறான் ஜூலியட் கண்கள் பற்றி


"
வானில் ஜொலிக்கும் இரு விண்மீன்களுக்கு வெறோதோ வேலையாம் ;
அவள் கண்களை தங்களுக்குப் பதிலாய் அங்கு வரச் சொல்கின்றன!
அவ்வாறு கண்கள் அங்கும்,விண்மீன்கள் அவள் முகத்திலும் இருந்தால்?
அவள் கன்னத்தின் ஒளியில் விண்மீன்கள் ஒளியற்றுப் போகும்,
பகலொளியில் விளக்கொளி பயனற்றுப்போவது போல்.
அவள் கண்களால் வான முழுவதும் ஒளி மயமாய்த் தகதகக்க
பறவைகள் குரலெழுப்பும் வானம் வெளுத்ததென்று!"

(
ரோமியோவும் ஜூலியட்டும்)


எத்தனையோ சொல்லலாம் இத்தகைய மீன் பற்றி!
அத்தனைக்கும் இடமில்லை இனி நேரமுமில்லை/

ஏதேனும் சொல்வதற்குப் பாரதியே அடி தருவான்
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே யிடமிருந்தாற் கூறீரோ? “

(30-05-2011)

செவ்வாய், மே 06, 2014

டாஸ்மாக்கும்,அட்சய திரிதியையும்!

அட்சய திரிதியை அன்று வெண்மை நிறப் பொருள்களைப் பயன் படுத்துவது நல்லதாம்!

எனவே அடுத்த ஆண்டு முதல் டாஸ்மாக்கும் விளம்பரம் செய்யலாம்.........

வெண்மை நிறமுள்ள வெள்ளை ஒயின்,வோட்கா,ஜின், வெள்ளை ரம் ஆகியவற்றை அன்று வாங்கி உபயோகித்தால் ,நன்கு பெருகும் என........(.உபயோகித்தவர்களுக்கு நோயும் டாஸ்மாக்குக்குப் பண வரவும்)

(இன்றைய என் பிளஸ் பகிர்வு)

இலவசங்களும் நாடும்!

திருவள்ளுவர் ஒரு முறை ஒரு அரசனைக் காணச் சென்றிந்தார்.அரசன் அவரை வரவேற்று நன்கு உபசரித்தான்.அவர் தன்னைப் பற்றியும் தன் நாட்டைப் பற்றியும் உயர்வாக நினைக்க வேண்டும்,பேச வேண்டும் என்று மன்னன் எண்ணினான்.நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.தேரில் சென்றபோது,பல இடங்களில், அன்னதானச் சத்திரம் என்றெழுதிய கட்டிடங்கள் காணப்பட்டன.மக்கள் வரிசையில் உள்ளே சென்று கொண்டும்,பலர் வெளியே வந்துகொண்டும் இருந்தனர்.

ஞாயிறு, மே 04, 2014

ஆட்ரி எனும் அற்புத நடிகை

அழுக்கில்லையென்றாலே அழகு வந்துவிடும்.

நான் சொல்வது உடல் அழுக்கல்ல; மன அழுக்கு!

கீழேயுள்ள அழகுக் குறிப்புகளைப் பாருங்கள் ---

உதடுகள் அழகாக இருக்க எப்போதும் அன்பான சொற்களையே பேசுங்கள்.

கண்கள் அழகு பெற மற்றவர்களிடம் இருக்கும்  நல்ல  பண்புகளையே பாருங்கள்.

அழகிய மெல்லிய உடல் அழகுக்கு உங்கள் உணவை பசித்தவர் களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேசப் பொலிவுக்கு தினம் ஒரு முறையாவது ஒரு குழந்தையின் கைகள் உங்கள் கூந்தலைத் தடவட்டும்.

நிமிர்ந்த நன்னடைக்கு,எப்போதும் நாம் தனியாக இல்லை என்ற நினைப்பு உங்களுடன் இருக்கட்டும்.

உதவும் கரம் தேவையென்றால் நினைவில் வையுங்கள் அது உங்கள் மணிக்கட்டுக்குக் கீழே இருக்கிறது என்பதை.வயது முதிர்ச்சி யடையும்போது,உணருங்கள் இரண்டு கரம் உள்ளது, ஒன்று உங்களுக்கு உதவ,மற்றது அடுத்தவர்க்கு உதவ என்பதை.

ஒரு பெண்ணின் அழகு அவள் உடலமைப்பிலோ,அவள் அழகிய உடைகளிலோ,அவள் கூந்தல் அலங்காரத்திலோ இல்லை.
அது அவள் அன்பு உறையும் ஆன்மாவின் சாளரமான அவள் கண்களில்தான் இருக்கிறது.

இறைவனின் கண்களில் அனைவரும் அழகுதான்.அவன் அனைவரையும் விரும்புகிறான்.அவன் பார்வையில் ,அனைவருமே அழகானவர்கள்தான்

இந்தச் சிந்தனைகள் யாரிடம் பிறந்தன தெரியுமா?

ரோமன் ஹாலிடே என்ற படத்தில்  ஹாலிவுட்டில் அறிமுகமாகி,ஒரு மிகச் சிறந்த நடிகையாக மட்டுமன்றி,ஒரு மிக நல்ல  மனித உயிராகவும் இருந்த ஆட்ரி ஹெப்பர்னிட மிருந்து!. 


அவரது மிகச் சிறப்பான நடிப்பில் வெளி வந்த ரோமன் ஹாலிடே,சரேட்,மை ஃபேர் லேடி,வெயிட் அன்டில் டார்க்,ஹௌ டு ஸ்டீல் ய மில்லியன் போன்ற படங்கள் காலத்தால் அழியாதவை.
 
அவர் பிறந்த தினம் மே 4!
 
 

சனி, மே 03, 2014

ஆணாதிக்கம் ஒழிக!



”என்னங்க!நம்ம மின் அம்மி  வேலை செய்யலைங்க.”

“எடுத்துட்டுப் போய் சரி பண்ணிக் கொண்டு வரேன் ”

”பிரயோசனமில்லைங்க.ரெண்டு மூணு தடவை பண்ணியாச்சு.சரி பாத்து ரெண்டு நாள் ஓடுது;பிறகு ஓடமாட்டேங்குது.வேற வாங்கிட வேண்டியதுதான்,”

“சரி.இன்னிக்கு ஏபிசிடி காட்சியகத்தில் போய்ப் பார்த்து வாங்கிட்டு வரேன்”

வெள்ளி, மே 02, 2014

அட்சய திரிதியை....இன்று என்ன செய்யலாம்?

இன்று அட்சய திரிதியை!

இந்நாளில் புராண காலத்தில் என்னவெல்லாம் நடந்தது?

திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

குசேலர் துவாரகை சென்று கிருஷ்ணரைக் கண்டு அவல் அளித்துப் பெருஞ்செல்வம் பெற்றார்.
(இது பற்றிய எனது பழைய கவிதை----
     குசேலர்!
     பெற்றது இருபத்தேழு
     கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
     விற்றது என்னவோ ஒரு பிடி அவல்தான்-விலையாய்ப்
     பெற்றதோ பெருஞ்செல்வம்!)


குபேரன்,லக்ஷ்மி தேவியைப் பிரார்த்தித்துத் தன் கருவூ லத்தை நிரப்பிக் கொண்டான்.

திரௌபதி அட்சய பாத்திரம் பெற்றாள். 

வியாசர் சொல்ல,விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங் கினார். ----------------

இன்று...........

”என்ன சார்,காலையில் ரெண்டு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்தீங்க போல?”


”ஆமாம் சார்,பாயசம் செய்யத்தான்!”


“வீட்டில ஏதும் விசேஷமா? நிறைய மல்லிப்பூவெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”


”வீட்டில இல்லை சார்,நாட்டிலேயே விசேஷம்தான். இன்னிக்கு அட்சய திரிதியை!”


“ஓகோ!அதுதான் பால் ,பாயசம், மல்லிப்பூவெல்லாமா! இன்னும் ஏதோ பாக்கி இருக்கு போலிருக்கே?”

”அதுக்குத்தான் மனைவியோடு நகைக் கடைக்குப் போகப் போகிறேன்.அவளுக்கு நகை வாங்க.”

”தங்க நகைதானே?”

”இல்லை.பிளாட்டினம் நகை.அதுதான் ரொம்ப நல்ல துன்னு  டி.வி யில் சொன்னாங்க!”

“வெண்மை நல்லது என்றால் வெள்ளி வாங்கலாமே?”

“விலை மதிப்பில்லாத பிளாட்டினம்தான் நல்லதாம்”

“என்ன வாங்கப் போறீங்க?”

“ஒரு சங்கிலியும்,பெண்டண்ட்டும்.அதுதான் ஒரு நடிகையும் வாங்கினாங்களாம்”

சில ஆண்டுகளாக இப்படித்தான் மக்கள் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.

பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது? இன்று நகை வாங்கினால் மென்மேலும் நகை வந்து சேரும் என்ற ஒரு நம்பிக்கையைச் சில ஆண்டுகளாகக் கிளப்பி விட்டு இலாபம் காண்பவர்களுக்கு நல்லதுதான்!

க்ஷயம் என்ற வட மொழிச் சொல்லுக்கு ,வடமொழி-தமிழ் அகராதியில் பொருள்-அழிவு,நஷ்டம்,வீழ்ச்சி,குறைதல்.

அக்ஷயம் என்பது அதற்கு எதிரான பொருளைத் தரும்.-அதாவது குறையாதது அல்லது வளர்வது.

எனவே இந்த நாளில் செய்யப்படும் எதுவும் வளரும் என்ற நம்பிக்கை!

முன்பெல்லாம்,இந்நாளில் தானம் செய்து வந்தார்கள்; அதிலும் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும் என நம்பி அவ்வாறே செய்தார்கள்.அதனால் கிடைக்கும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும் என்பதே நம்பிக்கை!

அந்த நம்பிக்கையிலாவது சில பசித்த வயிறுகளுக்கு நல்லது நடந்தது.தானம் செய்தவர் களுக்கும் ஒரு மன நிறைவு இருந்தது.

ஆனால் இன்றோ!

உங்களுக்குப் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாவிடினும்,கொடுக்கின்ற அந்த மகிழ்ச்சிக்காக,சில பசித்த வயிறுகள் நிறையும்,அந்த முகங்கள் மலரும்,அந்த மனங்கள் வாழ்த்தும் என்ற காரணத்துக்காக இந்த ஒரு நாளிலாவது, நகைக் கடையில் வரிசையில் நின்று செலவழிக்கும் பணத்தில் ஒரு அற்பமான பகுதியில்,தானம் செய்து மகிழ்ச்சியைப் பரப்பலாமே!

இந்த தானத்தை நகைக்கடைக்காரர்களே கொஞ்சம் பெரிய அளவில் செய்யலாமே!

இன்றைய விற்பனையில் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையாமல் அன்ன தானத்திற்கு எனத் தீர்மானித்து கடைக்கு அருகில் ஒரு மண்டபத்தில் அன்ன தானம் செய்யலாமே! கடையில் ஒரு அறிவிப்புப் பலகையில் இதை வரும் வாடிக்கை
யாளர்கள் அனைவரும் காண வைத்தால் ஒரு விளம்பரமும் ஆகுமே!


பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகையின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!


அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!


கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!

(ஏப்ரல்,24,2012--அட்சய திரிதியை)