தொடரும் தோழர்கள்

புதன், மே 31, 2017

இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை!

புகை யி(ல்)லை என்றார்கள்; ஆனால்
சுருட்டிப் பற்ற வைத்தால்
புகைதான்  வருகிறதே!

இழுக்க  இழுக்க  இன்பம்
இறுதி வரை என்பர்
இறுதியே மிக அருகில்தானே?

பன்னீர் புகையிலை, பான் பராக்
வாயிலிட்டுச் சுவைக்கலாம்
சுருட்டு, பீடி, வெண்சுருட்டு
புகை விட்டு ரசிக்கலாம்
எத்தனை வழிகள்
எமனை விரைந்தழைக்க!

புகையை நீங்கள் விட்டீர்கள்,
ஆனால் அப்புகை உங்களை விடாது
உங்கள் புகையைக் காணாமல்!

புண்பட்டநெஞ்சத்தை
புகைவிட்டு ஆற்றுவாராம்

புகை பட்ட நெஞ்சமே
புண்ணாகிப் போகாதோ?i

இன்று
ஒரு நாள் மட்டுமேன்?
ஆண்டு முழுவதும்
எதிர்ப்பு தினமாகட்டும்
இப்பொல்லாத புகையிலைக்கு.

(மீள் பதிவு)

ஞாயிறு, மே 28, 2017

ஹாலிடே ஜாலிடே

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.

அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.

அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?”

அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது.

அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.

சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.

சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க 
எண்ணி அவ்வாறு செய்தேன்”

இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”

இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.  

அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்!”

நன்றி:  பதிவர் குட்டன்.

சனி, மே 27, 2017

நடந்ததும் நடக்காததும்!

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.

குஜராத்தி படங்களில் வில்லனாக நடிக்கும் ஃபெரோஸ் வோரா,தன் மகள் இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞனை மணக்க விரும்பியபோது,தடையேதும் சொல்லாமல்,மணம் செய்வித்ததோடு,மீண்டும் ஒரு முறை சிறுநீரகம் தேவைப்பட்டால் தன் சிறுநீரகத்தைத் தருவதாக வாக்கும் அளித்தார்.சமீபத்தில் மருமகனின் சிறு நீரகம் பழுதடைந்தபோது,வாக்களித்தபடி தன் சிறுநீரகத்தைக் கொடுத்துக் காப்பாற்றினார்.இது செய்தி.

இதுவே உண்மையான நிகழ்வு;அதன் முடிவு.

இதை ஆதாரமாகக் கொண்டு பிறந்ததே நேற்றைய கற்பனை.இப்படியும் நடக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. எனவே அது முடிவு இரண்டு.

மூன்று முடிவுகள் என்று நேற்று சொல்லி விட்டதால் இன்னொரு முடிவையும் தேடி எடுக்க வேண்டியதாகி விட்டது.இதோ மூன்றாவது..........

தன்  பெண்ணின் விருப்பத்தை அறிந்த ராமனாதன் தடையேதும் சொல்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார்.உங்கள் அன்புக்குக் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வான் என்று கூறிவிட்டார்.

திருமணம் நடந்தது.அவர்கள் வாழ்க்கை இன்பமயமாகத்தான் இருந்தது.ராமனாதனுக்கு மருமகனை மிகவும் பிடித்துப் போனது.ஒரு முறை பேசும்போது சொன்னார்”அப்படி நடக்க வேண்டாம்.ஆனால் ஒரு வேளை மீண்டும் ஒரு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட்டால்,கவலைப் பட வேண்டாம்.என்னுடைய சிறுநீரகத்தைத் தருகிறேன்.நம் இருவர் ரத்தமும் ஒரே பிரிவுதான்”

மாதங்கள் கடந்தன.

வாழ்க்கை அப்படியே இருக்குமா என்ன?

அசோக்குக்கு மீண்டும் பிரச்சினை

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டும்.

கவிதா தந்தை முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து,அசோக்கிடமும் சொன்னாள்.

ஆனால் ராமனாதன் அது பற்றி எதுவும் பேசவில்லை..

மருத்துவரைச் சந்திக்கும்போது உடன் சென்றார் ஆனால் தான் தருவது பற்றி  வாயைத் திறக்கவில்லை.

கவிதாவுக்குப் பெரும் ஏமாற்றம்.

அவள் தர முன் வந்தும் அது சேரவில்லை.

கொடையாளி கிடைக்க சிறிது தாமதம் ஆயிற்று

அது வரை டயாலிசிஸ் செய்யப்பட்டது.

கவிதா தந்தையைத் தவிர்க்கத் தொடங்கினாள்

கொடையாளி கிடைத்து அறுவையும் நடந்தது.

எதற்குமே தந்தையின் உதவியை நாடவில்லை.

எல்லாம் சுபமாக முடிந்தபின் மருத்துவரிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது கவிதா சொன்னாள்”அன்பு,பாசம் இல்தெலாம் வெறும் வார்த்தைகள் என்பதை அப்பா எனக்கு உணர்த்தி விட்டார்.முன்பு தானாகவே தான் சிறுநீரகம் அளிப்பதாகச் சொன்னவர்,தேவைப் பட்டபோது நழுவி விட்டார்.என்ன உலகம்.எல்லாமே வேஷம்”

மருத்துவர்,அவர்கள் குடும்ப நண்பரும் கூட.

அவர் சொன்னார்”கவிதா.நீ நினைப்பது தவறு.சில மாதங்களுக்கு முன் உன் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக இங்கு தங்கியிருந்தபோதுதான் அது தெரிய வந்தது.அவரது ஒரு சிறுநீரகம் முழுதும் செயலிழந்து போயிருந்தது.இருந்தும் இப்போது அவர் என்னிடம் அவர் உயிர் போனாலும் பரவாயில்லை மாப்பிள்ளையைக் காப்பாற்றும் வாய்ப்பைக் கொடு என்று கேட்டார்.ஒருவரைக் கொன்று ஒருவரைப் பிழைக்க வைக்க மாடோம் என்று சொல்லி நான் ஆறுதல் சொன்னேன்.அவர் மிக மனமுடைந்து போயிருக்கிறார்.”

நாற்காலியில் அமர்ந்தபடியே முகத்தைப் பொத்தியவாறு உடைந்து அழலானாள் கவிதா.






வெள்ளி, மே 26, 2017

என்னதான் நடக்கும்...?

”அப்பா”

பெண்ணின் குரல் கேட்டுப் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே இறக்கிப் பார்த்தார் ராமனாதன்.

அவர் பெண் கவிதா.

“என்னம்மா”

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்

“அப்பா!அசோக்கும் நானும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டொம்”

“என்னம்மா சொல்றே?இது ஏன் நடக்கக் கூடாதுங்கறதைப் பத்தி அன்னிக்கு அவ்வளவு நேரம் பேசினேனே.இன்னும் மனசு மாறலியா.”

“மாறாதுப்பா’

வியாழன், மே 25, 2017

காலா!

ஒரு திரை இசை.

வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.

"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று துவங்கும் பாடல்.

அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்!

காரணம்,பாடல் வரிகளா?

பாடிய பாடகியின் குரலா?

படத்தில் ஆடிய மாளவிகாவின் ஆட்டமா?

இருக்கலாம்.

ஆனால் நிச்சயமான காரணம்......

அப்பாடலின் ஒரு வரி!

"நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜனிகாந்தும் கருப்புதான்
 அழகு கருப்புதான்"

இது போதாதா பாடல் ஹிட்டாக....!

சரி,இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு?

காலா என்றால் இந்தியில் கருப்பு என்று பொருளாம்.

இந்தியில் ஒரு விசித்திரம்.எல்லாவற்றுக்கும் பால் உண்டு....

கண் ஆண் பால்,மூக்கு பெண்பால் என்பது போல்

அது போல் காலா என்பது காலி என்றும் மாறும்,அது குறிக்கும் பொருளைப் பொறுத்து.

அது தவிர க,ச,ட,த,ப என்ற எழுத்துக்களுக்கு நான்கு வர்க்கங்கள்!

 டில்லிக்குப் போன புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் ஊழியரை அழைத்து ஒரு காலி கோப்பு கொண்டு வரச் சொன்னேன்.

அவர் விழித்து விட்டு அப்படியெல்லாம் கோப்பு கிடையாதே என்றார்

நான் என் தேவையை விளக்கினேன்.

ஓ! காலி கோப்பா என்று சொல்லி விட்டுக் கொண்டு வந்தார்.

என்ன இது குழப்பம் என்கிறீர்களா?

நான் கேட்டது kaaலி கோப்பு.அதாவது கருப்புக் கோப்பு!

அவர் சொன்னது khaali கோப்பு.அதாவது புதிய,எதுவும் கோக்காத கோப்பு.

தவறான உச்சரிப்பின் விளைவு!

இப்போது கருப்புக்கு வருவோம்.

அழகு கருப்புதான் ...பாடல் வரி

உண்மைதான்.

"கருப்பே ஒரு அழகு காந்தலே ஒரு ருசி " என்று சொல்வார்கள்.

உலக அழகி கிளியோபாட்ரா கருப்பு என்று சொல்வோர் உண்டு;இல்லை என்போரும் உண்டு .
காக்கும் கடவுள் திருமாலே கருப்பு நிறம்தான்.

ஆனால் அதைக் கருப்பு என்று சொல்லாமல் பச்சை என்றும்,இராமனை நீல வண்ணன் என்று சொல்வர்.

பச்சை மாமலைபோல் மேனி என்று பாடுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

மையோ,மரகதமோ,மழைமுகிலோ...ஐயோ என்று வர்ணிக்க முடியாமல் தவிக்கிறார் கம்பர்.

திருமால் படுத்துக் கிடப்பதனால் பாற்கடலே பச்சை நிறமாகி விட்டதாம்.

நாமும்தான் தினம் காக்கையைப் பார்க்கிறோம்.

ஆனால் பாரதி பார்க்கும்போது அவனுக்கு ........

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கருமை நிறம் தோன்றுகிறது.

காலா என்றால் எமனை விளிப்பது.

எவரேனும் எமனை விளிப்பரா?

காலனுக்கும் காலன் உண்டா?

அவன்தான் காலகாலன்.......சிவன்.

 மார்க்கண்டேயன் உயிரைக்கவர்ந்து செல்ல எமன் வந்தபோது,மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ள சிவன் தோன்றி எமனைக் காலால் உதைத்து சூலத்தை ஓங்குகிறார்

எமன் மன்னிப்பு வேண்டித் தப்பிக்கிறான்

காலனைக் காலால் உதைக்கும் துணிச்சல் சிவனைத்தவிர,இவனுக்கும் இருந்தது

பாரதி!

காலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்கிறான்.

சாவைக் கண்டு அஞ்சாத அத்துணிவு எல்லோருக்கும் வேண்டும்!

இறுதியாக,ஆனால் முதன்மையான ஒரு செய்தி

காலா என்பது சூப்பர் ஸ்டாரின்,ரஞ்சித் இயக்கும் படத்தின் தலைப்பு.

படம் இமாலய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.



புதன், மே 24, 2017

மந்திர உபதேசம்



மந்திரம் உண்டொன்று சொல்வேன்

மறுமையை நீக்கி இம்மைக்குச் சுகம் தரும்

ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும்

இதற்குப் பின்தான்.

சொல்வதற்கு எளிய மந்திரம்

பிறந்த குழந்தையும் சொல்லும் மந்திரம்

மூன்றெழுத்து மந்திரம்

“அம்மா”.

அழையுங்கள் நாவினிக்கும்

அவளுக்கும் நெஞ்சினிக்கும்.

ஓரன்னையின் பயணம்

இளம் தாய்

குழந்தைகள் கைபிடித்து

வாழ்க்கையெனும் பாதையில்

சில இடங்களில் பாதை கரடு முரடு

சில இடங்களில் முட்கள் அடர்ந்து

எங்காயினும் கால் நோவாமல் அழைத்துச் செல்கிறாள்.

சிகரங்களைக் கண்டு மலைக்காமல்

ஏறி உச்சி காணச் செய்கிறாள்

புயலைக் கண்டு நடுங்காமல்

எதிர்கொள்ளச் செய்கிறாள்.

காலங்கடந்தால்

முதுமையால் தொய்ந்த உடல்           

முன்பு போல் வழி நடத்த இயலாமல்

இப்போது குழந்தைகள் இல்லை

பெரியவர்கள்

வலிமை மிக்கவர்கள்.

தாய்க்கு ஆதாரமாய் நிற்பவர்கள்

ஒரு நாள் அவள் மறைகிறாள்

ஆயினும்

அவள் மறையவில்ல!

நம்மைச் சுற்றியிருக்கும் ஓசைகளில்

நாம் முகர்கின்ற நறு மணங்களில்

நமது சிரிப்பில்

நமது கண்ணீரில்

வாழ்கிறாள்.

அவள் வெறும் நினைவல்ல.

நம்முடன் கலந்திருக்கும் உணர்வு!

(அவள் ஒரு வரம்.இருக்கும்போது அலட்சியம் செய்து இல்லாதபோது ஏங்குபவர்கள்  பலர்.காலம் இன்னும் இருக்கிறது.அவள் காலடி தொழுங்கள்;கர்மினையும்)






செவ்வாய், மே 23, 2017

ரிவால்வர் ரீட்டா!


திருமண மண்டபம்.

உறவினர்களாலும் நண்பர்களாலும் நிறைந்திருக்கிறது.

திருமணமாகாத பல ஆண்களும் பெண்களும்  நமக்கு  ஒரு துணை இங்கு கிடைக்குமா எனக் கண்களை மேய விடுகிறார்கள்

குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

தாலி கட்டும் நேரம் வந்தாச்சு  என்று உரத்த குரல் எழும்புகிறது.

மாப்பிள்ளை தாலியைக் கையில் எடுக்கிறார்.

 சிலர் மேளக்காரரைப் பார்த்து ஒரு விரல்  எழுப்பிப் பயமுறுத்த,,அவர் பயந்து போய் வேக வேகமாகக் கெட்டி மேளம் வாசிக்க தொடங்குகிறார்..

 இதோ மாப்பிள்ளை   தாலி கட்டப் போகிறார்.

”நிறுத்துங்கள்”

கெட்டி மேளச் சத்தத்தையும் மீறி ஒரு பெண்ணின் குரல்...
.
அவள்..

மண மேடை யருகே கையில் துப்பாக்கியுடன்...

அவளை சுற்றி ஆறு பேர் கையில் துப்பாகியுடன்.

எல்லோரும் திகைக்கிறார்கள்.

அந்தப் பெண் பேசுகிறாள்”இதோ இந்த மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும் முருகன் என்னைக் காதலித்தான்.திருமணம செய்வதாக வாக்களித்தான்
ஆனால் இன்று என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டப் போகிறான்..,அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்”

உடன் நிற்கும் ஆண்களைப் பார்த்துக் கையசைக்கிறாள்.

அவர்களில் நால்வர் பாய்ந்து மேடை மீது ஏறி மாப்பிள்ளையை அமுக்கிப் பிடித்துத் தூக்கி மண்டப வாசலை நோக்கி நடக்கின்றனர் அப்பெண்ணும் மீதி இருவரும் துப்பாக்கியுடன் காவலாக உடன் செல்கின்றனர்.

வெளியில் நிற்கும் வேனில் ஏறி போய் விடுகின்றனர்.

எல்லோரது மனத்திலும் ஒரே கேள்வி.....

“யார் இந்த ரிவால்வர் ரீட்டா?”
..................................

எப்போதும் திரைப்படங்களில் முன்பு என்ன நடந்தது என்று(flash-back)
காட்டுவார்கள்.

ரிவால்வர் ரீட்டாவின் பெயர் வள்ளி

அவளுக்கும் முருகனுக்கும் எட்டு ஆண்டுகள் பழக்கம்.

முருகன் பெற்றோருக்குப் பயந்து அவர்கள் பார்த்த பெண்ணை மணக்கச் சம்மதிக்கிறான்

இப்போது மண்டபம்,ரீட்டா கடத்தல்.......

...........................

இந்த சினிமாவில் ஒரு flash-front...............

முருகனின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர்.

மணக்க இருந்த பெண்ணின் பெற்றோருக்கும் முருகனின் பெற்றோருக்கும்
வள்ளியின் தரப்பினருக்கும் பேச்சு வார்த்தை நடக்கிறது.

புகார் திரும்பபெறப் படுகிறது.....

“நிகழும் ஹேவிளம்பி ஆண்டு,வைகாசி மாதம்...நாள் திருவளர் செல்வன் முருகனுக்கும்,திருவளர் செல்வி வள்ளிக்கும் நடைபெற இருக்கும் திருமணத்துக்கு..............................”.

........................................................................................

செய்தி ஆதாரம்...இந்தியாவின் நேரங்கள்


திங்கள், மே 22, 2017

பார்த்து வாங்க வேண்டாமா?!

 சென்ற இடுகையை, “பார்த்து வாங்க வேண்டாமா?!” என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.

தனது பின்னூட்டத்தில் திரு பகவான் ஜி அவர்கள் “பார்த்து வாங்க வேண்டாமா” இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா எனக் கேட்டிருந்தார்.

கிடைத்தது தலைப்பு!

அதற்குத்தக எழுத வேண்டும்;அவ்வளவே.

இதோ பதிவு!

பகவான் ஜி கடையிலிருந்து வீட்டுக்கு வருகிறார்.

மனைவி கேட்கிறார்”என்ன காய் வாங்கி வந்தீங்க?”

”வெண்டைக்காய் ” பதில்.

பையிலிருப்பதைக்கீழே கொட்டி சோதித்துப் பார்க்கிறார் மனைவி.

“அய்யோ!எல்லாமே முத்தல்.பார்த்து வாங்க வேண்டாமா?

(அப்பா!தொடக்கத்திலேயே தலைப்பு வந்தாச்சு!)

இது ஒரு சிறு உதாரணம்.

எந்தப் பொருளுமே வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டும்.

அதன் குற்றம்,குறைகளைக் கவனிக்க வேண்டும்.

சட்டம் சொல்கிறது  caveat emptor"

அதாவது ”let the buyer beware”

வாங்குபவர் ஜாக்கிரதையாக இருக்கவும்!

ஒன்றை வாங்கும்போது அது எப்படி இருக்கிற.தோ அப்படியே வாங்குகிறோம்..”as is where is".

நாம அதை  ஏற்றுக்கொண்டு விட்டோம்.

பின்னர் வருந்தி என்ன பயன்.

வாங்கும்போதே.......பார்த்து வாங்க வேண்டாமா?

ஒரு பொருள் வாங்கும்போது விலை  அதிகமாக இருந்தாலும் உத்திரவாதம் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

இல்லையேல்  மறுநாளே அது  வேலை செய்யவில்லை என்றாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.

இன்னொரு  காட்சி

ஒருவர் மடிக்கணினி வாங்கக் கடைக்குப் போகிறார்.

விலை குறைவாக எதிர்பார்க்கிறார்.

கடைக்காரர் கொஞ்சம் பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்று நல்ல நிலையில் இருக்கிறது,விலை மலிவு என்று சொல்லிக் கொடுக்கிறார்.

அவரும் மகிழ்ச்சியுடன் வாங்கிப் போகிறார்

ஓரிரு நாட்களில் போலிஸ் வருகிறது

அவர் வாங்கிய கணினி  திருடப் பட்டது என்று கூறி கணினியைக் கைப்பற்றுகிறது.

இவர் என்ன செய்ய முடியும்/

கடைக்காரரைக் கேட்கலாம்.

கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம். வேறு எந்த உரிமையும் இவருக்கு இல்லை.

திருட்டுப் பொருளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது

அதன் உரிமை பறி கொடுத்தவருக்கு மட்டுமே

வாங்குபவர் ஜாக்கிரதை!

பார்த்து வாங்க வேண்டாமா?

இது போலவே  கிராஸிங் என்று காசோலையில் இரண்டு இனை கோடுகள் போடுவார்கள்

அதில் ஒரு வகை not negotiable crossing.

அத்தகைய காசோலை திருடப்பட்டதாக இருந்தால்,அதை நம்பிக்கையுடன் வாங்கியிருந்தாலும் அதற்கான உரிமை அதைத் திருடியவரிடமிருந்து பெற்றுக் கொண்டவருக்கு இல்லாமல் போகிறது.

இதைப் பற்றி சொல்வார்கள்” இது ஒரு திருடப்பட்ட பேனா அல்லது கைக்கடிகாரம் போன்றது” என்று.

காசு கொடுத்துப் பொருள் வாங்கும்போது வாங்குபவர்  கவனமாக, சாக்கிரதையாக இருத்தல் அவசியம்

இல்லையெனில் பின்னர் கேள்வி எழும்...........

“பார்த்து வாங்க வேண்டாமா?!”

டிஸ்கி: வெண்டைக்காயை நுனியை ஒடித்துப் பார்த்து வாங்க வேண்டும்.....அதற்காகக் கடைக்காரர் நம்  விரலை ஒடிக்காமல் இருந்தால்!




ஞாயிறு, மே 21, 2017

ஹாலிடே,ஜாலிடே!

ராமு அசாத்திய அறிவாளி!

ஒரு முறை நேர்முகத்  தேர்வொன்றுக்குப் போனான்.

தேர்வு நடத்தியவர் சொன்னார்”நான் சொல்லும் வார்த்தைகளுக்கெல்லாம் எதிர்ப்பதம் சொல்லுங்கள்...மேடு இன் இந்தியா”

ராமு “பள்ளம் அவுட் பாகிஸ்தான்”

”குட்!ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்களே”

ராமு”மோசம்.கொஞ்சம் மொக்கையா இல்லையே”

“போதும்.ரிலாக்ஸ் ஆகிக்கீங்க”

ராமு”பத்தாது.டென்சன் ஆகாதீங்க”

அதிகாரி கோபத்துடன் சொன்னார்

“நீங்க செலெக்ட் ஆகலை”

ராமு சிரித்துக் கொண்டே”நாங்க செலக்ட் ஆகிட்டோம்”

“முட்டாள்!இடத்தைக் காலி பண்ணு.”

ராமு”அறிவாளி! இடத்தை நிரப்பு”

”கடவுளே!காப்பாத்து”

ராமு”சாத்தானே கைவிடு”

:))  :))  :))  :))




















சனி, மே 20, 2017

என்ன நடந்தது?...

இன்றைய பதிவுக்கு முன் ஒரு இடைச் செருகல்.

  பதிவு நேற்றே எழுதியிருக்க வேண்டும்.

நேற்று காலை

11  மணி அளவில் வெறுந்தரையில் ஹாயாகப் படுத்தேன். கண்ணாடி  அணிந்தபடி......


பின் அதைக் கழட்டி படுத்தபடியே அருகில் இருந்த நாற்காலி மீது வைத்தேன்.அப்போது ஓர் எண்ணம் “யாராவது  வந்து கவனிக்காமல் உட்கார்ந்தால் என்ன ஆகும்?’

சிறிது நேரம் கழித்து ஒரு தொலை பேசி அழைப்பு.

தொலைபேசியை எடுத்து அருகில் வைத்துக் கொள்ள மறந்திருந்தேன்.

எழுந்தேன்

தொலைபேசியை எடுத்தேன்

பேசிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தேன்

....பட்டக்   .......

சப்தம்

கண்ணாடியில் லென்ஸ் இரண்டும்  தெறித்து வெளியே வந்து விட்டன.

இனிமேல் என்னத்த பாத்து,என்னத எழுதி.............

மாலை கடைக்குச் சென்று சரி செய்யும் வரை.

.மாலை முதல் வேலையாக டைடன் சென்று  சரிசெய்தேன்.

அதன் பின்னரே பழங்கள் வாங்கச் சென்றேன்.

பார்த்து வாங்க வேண்டாமா!


வியாழன், மே 18, 2017

எய்தவன்!

ஒரு பழமொழி....

எய்தவன்  இருக்க அம்பை நோவானேன்?

எந்த அம்பும் தானாகவே வில்லிலிருந்து புறப்பட்டு வந்து தாக்காது

வில்லில் நாணேற்றி அம்பை வைத்து எய்வதற்கு ஒருவன் தேவை.

அவன் எங்கு குறி பார்த்து எய்கிறானோ அங்கு சென்று தாக்கும் அந்த அம்பின் மீது குற்றமிலை.

அம்பினால் தாக்கியவன் மீதே குற்றம்.

புதன், மே 17, 2017

இசை

”தன்னில் இசை இல்லாத,ஒருமித்த இனிய ஓசைகளினால் உணர்ச்சிஅடையாத,ஒருமனிதன்,துரோகி,தந்திரக்காரன் ,கெட்டவன்”(செகப்பிரியரின் வெனிஸ் வர்த்தகனிலிருந்து ஒரு மோசமான மொழி பெயர்ப்பு!)

மனித வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.பிறப்பு முதல் இறப்பு வரை நம் எல்லா விசேடங்களிலும்,இசை கலந்திருக்கிறது.தாலாட்டு முதல் ஒப்பாரி வரை.

இசையே பிடிக்காதவர்கள் மிகச் சிலரே இருப்பர்.சிலருக்கு கர்னாடக இசை,சிலருக்கு இந்துஸ்தானி இசை,சிலருக்கு மேற்கத்திய இசை,சிலருக்கு திரை இசை,சிலருக்கு நாட்டுப் பாடல் என்று ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்.

எனக்குக் கர்னாடக இசை.என் இசை ஆர்வத்துக்குத் தீனி அளித்தவர்கள் இருவர்.

ஒருவர் நண்பர்  பார்த்தசாரதி.என் தளத்தில் அவரது பல படைப்புகள் வெளி வந்துள்ளன.வானொலியிலோ,தொலைக்காட்சியிலோ நல்ல கச்சேரி இருந்தால் உடன் தொலைபேசுவார்.இசை விழா நேரத்தில் அவர் மியூசிக் அகாடமிக்கும் நான் நாரத கான சபாவுக்கும் செல்வது வழக்கம்.தினமும் கண்டிப்பாகக் கச்சேரி  பற்றிய உரையாடல்கள் நிகழும்..

அவர் சென்ற டிசம்பர் மாதம் காலமானார்.

நானும் இப்போதெல்லாம் பல காரணங்களால் கச்சேரி கேட்கும் மன நிலையில் இல்லை.

மற்றவர் எங்கள் வங்கியில் பணி புரிந்து என் போலவே விருப்ப ஓய்வு பெற்றவ பெண்மணி.பணியில் இருந்தபோது பழக்கமில்லை .பின்னாளில்,யாரோ சொல்லி சில ஆலோசனைகளுக்காக என்ன நாடி வந்தார்.நான் சொன்னவை சரியாக நடந்ததால் நம்பிக்கை மிகக் கொண்டார்.

 ஒரு முறை அவராகவே கச்சேரிக்கெல்லாம் போவீர்களா எனக் கேட்டு நாரதகான சபாவில் இசை விழாவின்போது சீசன் டிக்கட் கொடுத்தார்.ஆறாவது வரிசையில் இருக்கை.தொடர்ந்து சில ஆண்டுகள் கொடுத்தார்.பின்னர் என்னால் போக இயலாத நிலை உருவான போது வேண்டாம் எனச் சொல்லி விட்டேன்

 இன்று அவரது பையன் தொலைபேசி,நேற்று மதியம் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலைச் சொன்னான்

என் இசை ஆர்வத்துக்குத் துணை நின்ற இன்னொருவரும் மறைந்தார்.,

என் காதுகளில் இப்போது ஒலிப்பது முகாரியும்,சுபபந்துவராளியும் மட்டுமே!

செவ்வாய், மே 16, 2017

ப.க.பு.மொ.4.....பொற்கைப் பாண்டியன்

பாண்டிய மன்னன் வழக்கம் போல் இரவுக்காவலின் பொருட்டு வீதி வலம் வந்து கொண்டிருந்தான்.

அப்போது ஒரு வீட்டிலிருந்து கேட்ட குரல்கள் அவன் கவனத்தை ஈர்த்தன.

அந்த வீட்டுத் தலைவன் வியாபார நிமித்தம் வெளியூர் செல்வதை மனைவியிடம் சொல்ல அவள் திருடர் பயம் இருக்கிறதே என்று கவலைப்பட,அவன் பாண்டியனின் செங்கோல் காக்கும் என்றுசொன்னான்.

மன்னன், மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக மகிழ்ந்து அந்த வீதியை தினம் இரவில் காக்க முடிவு செய்தான்.

சில நாட்கள் சென்றன.வழக்கம் போல் வீதி வலம் வருகையில் அந்தவீட்டிலிருந்து பேச்சுக் குரல் கேட்டது.மன்னன் ஐயமுற்று வீட்டுக்கதவைத் தட்டியபின்தான் உணர்ந்தான்,கேட்ட,கேட்கும் குரல் வீட்டுத்தலைவனுடையது என்று.தான் தட்டியது அவனுக்கு ஐயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால்,அத் தெருவில் இருந்த அனைத்து வீடுகளின் கதவையும் தட்டிச் சென்றான் மன்னன்.

மறு நாள்...

அரசவையில் அமைச்சர்,பிரதானிகளுடன் அமர்ந்திருந்தான் பாண்டியன்.அப்போது அந்த வீதி மக்கள் எல்லோரும் வந்து முதல் நாள்யாரோ கதவைத் தட்டிய செய்தியைச் சொல்லி முறையிட்டனர்.

மன்னன் சொன்னான்”அவனைப் பிடித்து விடுவேன் விரைவில்.என்ன தண்டனை என்றுநீங்கள் சொல்லுங்கள்”

அவர்கள் சொன்னார்கள்”அவன் கையை வெட்ட வேண்டும்”

நிகழ்பவற்றைக் கவனித்து வந்தார் அமைச்சர்.அரசனின் முகமும் அவன் பேச்சும் அவருக்கு மன்னன் இதில் தொடர்புடையவனாக இருப்பான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தன

ஆம்.அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்!

அமைச்சர் எழுந்தார்”பொறுங்கள் மன்னா.எல்லார் வீட்டுக் கதவும் தட்டப்பட்டது எனில் எதோ காரணம் இருக்க வேண்டும்.எனவே தட்டியவன் பிடி பட்டவுடன்,காரணத்தை அறிந்து,அதன்பின் அதற்கேற்பவே தண்டனை வழங்க வேண்டும்.அவ்வாறின்றி தண்டனை வழங்கலாகாது” என்று சொல்லி மக்களிடமும் கேட்க அவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அமைச்சர் மன்னனிடம் “மன்னா!குற்றவாளியை நீங்கள் அறிவீர்கள் எனில்,விரைவில் வரச் செய்து விசாரிக்க வேண்டும்”.

“மன்னன் எழுந்தான்.ஆசனம் விட்டுக் கீழே வந்தான்”அமைச்சரே,பிரதானிகளே,குடி மக்களே நானே குற்றவாளி”என்றான். அமைச்சர் விவரம் கேட்க நடந்ததை எடுத்துரைத்தான்.

அமைச்சர் மக்களைக்கேட்டார். மக்கள் சொன்னார்கள் மன்னன் செய்தது குற்றமல்ல என்று. ஆனால்,மன்னன் தன் அவசரச் செயலுக்குத் தான் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என சொன்னான்.

அமைச்சர் சொன்னார் ”மன்னா!உங்கள் செயல் அச்சத்தையும் கலக்கத்தையும் அம்மக்களுக்கு அளித்தது என்பது உண்மை.எனவே அவர்களுக்கு அதற்காக ஈடு தர வேண்டும்.நீங்கள் அவசரப்பட்டதால் ஏற்பட்ட இக்குழப்பத்துக்குத் தண்டனை,அந்த வீதி வீடு ஒவ்வொன்றுக்கும் ஒரு பொற்கை செய்து மன்னர் வழங்க வேண்டும்”

மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“பொற்கை அளித்தபாண்டியன்,பொற்கைப் பாண்டியன் வாழ்க எனக் குரல் எழுப்பினர்.

டிஸ்கி:எல்லா வீட்டுக் கதவையும் தட்டினான் என்றால் ஒரு வீட்டிலிருந்து கூடவா வெளியே வந்து பார்க்கவில்லை?அவ்வாறு ஒரு வீட்டிலிருந்து பார்த்திருந்தாலும் ,அடுத்த வீடுகளில் தட்டுபவனைப் பார்த்திருக்கலாமே.?பாண்டியன் ஆட்சியில் இரவு வெளி வர அவ்வளவு அச்சமா மக்களுக்கு...?

ஞாயிறு, மே 14, 2017

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.


தாய் எனும் தெய்வம்,வணங்குவோம்,போற்றுவோம்,பாதுகாப்போம்.

வயதான காலத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது அன்பு,பரிவு ,பாசம் இவைதாம்.

இதைத் தர முடியாதா பிள்ளைகளால்?!

அன்னையர் தின வாழ்த்துகள்!

சனி, மே 13, 2017

ப.க.பு.மொ. 3....பாரியும் முல்லையும்

காட்டு வழியில் ரதத்தை வேகமாகச் செலுத்தி வந்த பாரி திடீரென்று நிறுத்தினான்.

உடன் இருந்த அங்கவை,சங்கவை இருவரும் ஒருமித்த குரலில் கேட்டனர்”ஏன் தந்தையே ரதத்தை நிறுத்தி விட்டீர்கள்?”

பாரி”அதோ பாருங்கள்” என்று சுட்டிக்காட்டினான்.

அவன் காட்டிய இடத்தில் பசுமையான முல்லைக் கொடி ஒன்று பற்றிப் படர ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருந்தது.

பாவம் தந்தையே என்றனர் மகளிர்.

”அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும்.அருகில்,கொம்பு ஏதாவது இருக்கிறதா பார்க்கலாம்”என்றான் பாரி.

மூவரும் ரதத்திலிருந்து இறங்கித் தேடினர்.அங்கு ஆதாரமாக வைக்கக் கூடிய கொம்பு எதுவும் கிடைக்கவில்லை.

பாரி யோசித்தான்.சொன்னான்”நம் ரதத்தின் மேல் அக்கொடியை படர விட்டு விட்டு நாம் அரண்மனை திரும்பி ஆட்களை அனுப்பிப் பந்தல் அமைத்து விட்டு ரதத்தை எடுத்து வரச் செய்யலாம்.”

அங்கவை சொன்னாள்”தந்தையே!இங்கிருந்து அரண்மனை பத்து காத தூரமிருக்கும்.நாம் நடந்து செல்வது சாத்தியமல்ல.ஒன்று செய்யலாம்.நாங்கள் இருவரும் கொடியை எங்கள் மேல் படர விட்டு நிற்கிறோம்.நீங்கள் சென்று விரைவில் ஆட்களுடன் திரும்பி வாருங்கள்”

பாரி சிரித்தான்”ஒரு கொடிக்கு இரு கொடிகள் கொம்பாவதா?நான் நிற்கிறேன்.நீங்கள் என்னிலும் விரைவாக ரதம் ஓட்டுவீர்கள்.சென்று வாருங்கள்”

அவர்கள் மின்னலெனப் புறப்பட்டனர்


முல்லைக் கொடிக்குத் தானே கொழு கொம்பாகி நின்றான் பாரி!

வெள்ளி, மே 12, 2017

வீரம்+ விவேகம்= அஜித்

வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்;விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்........(பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்)

மனத்தில் அச்சம் நிறைந்து,ஏதாவது சால்ஜாப்புச் சொல்லிக் கொண்டு எதிர்க்குரல் எழுப்பாமல் இருப்பது வீரம் அல்ல;கோழைத்தனம்.

சிறந்த வீரனாயினும்,எதிரியின் வலிமை,காலம் ,இடம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மோதுவது வீரமல்ல,முரட்டுத்தனம்.

ராஜாராணி படத்தில்(பழைய படம்) சாக்ரடீஸ் நாடகத்தில் சாக்ரடீஸ்சொல்லும் அறிவுரை,முக்கியமானது.

“வீரம் விலைபோகாது,விவேகம் துணைக்கு வராவிட்டால்.தீட்டிய வாளும்,தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது வீரர்களே,இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்”


வீரம் என்பது உடல் வலு மட்டும்தானா.சண்டையிட்டு வெல்வது மட்டும்தானா?இல்லை.

எங்கு குரல் எழுப்ப வேண்டுமோ அங்கு அச்சமின்றிக் குரல் எழுப்புவதும் வீரம்.அதற்கு உடல் வலிமை தேவையில்லை..மன வலிமை போதும்.



அச்சத்தை தொலைத்தால்தான்,வீரம் பிறக்கும்.
ஆனால் எங்கு  அச்சப் பட வேண்டுமோ அங்கு அஞ்சுவது  விவேகம்.

என்னவேதான் வள்ளுவர் சொன்னார்

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
 அஞ்சல் அறிவார் தொழில்”

என்று.

வீரமும் விவேகமும் உள்ள ராசாக்கள்தான் அந்தக் காலத்தில் வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார்கள்! 

.
சூழ்நிலைகள் மீதும் தன் உடற்குறைகள் மீதும் பழி போட்டுத் தப்பிக்காமல்,இடர்ப்பாடுகள் வென்று சாதனை படைக்கும் எவருமே வீரர்தான்.

அறிவு,விவேகம் இணைந்தால்தான்,வீரம் வெற்றி பெறும்.

வீரம்,விவேகம் இரண்டும் இணைந்தவன்,வெல்லப்பட முடியாதவன்....அஜித்(வட மொழியில்)




வியாழன், மே 11, 2017

பெண்மணி அவள் கண்மணி!


மரகதம்!பீரோவெல்லாம் நல்லாப்பூட்டி ஒருதடவைக்கு ரெண்டு தடவையாச் செக் பண்ணிடு

எல்லாம் பண்ணிட்டேன் .நீங்க கவலைப் படாமல் இருங்க.”’

எப்படிடீ முடியும்?”20 பவுன் நகை உள்ள இருக்கே.சனியன் பிடிச்ச லாக்கரும் கிடைக்க மாட்டேங்குது.”

எல்லாம் பத்திரமா இருக்கும்

இல்லடி.இந்த முத்து வேற கடன் வாங்கின 2 லட்சத்தை நேத்து ராத்திரித் திருப்பிக் குடுத்துத் தொலைச்சிட்டான்.அது வேற வீட்டில இருக்கே

நான் பாத்துக்கறேன்.பயப்படாதீங்க

எனக்கென்னவோ திக்கு திக்குன்னுதான் இருக்கு

கனவனும்மனைவியும் வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு செல்கின்றனர்.

புதன், மே 10, 2017

ப.க.பு.மொ. 2....சிபிச் சக்கரவர்த்தி

உப்பரிகையில் அமர்ந்து ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார் சிபி.

இன்னும் சில தொடுகைகளே பாக்கி;ஓவியம் முழுமையடைந்து விடும்.

அப்போது பயத்துடன் குரல் எழுப்பியவாறே அவர் மடியில் வந்து விழுந்தது ஒரு வெண் புறா.

அதைத் துரத்தி வந்த  பருந்தொன்று மாடத்தின் சுவரில் அமர்ந்தது.

புறாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

சக்கரவர்த்தி சிபி அதைத் தடவிக் கொடுத்தார்.

திங்கள், மே 08, 2017

பழைய கள்,புதிய மொந்தை!-1..அவ்வையும் அதியனும்

”மன்னா!அங்கே பாருங்கள்.”

மந்திரி காட்டிய இடத்தைப் பார்த்தான் அதியமான்.

இருவரும் சில வீரர்களுடன் குதிரையில் சென்று கொண்டிருந்தனர்

“நெல்லி மரம்.இதில் என்ன புதிதாக?”மன்னன் கேட்டான்.

”அதோ உச்சியில் ஒரே ஒரு கனி இருக்கிறது பாருங்கள்.அது அபூர்வக் கனி.அதை உண்பவர் பல்லாண்டு நோயின்றி வாழலாம்.”

மன்னன் வீரர்களை அனுப்பி அதைப் பறித்து வரச் செய்தான்.

பட்டுத் துண்டில் பொதிந்து கவனமாக எடுத்துச் சென்றான்.

மந்திரி யோசித்தார்”யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ ஆசை இல்லை?”

அரன்மனையை அடைந்தனர்.

தகவல் கிடைத்தது தமிழ் மூதாட்டி அவ்வையார் காத்திருப்பதாக.

வேகமாகச் சென்றான் ;வணங்கினான்.

”தாங்கள் வந்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது அவ்வை அவர்களே.”

சிறிது உரையாடலுக்குப் பின் அதியமான் நெல்லிக்கனியை எடுத்தான்.

அவ்வையிடம் கொடுத்து இதைத் தாங்கள் உண்ண வேண்டும் என்றான்.

அவ்வை யோசித்தார்.சாதாரணக் கனி என்றால் இவ்வளவுக் கவனமாகக் கொண்டு வந்திருக்க மாட்டான்.கனிவகைகள் பலவற்றை அளித்து உண்ணச் சொல்லும் மன்னன் ஒரு சிறு நெல்லிக்கனியைத் தருகிறான் என்றால் அதில் ஏதோ சிறப்பு இருக்க வேண்டும்.

கேட்டாள் மன்னனிடம்.

அவன் மழுப்பினான்.

வற்புறுத்திக் கேட்கையில் மந்திரி சொன்னார் அதன் மகத்துவம்.

வியந்தாள் அவ்வை மன்னனின் மாண்பு கண்டு.

அந்நேரம் இளவரசன்,சிறுவன் அங்கு வந்தான்

”வணக்கம் அவ்வைப்பாட்டியே”

வணங்கிய பின் தந்தையின் அருகில் சென்று நின்றான்.

சிந்தித்தாள் அவ்வை.

“மன்னா.உன் மகன் மிகுந்த அறிவுக்கூர்மையும் ஆற்றலும் உள்ளவன்.உனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்று உன்னிலும் சிறப்பாகச் செயலாற்ற வல்லவன்.அவன் பல்லாண்டு வாழ்ந்து நாடு செழிக்க வேண்டும் இக்கனியை அவன் உண்பதே சாலச் சிறந்தது.”

மந்திரி ஆமோதித்தார்;மன்னனும் ஏற்றுக்கொண்டான்.

கனியை இளவரசன் உண்டான்!